வ.உ.சிதம்பரனாரை கப்பலோட்டிய தமிழர் விடுதலைப் போராளி என்று அறிந்திருப்பதைவிடவும் குறைவாகவே அவரை ஒரு தமிழ்ப் பணியாளராக தமிழுலகம் அறிந்து வைத்துள்ளது.
திருவள்ளுவரை வ.உ.சி. மிகவும் நேசித்தார். நேர்மையுடனும் ஒழுக்கத்துடனும் மக்கள் வாழ் வதற்கான முறைகளைச் சொன்னவர் என்பது திருவள்ளுவர் குறித்த அவரது மதிப்பீடாகும்.
வ.உ.சியின் நேசத்திற்கு உகந்த நூல்களில் முதலிடம் திருக்குறளுக்கு உண்டு. அதை மிகவும் நேசித்தார். மக்களுக்குப் பயன் தரக்கூடிய கருத்துக்கள் திருக்குறளில் உள்ளதாக அவர் நம்பினார். வ.உ.சியின் இந்த நம்பிக்கை மிகவும் ஆழமானது.
“அது மக்கள் அடைவதற்குரிய அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு பொருள்களையும், அவற்றை அடையும் நெறிகளையும் ஞாயிறு போல விளக்குகின்ற ஓர் அருமையான நூல்” என்கிறார்.
அவரறிந்த அரசியல் பார்வையின்படி நாட்டு மக்களுக்கான அரசியல் வேலைகளில் அவர் உண்மை யான அர்ப்பணிப்புடன் ஈடுபட்டிருந்தார். எனவே, மக்களுக்குப் பயன்படக்கூடிய அவசியமான நூல் என அவர் கருதிய திருக்குறளின் மீது நேசம் இருந்ததில் வியப்பு எதுவும் இருப்பதற்கில்லை.
பல உரைகள் இருந்தபோதிலும் வ.உ.சியும் திருக்குறளுக்கு உரை எழுதினார். இது எப்படி நடந்தது? திருக்குறளைப் புரிந்து கொள்வதில் சில பிரச்சினைகள் இருப்பதாக அவர் கருதினார். புரிந்து கொள்வதில் எளிமை வேண்டும் என்பதை மட்டும் அவர் பிரச்சினையாக எண்ணவில்லை. தவறில்லாமல் புரிந்து கொள்ள வேண்டும் என்பதையும் அவர் முக்கியப் பிரச்சினையாக எண்ணியிருந்தார்
“திருக்குறளை நேரிய பொருளோடும், பிழைகள் இன்றியும் தமிழ் மக்கள் எளிதில் கற்கும்படியாக அதற்கு ஓர் உரை இயற்றப் பல ஆண்டுகளுக்கு முன் நினைத்தேன்” என உரை எழுதவேண்டும் என அவர் எண்ணியதற்கான காரணத்தைக் குறிப்பிடுகிறார்.
திருக்குறளை வ.உ.சி. வாசிக்கத் தொடங்கியது பற்றி அவர் குறிப்பிடும்போது, “அப்பதின்மர் உரைகளில் தற்காலம் தமிழ்நாட்டில் பயின்று வழங்குவது பரிமேலழகருரை ஒன்றே. அவ்வுரையைச் சில ஆண்டுகளுக்கு முன்னர் யான் படிக்கத் தொடங்கினேன்.”
எளிதினில் கிடைத்த உரையான பரிமேலழகரின் உரையினை வாசித்ததாகக் குறிப்பிடுகிறார். பரிமேலழகரைப் படிக்கத் தொடங்கிய அவருக்கு அவ்வுரையானது மனநிறைவைத் தரவில்லை. மாறாக, அவருக்கு சில சந்தேகங்கள் உண்டாகின. இதை, “அப்பொழுது மற்றைய ஒன்பதின்மர் உரைகளையும் பார்க்க வேண்டுமென்னும் அவா எனக்கு உண்டாயிற்று” என அவர் கூறுவதிலிருந்து புரிந்து கொள்ளலாம். மேலும், “அது முதல், தமிழ் நூல்கள் இருக்கும் இடங்களில் அவற்றைத் தேடவும் தேடுவிக்கவும் முயன்றேன்” எனக் கூறுவதிலிருந்து பரிமேலழகரின் உரை குறித்த அவரது அதிருப்தி அதிகமானதாகவே இருந்திருக்கிறது என்பதையும் அறியலாம்.
பரிமேலழகர் உரை மற்றும் மணக்குடவர் உரைகளைத் தவிர வேறு மூன்று உரைகள் கையெழுத்துப் பிரதிகளாகத் தமிழ்நாட்டில் சென்னை அரசாங்கக் கையெழுத்துப் புத்தக சாலை உள்ளிட்ட சில இடங்களில் காணப்படுவதாக அவர் குறிப்பிடுகின்றார். அவற்றையும் வாசிக்கிறார். இம்மூன்றும் யாருடைய உரைகள்? “அவற்றிற் காணப்படும் சமயக் கோட்பாடு, தமிழ் நடை முதலியவற்றைப் பார்த்து, யான் அவரைத் தருமர் உரை, தாமத்தர் உரை, நச்சர் உரை எனக் கருதுகிறேன். அவை முறையே அவ்வுரையாசிரியர் களால் இயற்றப்பெற்றவை என்பதற்கு வேறு சான்று ஒன்றும் இதுகாறும் கிடைத்திலது” என்று யூகிக்கிறார்.
திருக்குறளைப் படித்து அதன்படி நடந்து, வாழ்க்கையில் மேம்படவேண்டும் என்பதிலிருந்து திருக்குறளை தமிழ் மக்கள் இலக்கியமாகவே அவர் கருதியுள்ளார் என்பது தெரிகிறது. அவ்வாறு கருதியதால் தான் அதைத் தமிழ் மக்கள் அனைவரும் தெளிவாகக் கற்றுணர்ந்து கொள்வதோடு, வாழ்க்கையிலும் அதைக் கடைப்பிடித்து ஒழுக வேண்டும் என அவர் கருதி யுள்ளார். அதனாலேயே பரிமேலழகரின் உரையினை விடச் சிறந்ததாக அவர் கருதிய மணக்குடவர் உரையினை அவர் பதிப்பித்துள்ளார். திருக்குறள் மக்கள் அனைவரிடமும் போய்ச் சேரவேண்டுமென்பதே அவர் மணக்குடவர் உரையினைப் பதிப்பித்ததின் நோக்கமாக இருந்துள்ளது.
“திருக்குறளை நேரிய பொருளோடும் பிழைகள் இன்றியும் தமிழ் மக்கள் எளிதில் கற்கும்படியாக அதற்கு ஓர் உரை இயற்றப் பல ஆண்டுகளுக்கு முன் நினைத்தேன்” எனத் தாமே ஒரு உரை எழுதுவதுதான் அதற்கான வழி எனும் முடிவுக்கு வருகிறார்.
அப்போது பலரது கைகளில் இருந்த பரிமேலழகர் உரை முழுக்க முழுக்க பழைமைவாத கருத்துக்களை தாங்கி வந்ததால் அப்பரிமேலழகர் உரையை எடுத்து எழுதியோரால் நேர்ந்த தவறுகளால் திருக்குறள் தவறாக மக்களிடையே செல்கிறதே என யான் கருதியதே” எனக் கூறுகிறார்.
தந்தை பெரியாரின் நெருங்கிய நண்பரான வ.உ.சிதம்பரனார் சுயமரியாதை இயக்க மாநாடு களிலும் கலந்து கொண்டு பேசியுள்ளார்.