மும்பை,ஆக.30- எழுத்தாளரும். அரசமைப்புச் சட்ட நிபுணரும், உச்சநீதிமன்ற மேனாள் வழக்குரைஞருமான ஏ.ஜி.நூரானி (வயது 94) மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று (29.8.2024) காலமானார்.
மும்பையில் 1930, செப்டம்பர் 16-ஆம் தேதி பிறந்த அப்துல் கஃபூர் மஜீத் நூரானி மும்பை அரசு சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை நிறைவு செய்தார். அதன்பிறகு மும்பை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞராக பணியாற்றி வந்தார்.
‘காஷ்மீர் விவகாரம் 1947-2012’, ‘சட்டப்பிரிவு 370: ஜம்மு-காஷ்மீரின் அரசமைப்பு வரலாறு’, ‘அய்தராபாத் அழிவு’ உள்ளிட்ட புத்தகங்களை அவர் எழுதியுள்ளார். மேலும் பல்வேறு தேசிய மற்றும் மாநில நாளிதழ்களில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.
காஷ்மீருக்கு அடிக்கடி பயணம் மேற்கொள்ப வரான நூரானி, தேசிய மாநாட்டுக் கட்சி நிறுவனர் ஷேக் முகமது அப்துல்லா நீண்ட நாள்களாக சிறையில் இருந்தபோது அவருக்கு ஆதரவளித்தார். அதேபோல் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கில் முத்தமிழறிஞர் கலைஞருக்கு ஆதரவாக மும்பை உயர்நீதிமன்றத்தில் இவர் ஆஜரானார்.
அரசமைப்பு விவகாரங்கள் மட்டுமின்றி இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து தொடர்ந்து பல கட்டுரை களை எழுதியுள்ளார். ஆர்.எஸ்.எஸ். பற்றி இவர் எழுதிய நூல் புகழ்பெற்றதாகும்.
ஒன்றிய அரசின் டில்லி சென்ட்ரல் விஸ்டா மறுவடிவமைப்புத் திட்டம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
அதுபோல, அவசரநிலை அமலின்போது மேனாள் பிரதமர் இந்திராகாந்தி மீதும் கடும் விமர்சனங்களை முன்வைத்தவர்.
அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் உமர் அப்துல்லா வெளியிட்ட ‘எக்ஸ்’ வலைதளப் பதிவில், ‘‘எழுத்தாளர், வழக்குரைஞர் மற்றும் சட்ட வல்லுநரான ஏ.ஜி.நூரானி மறைந்த செய்தி வருத்தமளிக்கிறது. சட்டம், அரசமைப்பு குறித்தும், ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு எதிராகவும் தன் எழுத்துகளின் மூலம் விரிவாக அவர் எடுத்துரைத்துள்ளார்” என குறிப்பிட்டுள்ளார்.