45 ஆண்டுகளுக்குப் பின் யாழ்ப்பாணத்தில் தமிழர் தலைவர் முழக்கம்

Viduthalai
6 Min Read

இருட்டு என்பது நிரந்தரமானதல்ல – இரவு முடிந்தால் பகல் வரும் – விடியலே இல்லாத நாட்களேயில்லை!
விடியலைத் தேடும் தமிழினத்தின் விடியலுக்கான உருவங்களான அமிர்தலிங்கம்,
ஈழத் தந்தை செல்வா போன்றவர்களை மனதிலிருத்தி
விரைவில் தீர்வு எனும் இலக்கை அடைய ஒன்றுபட்டு உழைப்போம்!

திராவிடர் கழகம்

‘‘தலைவர் திரு.அமிர்தலிங்கம் அவர்களின் 97 ஆவது பிறந்த நாள் நினைவு இதழ்” நூல் வெளியிடப்பட்டது.

யாழ்ப்பாணம், ஆக.25 இருட்டு என்பது நிரந்தரமானதல்ல. இரவு முடிந்தால் பகல் வரும். விடியலே இல்லாத நாட்களேயில்லை. அதே போன்று விடியலைத் தேடும் தமிழினத்தின் விடியலுக்கான உருவங்களான அமிர்தலிங்கம், ஈழத் தந்தை செல்வா போன்றவர்களை மனதிலிருத்தி விரைவில் தீர்வு எனும் இலக்கை அடைய ஒன்றுபட்டு உழைப்போம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் 97 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா – ஈழத் தமிழர் உரிமைப் போராட்டத்தில் திருப்பத்தின் தொடக்கமாக அமைந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வருகை.
இலங்கை நாடாளுமன்றத்தின் முதல் தமிழர் எதிர்க் கட்சித் தலைவர் என்ற சிறப்புக்குரியவரும், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவருமான மறைந்த அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் 97 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா நேற்று (24.8.2024) மாலை யாழ்ப்பாணம் வேம்படி வீதியில் உள்ள ரிம்மர் மண்டபத்தில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மாலை 3.45 மணிக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அரங்கத்துக்கு வருகை தந்ததும், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும், மேனாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராசா, நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம், சட்டத்தரணி கரிகாலன் ஆகியோர் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர்.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்ச்சியில், அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் படத்துக்குத் தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மேனாள் மேல்நீதிமன்ற நீதியரசர்
திரு. இ.த.விக்னராஜா
நிகழ்ச்சிக்குத் தலைமை ஏற்ற மேனாள் மேல்நீதிமன்ற நீதிபதியான நீதியரசர் திரு. இ.த.விக்னராஜா அவர்கள் உணர்வுப்பூர்வமாக உரையாற்றினார். இலங்கையில் இன்னமும் தமிழ் மக்களின் உரிமைகள் பறிக்கப்படுவதற்குக் குரல் எழுப்ப தமிழர்கள் ஓரணியின் திரள வேண்டுமென குரல் கொடுத்தார்.
அதி வணக்கத்துக்குரிய கலாநிதி வி.பத்மதயாளன்
சிறப்புரை ஆற்றிய அதி வணக்கத்துக்குரிய கலாநிதி வி.பத்மதயாளன், தமிழர்கள் வரலாற்றில் இருந்து பாடம் கற்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
தலைவர் அமிர்தலிங்கம் அவர்களின் 97 ஆம் ஆண்டு பிறந்தநாள் நினைவு இதழை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் வெளியிட, மேனாள் மேல்நீதிமன்ற நீதிபதி நீதியரசர் இ.த.விக்னராஜா, அதி வண. கலாநிதி வி.பத்மதயாளன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

தமிழர் தலைவர் ஆசிரியர் உரை
தமிழர் தலைவர் ஆசிரியரின் உரை 40 நிமிடங்கள் அமைந்தது. 45 ஆண்டுகள் கடந்து இலங்கைக்கு (யாழ்ப்பாணம்) வருகை தந்திருக்கும் தமிழர் தலைவர் ஆசிரியரின் உரையைக் கேட்க அரங்கத்தில் தமிழ்ச் சமூகத்தின் முக்கிய பிரமுகர்களும், பொதுமக்களும் திரண்டிருந்தனர்.
ஈழத் தமிழர் உரிமைப் போராட்டத்தை இந்தியாவிலும், உலக அரங்கிலும் கொண்டு சென்று, தமிழ்நாட்டில் அனைவரையும் ஓரணியில் திரட்டி, தொப்புள் கொடி உறவுகளுக்கான களத்தை உருவாக்கியவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் என்பதைத் தெளிவாகப் புரிந்துள்ளவர்களாக மூத்தவர் விழிகளில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. கடந்த காலங்களில் நடந்தவற்றின் சோகங்களும், இன்னும் உரிமைகள் மறுக்கப்பட்ட சூழலில் வாழும் மக்களாக இருக்கும் தமிழர்களின் ஏமாற்றங்களும், வருங்காலமேனும் உரிமை தரத் தக்கதாக அமைய வேண்டும் என்னும் ஏக்கத்தையும் ஒவ்வொருவரிடமும் காண முடிந்தது.
இந்தச் சூழலில் தான் ஆசிரியர் அவர்கள் உரையாற்றத் தொடங்கினார்.

‘‘மறைந்த தலைவர் அமிர்தலிங்கம் அவர்கள் தந்தை செல்வாவின் அமைதி வழியில், அளப்பரிய அரசியல் பணிகள் ஆற்றியவர் என்பதையும், வரவிருக்கும் காலத்திற்கும் சேர்த்துச் சிந்திப்பவரே தலைவராக இருக்க முடியும் என்று எழுத்தாளர் வி.செ.காண்டேகர் அவர்கள் சொன்னதைப் போல அடுத்த தலைமுறைக்கும் சிந்தித்துச் செயல்பட்டவர் அய்யா அமிர்தலிங்கம் என்பதையும் எடுத்துக்காட்டினார். ஒற்றுமையாகப் போராடியதன் விளைவாகவே இலங்கை நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக ஒரு தமிழர் வந்தார் என்பதை அமிர்தலிங்கம் அவர்களின் வரலாறு காட்டுவதை நினைவூட்டினார். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யக் காரணமாக இருந்த அமிர்தலிங்கம் அவர்களின் மகன் இங்கிலாந்தில் வாழும் டாக்டர் பகீரதன் உள்ளிட்ட அனைவரையும் பாராட்டிய திராவிடர் கழகத் தலைவர் அவர்கள், இது ஈழத் தமிழர் வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்தும் கட்டம் என்பதையும் அடையாளம் காட்டினார். 45 ஆண்டுகளுக்குப் பின்னர், இந்த நாட்டின் உண்மை நிலைமையையும் மக்களின் வாழ்க்கையையும் நேரடியாக அறிந்து கொள்ள வேண்டும் என்பதே தமது பயணத்தின் முக்கியமான நோக்கம் என்பதையும், அதை தான் கண்ட பலரின் மனக்குமுறல்கள், உணர்வுகளின் வாயிலாக அறிந்து கொண்டதையும் தெரிவித்தார்.

மேலும் அவரது உரையில்,
‘‘கடந்த கால நம் இன வரலாற்றில் இரத்தக் கறைகள் ஏராளமாகக் காணப்படும் நிலையில் அந்தக் கறைகளை நாம் வெறும் கண்ணீர் விட்டு மாத்திரம் அழித்துவிட முடியுமா? அழித்தால் போதுமா? இவற்றிலிருந்து நாம் பாடம் கற்று எத்தனை வேறுபாடுகள் நமக்குள்ளிருந்தாலும் ஓரணியில் திரண்டாக வேண்டும். அந்தக் காலகட்டம் நெருங்கி வந்திருக்கிறது. இதற்காக அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும். உழைப்பின் மூலம் உண்டாகும் வியர்வை மூலம் தான் மாற்றத்தை நாம் உருவாக்க வேண்டும். கண்ணீரால் ஏற்படுத்தப்படும் மாற்றம் நிலைக்காது.
யுத்தம் நிறைவடைந்து 15 ஆண்டுகள் கடந்து விட்ட போதிலும் ஈழத் தமிழ்மக்களுக்கான உரிமைகள் இன்னமும் நிலைநாட்டப்படவில்லை. 15 ஆண்டுகள் கடந்து விட்டது என்று நாம் வெறுமனே கணக்குப் பார்த்துக் கொண்டிருந்தால் மட்டும் போதுமா? ஒருவருக்கு ஒருவர் துக்கம் விசாரித்துக் கொண்டிருந்தால் மட்டும் போதுமா?
தமிழின உரிமைகளுக்காக எத்தனை அரசியல் தலைவர்கள் தங்கள் உயிர்களைத் தியாகம் செய்திருக்கிறார்கள். எத்தனை ஆயிரம் ஆயிரம் போராளிகள், மக்கள் தங்கள் இன்னுயிர்களை இழந்துள்ளனர். இவ்வாறான இழப்புகளுக்குப் பின்னால் நாம் எவ்வாறான பாடத்தைப் பெற்றோம்? நாம் என்ன மாற்றைத் தேட இருக்கின்றோம் என்பது பற்றி நாம் ஆழமாகச் சிந்திக்க வேண்டும். அவ்வாறு சிந்திக்கும் வேளையில் அவர் வேறு, இவர் வேறு, நான் வேறு என்று ஒவ்வொருவரும் எது நம்மைப் பிரிக்கின்றதோ அதனை முன்னிலைப்படுத்திக் கொண்டிருக்கக் கூடாது என்பது எங்களைப் போன்றவர்களின் எளிய, தாழ்மையான கருத்து.

தமிழ்மக்களின் மொழி உரிமை, இன உரிமை, பண்பாட்டு உரிமை போன்ற அனைத்து உரிமைகளுக்காகவும் நாம் எம்மை ஆழமாக அகலப்படுத்த வேண்டிய காலகட்டம் வந்துவிட்டது. இன்றைய (நேற்று) நிகழ்வைச் சிறிய அரங்கக் கூட்டமாக நான் கருதவில்லை. ஒரு திருப்பு முனையாக, மய்யமாகத் தான் நான் கருதுகின்றேன்.
நமது வரலாற்றை இளைய தலைமுறைக்குத் தெளிவாக நாம் எடுத்துக் கூற வேண்டும்.
இருட்டு என்பது நிரந்தரமானதல்ல. இரவு முடிந்தால் பகல் வரும். விடியலே இல்லாத நாட்களேயில்லை. அதே போன்று விடியலைத் தேடும் தமிழினத்தின் விடியலுக்கான உருவங்களான அமிர்தலிங்கம், ஈழத் தந்தை செல்வா போன்றவர்களை மனதிலிருத்தி விரைவில் தீர்வு எனும் இலக்கை அடைய ஒன்றுபட்டு உழைப்போம்’’ என்று உரையாற்றி நிறைவு செய்யும்போது எழுந்த உணர்வலைகளை வார்த்தையில் வடிக்க இயலாது.

பங்கேற்றோர்
மேனாள் பேராயர் ஜெபநேசன், மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தேர்தல் ஆணையக் குழுவின் மேனாள் உறுப்பினர் ஜீவன் கூல், மாகாண சபை உறுப்பினர் கஜதீபன், அமிர்தலிங்கம் நினைவு அறக்கட்டளையின் அறங்காவலர் கவுரி காந்தன், ஈழத் தந்தை செல்வாவின் பேரன் இளங்கோவன், அமிர்தலிங்கம் அவர்களின் செயலாளராகப் பணிபுரிந்த ஆர்.பேரின்பநாயகம் மற்றும் பொதுமக்கள் என கூட்டத்தில் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய அமிர்தலிங்கம் அவர்களின் உறவினரும், அமிர்தலிங்கம் நினைவு அறக்கட்டளை அறங்காவலரும், எழுத்தாளருமான தங்க.முகுந்தன் ஈழ வணக்கப் பாடல் பாடி நன்றியுரை வழங்கினார்.
நிகழ்ச்சி முடிந்ததும் பொது மக்கள் தமிழர் தலைவரைச் சந்தித்துத் தங்கள் மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும், நன்றியையும் தெரிவித்தனர்.
ஈழ வரலாறு இந்த நாளைத் தன் ஏட்டில் பதித்துக் கொள்ளும். (தமிழர் தலைவர் அவர்களின் முழு உரையும், பயணத் தொகுப்பும் பிறகு வெளிவரும்.)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *