சென்னை, செப். 9- தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கான பொதுத் தேர்வானது மார்ச் மாதத்தில் தொடங்கி ஏப்ரல் மாதத்தில் நிறைவடைகிறது. இதில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 01ஆம் தேதி முதல் மார்ச் 22 ஆம் தேதி வரையிலும், 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 4ஆம் தேதி முதல் மார்ச் 25 ஆம் தேதி வரையிலும் மற்றும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 26ஆம் தேதி முதல் ஏப்ரல் 8 ஆம் தேதி வரையிலும் நடைபெற உள்ளது.
பொதுத்தேர்வு எழுதும் மாண வர்கள் தேர்வு நேரங்களில் ஏற்படும் மன அழுத்தத்திலிருந்து தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ள மனநல மருத்துவர் பேராசிரியர் மருத்துவர் கண்ணபிரான் எளிய வழிமுறைகளை கூறியுள்ளார் அவற்றைப் பின்பற்றி மாணவர்கள் பயன்பெற வேண்டும் என கூறும் எளிய வழிமுறைகைளைக் காணலாம்.
பொதுத்தேர்வு எழுத உள்ள 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வு மீதான அச்சம், கலக்கமும் இருக்கும். இந்த அச்சத்தை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் நீங்கள் படித்தது அனைத்தும் மறந்து விடும். எனவே அச்சத்தை முதலில் துடைத்தெறியுங்கள்.
இதற்கு முன்னர் பள்ளிகளில் நடைபெற்ற பருவ தேர்வுகளிலும் திருப்புதல் தேர்வுகளிலும் நீங்கள் பெற்ற மதிப்பெண்ணை விட அதிகம் பெற வேண்டுமெனில், நன்றாக சாப்பிட்டு, நன்றாக தூங்கி தேர்வுக்கு சென்றீர்கள் என்றால் நல்ல மனநிலையில் உற்சாகமாக தேர்வு எழுதுவது சுலபமாக இருக்கும்.
அதேபோல் கேள்வித்தாளைப் பார்த்தவுடன் பதற்றம் அடையாமல் இருக்க வேண்டியது மிக அவசியம். முதலில் கேள்விகளை படித்துக் கொள்வதற்காக ஒரு நேரத்தை ஒதுக்கி கொள்ளுங்கள்.
அய்ந்து முதல் பத்து நிமிடங்கள் ஒதுக்குங்கள். கேள்விகளை சரியாக புரிந்து கொண்டு என்ன பதில் அளிக்க போகிறீர்கள் என்று முடிவு செய்துகொண்டு அதற்குப் பிறகு தொடருங்கள்.
முன்னதாகவே நீங்கள் ஒரு கேள்விக்கு எவ்வளவு நேரம் என்று ஒதுக்கி கொள்ளுங்கள். உங்களுக்கு தெரியும் மூன்று மணி நேரம் தேர்வு எழுத போகிறீர்கள். எத்தனை வினாக்கள் இருக்கும் என்பது உங்களுக்கு தெரியும். ஒரு கேள்விக்கு எவ்வளவு நேரம் பதில் எழுத வேண்டும் என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள்.
அதன்படி, எழுதுவதை நேரமில்லாமல் போவது இல்லாமல் இருக்கும்.
மேலும் என்ன கேள்வி கேட்கப் பட்டுள்ளது என்பதை அதற்கு தேவையான பதிலை தெளிவாக எழுதுவது நல்லது. தேவையில்லாத வினாக்களை தேர்வு செய்து பதில் அளிப்பது நேரத்தை வீணடிக்கும். பெற்றோர்கள் மாணவர்களிடம் எதிர்மறையான வார்த்தைகளை சொல்லாமல் இருப்பது மாணவர் களின் மனநலத்தை பலப்படுத்தும் எனக் கூறினார்.