புதுடில்லி, ஆக.23 வக்பு மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் முதல் கூட்டம் டில்லியில் நேற்று (22.8.2024) நடைபெற்றது. இதில் பல்வேறு திருத்தங்கள் குறித்து உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.வக்பு சட்டத்திருத்த மசோதாவை மக்களவையில் ஒன்றிய அரசு கடந்த 8-ஆம் தேதி அறிமுகம் செய்தது. இந்த மசோதாவுக்கு முஸ்லிம் அமைப்புகளும் எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இதையடுத்து மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் ஆய்வுக்கு அனுப்ப ஒன்றிய அரசு முடிவு செய்தது. மசோ தாவை ஆய்வு செய்ய மக்களவை பாஜக உறுப்பினர் ஜெகதாம்பிகா பால் தலைமையில் 31 உறுப்பினர்களை கொண்ட இரு அவைகளின் கூட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இக்குழுவின் முதல் கூட்டம் டில்லியில் நேற்று (22.8.2024) நடைபெற்றது. இதில் மசோதாவில் இடம்பெற்றுள்ள திருத்தங்கள் குறித்து சிறுபான்மையினர் விவகாரஅமைச்சக அதிகாரிகள் விளக்கம்அளித்தனர். அப்போது பெண்களுக்கு அதிகாரம் அளிக் கும் விதிகள் உட்பட பல்வேறு திருத்தங்களுக்கு பாஜக உறுப் பினர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
அதேவேளையில் மாவட்ட ஆட்சியருக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவது, வக்பு வாரியங்களில் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்குவது உட்பட பல்வேறு பிரிவுகளின் அவசியம் குறித்து எதிர்க்கட்சிகள் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.கூட்டத்தில் அவ்வப்போது சூடான கருத்துப் பரிமாற்றங்கள் நடந்தன. எனினும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் பல மணி நேரம் அமர்ந்து, மசோதாவின் விதிகள் குறித்து தங்கள் கருத்துகளை பதிவுசெய்து, ஆலோசனைகளை வழங்கினர். மேலும் விளக்கங்களை பெற்றனர்.
மதிய உணவு இடைவெளி யுடன் 6 மணி நேரத்துக்கும் மேலாக கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் பலன் அளிக்கும் வகையில் இருந்ததாக குழுவின் தலைவர் ஜெகதாம்பிகா பால் கூறினார்.