மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு வலியுறுத்தல்
புதுடில்லி, ஆக.23 கருநாடக அரசு மழைக் காலங்களில் திறந்துவிட்ட உபரி நீரை கணக்கில் எடுத்துக்கொள்ள கூடாது என டில்லியில் நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழ்நாடு அரசு வலியுறுத்தியுள்ளது.
காவிரி மேலாண்மை ஆணை யத்தின் 33-ஆவது கூட்டம் டில்லியில் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் நேற்று (22.8.2024) நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அரசின் சார்பில் நீர்வளத் துறை செயலர் மணிவாசன், காவிரிதொழில்நுட்ப குழு தலைவர் ஆர்.சுப்பிரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதேபோல, கருநாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களை சேர்ந்த நீர்ப்பாசனத் துறை அதிகாரிகளும் கலந்துகொண் டனர். அப்போது கருநாடக அரசின் சார்பில், ‘‘காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் கிருஷ்ணராஜ சாகர், கபினி உள்ளிட்ட 4 அணைகளும் முழு கொள்ள ளவை எட்டியுள்ளன. இதனால், உச்ச நீதிமன்ற தீர்ப்பில் குறிப் பிட்டுள்ளதைவிட தமிழ்நாட்டிற்கு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த பருவமழை காலத்தில் மட்டும் 90 டிஎம்சி நீர் தமிழ்நாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது”என்று தெரிவித்தனர்.
இதற்கு தமிழ்நாடு அரசின் சார்பில், ‘‘இந்தஆண்டில் கருநாடகாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் முறையாக வந்துகொண்டிருக்கிறது. அங்கு அதிக அளவில் மழை பெய்துள்ளதால் 110 டிஎம்சி நீர் அணைகளில் இருப்பு உள்ளது. அதிக மழைப்பொழிவின் காரணமாக அணைகளுக்கு கிடைத்த உபரி நீரை மட்டுமே கருநாடக அரசு தமிழ்நாட்டிற்கு காவிரியில் திறந்து விட்டுள்ளது. இந்த உபரி நீரை அணையில் இருந்து திறக்கப்பட்ட நீராக கணக்கில் எடுத்துக்கொள்ள கூடாது. உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, தமிழ்நாட்டிற்கு செப்டம்பரில் வழங்க வேண்டிய 36.7 டிஎம்சி நீரை கருநாடகா திறந்துவிட வேண்டும்” என்று வலியுறுத்தினர்.
நிறைவாக, ஆணையத்தின் தலைவர்எஸ்.கே.ஹல்தர் பேசும் போது, ‘‘கடந்த 2 மாதமாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் நீர் பங்கீட்டில் எவ்வித சிக்கலும் இல்லை. அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவை கண்காணிப்பது குறித்து 2 மாநில அதிகாரிகளுக்கும் உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்படும். ஆகஸ்ட் இறுதி வாரத்தில் நடைபெறும் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் வழங்கப்படும் பரிந்துரைகள் குறித்து அடுத்த கூட்டத்தில் விவாதிக்கப்படும்” என்று தெரிவித்தார்.