சிறீநகர், ஆக.26 ஜம்மு ––- காஷ்மீரில் செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும். ஜம்மு காஷ்மீரில் மூன்று கட்டங்களாகவும், அரியாணாவில் அக்டோபர் 1ஆம் தேதி ஒரே கட்டமாகவும் வாக்குப்பதிவு நடைபெறும். அக்டோபர் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
ஜம்மு – காஷ்மீரில் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் மாநில தகுதி குறித்த பிரச்சினையைக் கிளப்பியுள்ளன.
காஷ்மீருக்கு முழு மாநில தகுதியை மீட்டெடுக்க வேண்டும் என்று தேசிய மாநாட்டு கட்சியும், காங்கிரசும் வலியுறுத்தியுள்ளன.
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தேர்தல் அறிவிப்பை வரவேற்றுள்ள நிலையில், “கடந்த 10 ஆண்டுகளில், ஜம்மு-காஷ்மீரில் அமைதி, வளர்ச்சி மற்றும் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் புதிய சகாப்தத்தை அரசாங்கம் பல அயராத முயற்சிகள் மூலம் தொடங்கியுள்ளது. சட்டமன்றத் தேர்தல் மூலம் இது மேலும் வலுப் பெறும். ஜனநாயகத்தின் வேர்கள், பிராந்தியத்திற்கான வளர்ச்சியின் புதிய சகாப்தத்திற்கான கதவைத் திறக்கின்றன” எனத் தெரிவித்தார்.
“ஜம்மு-காஷ்மீர் மக்கள் தேர்தலில் தீவிரமாகப் பங்கேற்கவும், அமைதி மற்றும் வளர்ச்சியைப் பராமரிக்கவும், இளைஞர்களுக்குப் பிரகாசமான எதிர்காலத்தை உறுதி செய்யும் ஓர் அரசாங்கத்தை அமைக்க அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கவும் நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் கூறினார்.
எதிர்க்கட்சிகள் கூறியது என்ன?
ஜம்மு – காஷ்மீரில் பத்து ஆண்டுக ளுக்குப் பிறகு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. ஆனால், அங்கு அரசியல் சூழ்நிலை மாறிவிட்டது.
ஆகஸ்ட் 5, 2019 அன்று, சட்டப்பிரிவு 370அய் ரத்து செய்ததன் மூலம், ஜம்மு காஷ்மீரின் சிறப்பு தகுதி நீக்கப்பட்டு, இரண்டு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டன.
அப்போதிருந்து, பள்ளத்தாக்கின் முக்கியக் கட்சிகள் மாநில தகுதியை மீட்டெடுக்கக் கோரி வருகின்றன.
தற்போது தேர்தல் தேதிகள் அறிவிக் கப்பட்டுள்ள நிலையில், ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் முழு மாநில தகுதி மீட்டெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டு கட்சிகள் மீண்டும் வலியுறுத்தின.
தேசிய மாநாட்டுத் தலைவர் ஃபரூக் அப்துல்லா கூறுகையில் , “நாங்கள் மாநில தகுதி வரவேண்டும் என வலியுறுத்துகிறோம். தேசிய மாநாட்டுக் கட்சி மட்டுமல்ல, ஜம்மு-காஷ்மீரின் அனைத்துக் கட்சிகளும் இது நடக்க வேண்டும் என்று விரும்புகின்றன. மாநில தகுதி வழங்கப்படும் என்பது இந்திய அரசின் வாக்குறுதியாக உள்ளது,” என்றார்.
இம்முறை தேர்தலில்தான் போட்டி யிடப் போவதில்லை என அவர் கூறினார். “ஜம்மு காஷ்மீருக்கு மாநில தகுதி கிடைத்ததும், நான் என் பதவியை விட்டு விலகி, எனக்குப் பதிலாக உமர் அப்துல்லா தேர்தலில் போட்டியிடுவார்” என்றும் அவர் கூறினார்.
மறுபுறம், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், “ஜம்மு-காஷ்மீர் முழு மாநில தகுதியைப் பெற இன்னும் காத்திருக்கிறது. ஒன்றிய அரசின் சமீபத்திய நடவடிக்கைகள், துணைநிலை ஆளுநரின் அதிகாரங்களை மேலும் அதிகரித்து, முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் அதிகாரங்களைக் கேலி செய்கிறது” எனத் தெரிவித்தார்.
காங்கிரஸ் தலைவர் பவன் கேரா கூறுகையில், “சுதந்திர நாளன்று பிரதமர் நரேந்திர மோடி ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்று பேசினார். அவர்களால் நான்கு மாநிலங்களில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த முடியவில்லை, இரண்டு மாநிலங்களில் மட்டுமே தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
மெகபூபா முஃப்தியின் மகள்
என்ன சொன்னார்?
மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) தலைவர் மெகபூபா முஃப்தியின் மகள் இல்திஜா முஃப்தி கூறுகையில், “நாங்கள் தேர்தலை வரவேற்கிறோம் ஆனால் சில கேள்விகள் உள்ளன… அரை தன்னாட்சி மாநிலமாக இருந்து, கடந்த அய்ந்து ஆண்டுகளில் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டுள்ளோம் என்பதை நாங்கள் அறிவோம்” என்றார்.
ஆறு ஆண்டுகளுக்கு முன்பே நடத்த வேண்டிய தேர்தல் ஏன் இவ்வளவு காலதாமதமாக நடத்தப்படுவதாக அவர் கேள்வி எழுப்பினார்.
“பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு, ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஒவ்வொரு பிரிவினரும் இங்கு அதிகாரிகள் ஆட்சி செய்வதால் சிரமப்படுகின்றனர். மேலிருந்து கொண்டு வரப்பட்டவர்கள் இங்கு வைஸ்ராய்கள் போலப் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு அரசியல் பொறுப்பு இல்லை” என அவர் கூறினார்.
“சிறப்பு தகுதி உள்ள மாநிலத்தில் தேர்தலை நடத்துவதன் மூலம் நீங்கள் நன்மை செய்வதாகக் காட்ட முனைகிறீர்கள். நீங்கள் எந்த உதவியும் செய்யவில்லை. தேர்தல்கள் எந்தவொரு வலுவான ஜனநாயகத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும்” என்று அவர் கூறினார்.
ஜம்மு – காஷ்மீர் பள்ளத்தாக்கின் சில அரசியல் கட்சிகளும் தேர்தல் தேதி அறிவிப்பை வரவேற்றுள்ளன.