புதுடில்லி, செப்.12- இந்தியாவில் கடந்த 2 ஆண்டுகளில் 30 பேருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதிசெய்யப்பட்டதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளில் வனப்பகுதியில் உள்ள குரங்குகளில் இருந்து குரங்கு அம்மை பரவியது. இந்த நோய் பாதித்த மனிதர்களின் உமிழ்நீர், சளி மூலமாக மற்றவர்களுக்கும் பரவுகிறது. கரோனா போலவே, குரங்கு அம்மைபாதித்தவர்க ளையும் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பது அவசியம்.
வெளிநாட்டில் இருந்து திரும்பிய ஒரு வாலிபருக்கு நேற்று முன்தினம் (10.9.2024) குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டது.
ஆப்பிரிக்க கண்டத்தை தாண்டி, பல நாடுகளிலும் குரங்கு அம்மை பரவியதால். கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி. குரங்கு அம்மையை பன்னாட்டளவில் கவலை ஏற்படுத்தக் கூடிய பொது சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது.
30 பேருக்கு தொற்று
அந்த அறிவிப்புக்கு பிறகு, இந்தியாவில் இதுவரை 30 பேருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஒன்றிய சுகாதார அமைச்சகம் கூறியிருப்பதாவது:-
உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு வெளியான 2022ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதியில் இருந்து இந்தியாவில் 30 பேருக்கு குரங்கு அம்மை பாதித்துள்ளது.
229 பேர் பலி
உலக சுகாதார அமைப்பின் கணக்குப் படி, 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து கடந்த ஜூலை 31ஆம் தேதி வரை 121 நாடுகளில் மொத்தம் 1 லட்சத்து 3 ஆயிரத்து 48 பேருக்கு குரங்கு அம்மை தாக்கி உள்ளது. 229 பேர் பலி யாகி உள்ளனர்.
கடந்த 1ஆம் தேதி நிலவரப்படி, 15 ஆப்பிரிக்க நாடுகளில் 3 ஆயிரத்து 900 பேருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. காங்கோ, புருண்டி, நைஜீரியா ஆகிய ஆப்பிரிக்க நாடுகளில் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
– இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.