சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பாலியல் வன்கொடுமை தடுப்பு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் மறுப்பு
கொல்கத்தா, செப். 9- மேற்குவங்க சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பாலியல் வன்கொடுமை தடுப்பு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் மறுத்த தால் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன் கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை அடுத்து, மாநிலத்தில் பெண்களின் பாதுகாப்பு குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன. இதுதொடர்பாக மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
மம்தா தலைமையிலான மாநில அரசு கடந்த 3ஆம் தேதி மேற்கு வங்க சட்டமன்றத்தில் பாலியல் வன்கொடுமை தடுப்பு மசோதாவை தாக்கல் செய்தது.
இந்த மசோதாவின்படி, பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணையை 21 நாட்களில் காவல் துறையினர் முடிக்க வேண்டும். சட்டமன்றத்தில் மசோதா நிறை வேற்றப்பட்டதையடுத்து, மசோதா ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆளுநரின் ஒப்புதலுக்கு பின் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படும். குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு பிறகே இந்த மசோதா சட்டமாக மாற்றப்படும்.
இந்த மசோதா குறித்து மாநில ஆளுநர் ஆனந்த் போஸ் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘மேற்குவங்க அரசு கொண்டுவந்துள்ள பாலி யல் வன்கொடுமை தடுப்பு மசோ தாவானது, ஆந்திரா, மகாராட்டிரா, அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களின் மசோதாக்களின் நகல். இது போன்ற மசோதாக்கள் ஏற்கெனவே குடியரசுத் தலைவரிடம் நிலுவையில் உள்ளன. மக்களை ஏமாற்றும் போராட்டங்களில் மம்தா பங்கேற்கிறார். மாநில அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பல மசோதாக்களுக்கு தொழில்நுட்ப அறிக்கைகளை ஆளுநர் மாளிகைக்கு அனுப்பவில்லை. இதனால் இந்த மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. இதற்கு ஆளுநர் மாளிகைக்கு மீது குற்றம் சாட்டுவது சரியல்ல. தொழில்நுட்ப அறிக்கை இல்லாமல் குறிப்பிட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க முடியாது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
மேற்குவங்க ஆளுநர் மாளிகையின் மேற்கண்ட அறிக்கையால் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.