வளர்ச்சி மிகுந்த மாநிலமாக தமிழ்நாடு வளர்கிறது!

Viduthalai
2 Min Read

அமெரிக்காவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சான்பிரான்சிஸ்கோ, ஆக. 30 வளர்ச்சி மிகுந்த மாநிலமாக தமிழ்நாடு வளர்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டுக்கு பல்வேறு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்றார். அப்போது உரையாற்றிய அவர், உயர்ந்த மனித வாழ்வியல் நிறைய கொண்ட அமெரிக்கா என்ற அடிப்படையில் தமிழ்நாட்டின் தொழில் மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கு பங்களிக்க முதலீட்டாளர்களை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கிறது தமிழ்நாடு.

செமி-கண்டக்டர், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆகிய துறைகளில் உங்களின் முதலீடு களை நாங்கள் வரவேற்கிறோம். வளர்ச்சி மிகுந்த மாநிலமாக தமிழ்நாடு வளர்கிறது. தெற்கு ஆசியாவிலேயே முதலீடுகளை ஈர்க்க உகந்த மாநிலம் தமிழ்நாடு; இந்தியாவிலேயே பொருளாதாரத்தில் 2ஆவது மிகப்பெரிய மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. இந்தியா – அமெரிக்கா இடையேயான பொருளாதார உறவு எழுச்சி கண்டுள்ளது. நவீன உட்கட்ட மைப்பு, திறன்மிகு பணியாளர்களால் உலக முதலீட்டாளர்கள் வெகுவாக ஈர்க்கப்படு கிறார்கள். அமெரிக்காவைச் சேர்ந்த ஏராளமான பெருநிறுவனங்கள் தமிழ்நாட்டில் தங்கள் திட்டங்களை நிறுவி உள்ளன.

புதிய அமெரிக்க நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முன்வர வேண்டும். இந்தியாவின் தேசிய சராசரியை விட 2 மடங்கு அதிகமாக கொண்ட மாநிலம் தமிழ்நாடு. இந்தியாவின் முன்னணி உயர் கல்வி நிறுவனங்களில் 20% தமிழ்நாட்டில் உள்ளன. இந்திய தொழிற்சாலை களில் பணியாற்றும் பெண்களில் 45% பேர் தமிழ்நாட்டினர். இத்தனை சிறப்பு வாய்ந்த தமிழ்நாட்டில் முதலீடு செய்யுங்கள் என அழைப்பு விடுக்கவே அமெரிக்கா வந்துள்ளேன் என்று கூறினார்.

முதலமைச்சர் தலைமையில் குவிந்த முதலீடுகள்
அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையொப்பமானது. அதில் ‘யெல்ட் எஞ்சீனியரிங் சிஸ்டம்‘ ரூ.150 கோடி முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகி உள்ளது. இதன் மூலம் 300 பேர்களுக்குவேலை வாய்ப்பு கிடைக்கும். பிரபல பணப்பறிமாற்ற நிறுவனம் ‘பேபால்’ நிறுவனத்தோடு 1,000 வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமானது ‘மைக்ரோ சிப்‘ நிறுவனத்துடன் ரூ.250 கோடி முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதன் மூலம். 1,500 வேலைவாய்ப்பு கிடைக்கும். ‘ஓமியம்‘ நிறுவனத்துடன் ரூ.400 கோடி முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
‘ஜேக்மைண்ட்‘ நிறுவனத்துடன் ஏற்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். பிரபல தகவல் தொடர்பு நிறுவனம் ‘நோக்கியா‘ உடன் ரூ.450 கோடி முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம். 100 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். தொடர்ந்து முதலீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *