மும்பை, ஆக.23- மும்பை சென்ற வந்தே பாரத் ரயிலில் அளிக்கப் பட்ட உணவில் கரப்பான் பூச்சி இருந்ததாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஷீரடி யில் இருந்து மும்பைக்கு சென்ற வந்தே பாரத் ரயிலில், ஒரு பயணிக்கு அளிக்கப்பட்ட இரவு உணவில் கரப்பான் பூச்சி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, உணவின் தரம் குறித்து, இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலாக் கழகத்தில் எழுத்துப்பூர்வ புகார் அளித்தார்.
இதனையடுத்து, “உங்களுக்கு ஏற்பட்ட சிரமத் திற்கு மிகவும் வருந்துகிறோம். இந்த நிகழ்வானது மிகவும் தீவிரமாக பரிசீலிக்கப் பட்டுள்ளது.
உணவு அளிக்கும் சேவை வழங்குநருக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது, மேலும், சமையலறை முழுவதையும் ஆய்வு செய்ய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்” என்று அய்ஆர்சிடிசி பதிலளித்துள்ளது. இந்த நிலையில், உணவில் கரப்பான் பூச்சி இருப்பது தொடர்பான ஒளிப்படம் சமூக ஊடகங்களில் வைரலானைத் தொடர்ந்து, ரயில்வே துறையின் இந்த அலட்சியப் போக்கிற்கு, பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஏற்கெனவே இதுபோல் நடந்தது குறிப்பிடத்தக்கது.
ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், அய்ஆர்சிடிசி, பாஜக அமைச்சர்களான சோமண்ணா, ரன்வீத் சிங் பிட்டுவையும் குறிப்பிட்டு விமர்சனங்களையும் கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.