மய்யத்தின் புரவலர் தமிழர் தலைவர், பயிற்சியாளர்களுக்கு ஆய்வுரை-அறிவுரை
திராவிடக் கருத்தியலுக்கும், வரலாற்றிற்கும் ஆக்கம் கூட்டுகின்ற வகையில் திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் உருவாக்கப்பட்டு சென்னை – பெரியார் திடலில் 2006ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.
திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மய்யத்தின் புரவலராக தொடக்கம் முதல் இருந்து வழிநடத்தி வருகிறார். மய்யத்தின் பொறுப்பாளர்களாக – பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களாக இருந்து கல்விப் பணி ஆற்றிய பேராசிரியர்கள், வரலாற்றுத் துறை அறிஞர்கள், பேராசிரியர்கள் என தங்களது பெரும்பாலான பணியினை வரலாற்றுத் துறை சார்ந்து மேற்கொண்டு வந்தவர்கள், பொறுப்பேற்று பலதரப்பட்ட வகையில், திராவிடக் கருத்தியலுக்கு வலு சேர்த்து வருகின்றனர். உண்மையான வரலாறு எது? என்ற கேள்விக்கு விடை அளிக்கின்ற வகையில் திராவிட வரலாறு குறித்து பல்வேறு நிகழ்ச்சிகளை – பணிகளை ஆற்றி வருகின்றனர்.
திராவிடக் கருத்தியலை, ஆய்வு நோக்கில் மேற்கொண்டு வரும் ஆய்வாளர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் பயன் அளிக்கின்ற வகையில் ஒரு சிறப்புப் பயிற்சிப் பட்டறையினை நடத்திட வேண்டும் என்ற திட்டம் ஆகஸ்டு 17 &18, 2024 இரு நாள்களில் நிறைவேறியது.
இந்த இரு நாள்களில் ‘திராவிட வரலாறும் வரலாற்றியலும்’ (Dravidian History & Historiography)எனும் தலைப்பில் சென்னை – பெரியார் திடலில் உள்ள அன்னை மணியம்மையார் அரங்கில் நடந்தேறியது. பயிற்சிப் பட்டறை என்பதால் பொது நிகழ்ச்சியாக அல்லாமல், பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும் ஆய்வு செய்து கொண்டிருக்கும் மாணவர்களை பெரும்பாலானவர்களைக் கொண்டு ஆர்வலர்களுக்கும், திராவிடக் கருத்தியல் குறித்து ஆர்வமிக்கவர்களைக் கொண்டும் பயிற்சிப் பட்டறை நடைபெற்றது.
தொடக்க நிகழ்ச்சி
17.8.2024 அன்று காலை 9 மணிக்கு பட்ட றைக்கு வருகை தந்த ஆய்வாளர்கள் தங்களை பதிவு செய்து கொண்ட பின்பு தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையேற்று உரையாற்றினார். திராவிடக் கருத்தியல், வரலாறு சார்ந்த விவரங்களை பதிவிடுகையில் ஆதாரக் குறிப்புடன் பதி விடும் வழக்கத்தை கடைப்பிடிக்குமாறு பயிற்சியாளர்களுக்கு எடுத்துரைத்தார். தமது தலைமை உரையில் பயிற்சிப் பட்டறையினைத் தொடங்கி வைத்து உரையாற்றிய திராவிட இயக்க ஆய்வறிஞர் க.திருநாவுக்கரசு அவர்கள் வரலாற்றுக் குறிப்புகளைப் பெறுவது சுலபமல்ல; தேடுதல்; தொடர் தேடுதல் என்பது மிகவும் முக்கியம். தேடிச் சென்ற இடத்தில் முழு விவரங்களும் ஆய்வாளர்கள் எதிர்பார்த்த அளவில் கிடைத்து விடாது. அங்கிருந்து பிறிதொரு இடத்தில் தேட வேண்டிய கட்டாயம் ஏற்படும் என தனது ஆய்வுப் பணி அனுபவங்களை கதை சொல்வது போல் எளிமையாக பயிற்சியாளர்களுக்கு எடுத்துச் சொல்லி உரையாற்றினார்.
பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டோரை வரவேற்று திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் இணைச் செயலாளரும் சென்னை மாநிலக் கல்லூரியின் வரலாற்றுத் துறை ஆசிரியருமான வெ.மாரப்பன் உரையாற்றினார்.
தொடக்க நிகழ்ச்சியினை அடுத்து தேநீர் இடைவேளைக் குப் பின்னர் பயிற்சி வகுப்புகள் தொடங்கின. முதல் வகுப்பினை சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் (Madras Institute of Development Studies) பேராசிரியர் முனைவர் ஆ.இரா.வேங்கடாசலபதி, ‘வரலாற்றியலும் திராவிட இயக்க ஆவணங்களும்’ என்ற தலைப்பில் கருத்து தனுபவங்களை வழங்கினார். பல்வேறு ஆய்வுகள், தரவுகள் சேகரித்தல், புத்தகம் எழுதுதல் ஆகியவற்றில் ஆழமான அனுபவமிக்க பேராசிரியர், ஆய்வுப் பணியினை மேற்கொள்ளும் மாணவர்கள், ஆர்வலர்கள் நோக்கம் பற்றிய தெளிவான சிந்தனை, புரிதலுடன் பணியாற்றிட வேண்டும். ஆய்வுப் பணியின் பொழுது, நோக்கத்திலிருந்து விலகிச் செல்லும் சூழல் எழத்தான் நேரிடும். அவைகளைக் கடந்து சென்று தம் பணியினை சரியான திசையில் கொண்டு செல்ல வேண்டும் என தமது உரையில் குறிப்பிட்டார். (ஆசிரியர் உரை தனியே காண்க)
அடுத்த வகுப்பினை தமிழ்நாடு ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாநில ஆணையத்தின் உறுப்பின ரும், ஆய்வாளரும் எழுத்தாள ருமான முனைவர் கோ.ரகுபதி ‘19ஆம் நூற்றாண்டு சமூக மாற்றமும் ஆவணங்களும்’ என்ற தலைப்பில் நடத்தினார்.
ஜாதி கட்டமைப்புக்குள் பிறந்து வளர்ந்திடும் ஆய்வா ளர்கள், தங்களின் ஜாதி அடையாளங்கள் குறித்து நடுநிலையுடன் தரவுகளைப் பயன்படுத்தி பணி ஆற்றிட வேண்டும் என தமது உரையில் குறிப்பிட்டார்.
நண்பகல் உணவிற்குப் பின் மீண்டும் வகுப்புகள் தொடங்கின. திருநெல்வேலி ம.தி.கா. இந்துக் கல்லூரி வரலாற்றுத் துறை இணைப் பேராசிரியர் முனைவர் ஆ.திருநீலகண்டன், ‘நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம்’ எனும் தலைப்பில் வகுப்பு நடத்தினார். நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்க வரலாறு பற்றி சுருக் கமாக எடுத்துக் கூறியபின், அதில் அடுத்து செய்ய வேண்டிய ஆய்வுகளைப் பற்றி உரையாற்றினார். அந்த ஆய்வுகளுக்குப் பயன்படும் வகையில் உள்ள பத்திரிகைகள், பருவ இதழ்கள், ஆய்வுப் புத்தகங்கள் பற்றிய பெரும் குறிப்பினை ஆய்வாளர்களின் கவனத்திற்கு கொண்டு சென் றார். இந்த வகுப்புடன் முதல் நாள் நிகழ்வுகள் முடிந்தன.
இரண்டாம் நாள் 18.8.2024
இரண்டாம் நாளன்று முதல் வகுப்பினை சென்னைப் பல்கலைக் கழக மேனாள் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் வீ. அரசு, ‘இணை இயக்க ஆவணங்களிலிருந்து திராவிட வரலாறு’ என்ற தலைப்பில் உரையாற்றினார். திராவிடர் இயக்கத்தின் தொடக்கத்திற்கு முன்பாக அதுபற்றிய கருத்தியல் சார்புகளைக் கொண்டு மூன்று இயக்கங்கள் திகழ்ந்தன. அவை பிரம்ம சமாஜம், சமரச சன்மார்க்க சங்கம், சென்னை லவுகீக சங்கம் எனும் அமைப்புக்கள் அவை. திராவிட இயக்கப் பரப்பிய விதைத்த எந்த கருத்துகள் முன்னரே சிறிய அளவில் செய்தும், முழுமையடையாமலும் போயின அந்த அமைப்புகள். ஆனால் திராவிட இயல் கருத்துத்தளங்கள் பற்றிய ஆய்வுகளுக்கு உறுதுணையாக அவை இருந்து வருகின்றன. ஆய்வாளர்கள் அந்தக் குறிப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தமது உரையில் பேராசிரியர் குறிப்பிட்டார்.
தேநீர் இடைவேளைக்குப் பின்னர் தொடங்கிய வகுப்பில் எழுத்தாளரும், கலைஞர் தொலைக்காட்சி செய்தி ஆசிரியருமான
ப. திருமாவேலன், ‘1944க்குப் பிறகு திராவிட இயக்கம்’’ என்ற தலைப்பில் உரையாற்றினார். 1944இல்தான் தந்தை பெரியார் திராவிடர் கழகம் எனும் பெயர் மாற்றத்தை இயக்கத்திற்கு கொண்டு வருகிறார். அரசியல் நிலைப்பாடு காரணமாக தோன்றிய திராவிட முன்னேற்றக் கழகம் திராவிடர் கழகத்திற்கு போட்டியாக தோற்றுவிக்கப்படவில்லை. திராவிடர் கருத்தியலை அரசியல் தளத்தில் கொண்டு செல்லவே அது தோன்றியது. பின்னர் பிரிந்த அண்ணா தி.மு.க., தனி நபர் தன் முனைப்பில் தோன்றினாலும் சில அடிப்படைக் கொள்கைகளிலிருந்து அ்நதக் கட்சியினால் விலகிச் ெசல்ல முடியவில்லை.
இத்தகைய பிரிவுகளுக்குப் பின்னரும் தமிழ்நாடு திராவிடர் கருத்தியல் தளத்தில் உறுதியாக நிற்கிறது – பயணிக்கிறது என தனது உரையில் குறிப்பிட்டுப் பேசினார்.
நண்பகல் உணவிற்குப் பின்னர், அடுத்த வகுப்பினை ‘சமூகநீதிப் போராட்டங்கள்’ எனும் தலைப்பில் ஆய்வாளரும், எழுத்தாளருமான சென்னை வானொலி மேனாள் துணை இயக் குநர் முனைவர் பழ. அதியமான் அவர்கள் நடத்தினார்கள். தாம் எழுதிய சேரன்மாதேவி குருகுல போராட்ட வரலாறு, வைக்கம் போராட் டம் ஆகிய ஆய்வுகளின் பொழுது தாம் கண்ட அனுபவங்களை எடுத்துக் கூறி, ஆய்வாளர்கள் கள ஆய்வு முயற்சியில் தொய்வடையக் கூடாது. ஆய்வின் சிறப்பினை கள ஆய்வுகள், நேர்காணல்கள்தான் எடுத்துரைக்கும் என தமது உரையில் குறிப்பிட்டுப் பேசினார்.
பின்னர் வகுப்பெடுத்த திராவிட வரலாறு ஆய்வு மய்யத்தின் தலைவரும், திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் மேனாள் துணைவேந்தருமான பேராசிரியர் முனைவர் பெ. ஜெகதீசன் ‘திராவிட வரலாறும் பண்பாடும் – ஓர் அறிமுகம்’ என்ற தலைப்பில் உரையாற்றினர். ஆங்கிலேயே அதிகாரிகள், ஆய்வாளர்கள், மதகுருமார்கள் எவ்வாறு திராவிடர் கருத்தியலை பிரித்து வேறுபடுத்திப் பார்த்து அதன் சிறப்புகளை பதிவிட்டதை அந்தந்த நூல்களின் துணை கொண்டு வகுப்பெடுத்தார்.
தேநீர் இடைவேளைக்குப் பின்னர் ‘வரலாற்றியலும் ஆவணங்களுக்கான தேடுதலும்’ எனும் தலைப்பில் கலந்துரையாடல் (Panel discussion) நடைபெற்றது. கலந்துரையாட லில் இயக்குநர் கோம்பை அன்வர், எழுத்தாளர் நிவேதிதா லூயிஸ், ரோஜா முத்தையா ஆய்வு நூலக உதவி இயக்குநர் மா. மணிகண்ட சுப்பு மற்றும் தமிழ்நாடு ஆவணக் காப்பகம் & வரலாற்று ஆய்வகத்தின் விவரச் சுவடியின் (Gazateer) ஆசிரியர் அ. தமிழ்ச்செல்வன் ஆகியோர் பங்கேற்று உரையாடினர். திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் செயலாளரும், சென்னை விவேகானந்தா கல்லூரி வரலாற்றுத் துறையின் மேனாள் துறைத் தலைவருமான பேராசிரியர் அ. கருணானந்தன் கலந்துரையாடலை ஒருங்கிணைத்தார் உரையாற்றினார்.
இயக்குநர் கோம்பை அன்வர் உரையாடும் பொழுது, நிறுவனங்கள் மற்றும் இடங்கள் காவியமாகி வருவதைக் குறிப்பிட்டு, எடுத்துக்காட்டாக பாண்டவர் மலை என்பதன் பெயர் காவிமயமாகி உள்ளது என்றார். அதன் உண்மையான பெயர் பஞ்சனணப் படுகை என்பதாகும். இயற்கையோடு இணைந்த பெயர். ஆய்வாளர்கள் களத்தில் நேர்கொள்ளும் பெயர்களை நேரடியாக எடுத்துக் கொள்ளாமல், ஆய்ந்து அவைகளின் உண்மைப் பொருளை அறிந்திட வேண்டும் என வலியுறுத்தினார்.
எழுத்தாளர் நிவேதிதா லூயிஸ், பேசும்பொழுது ஆய்வு என்பது கள ஆய்வு மேற்கொள்ளப்படுவதில்தான் முழுமையடையும். வாழ்நாள் முழுவதும் கள ஆய்வு நடத்திட முடியாது. இளமைக் காலம் வரை (50 வயது வரை) கள ஆய்வில் கவனம் செலுத்தி, அதற்கு அடுத்த அடுத்த கட்டத்தில் புத்தகங்கள், ஆய்வுக் குறிப்புகளின் துணை கொண்டு ஆய்வுப் பணிகளை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
நூலகர் மணிகண்டன் சுப்பு உரையாற்றுகையில், தரவுகள் சேகரிப்பிற்காக களப்பணியில் ஈடுபடும் பொழுது அரிதாகக் கிடைத்திடும், பொருள்கள், ஒளிப்படங்கள் ஆகியவற்றை சிறு குறிப்புடன் தனித்தனி வகைப்படுத்தி பாதுகாத்துக் கொள்ள வேண்டும். ஆவணப் படுத்திடும் பொழுது அந்தக் குறிப்புகள் துணை கொண்டு எழுதிட வேண்டும். குறிப்புப் பதிவின்றி பாதுகாக்கப்படும் பொருள்கள், தவறுதலாக ஆவணப்படுத்திட வாய்ப்பு ஏற்படும்; உண்மைகள் தவறுதலாக சென்றிடவும் நேரிடும் என தனது அனுபவத்தில் கண்ட தவறுகளைச் சுட்டிக் காட்டிப் பேசினார்.
விவரச் சுவடி ஆசிரியர் அ. தமிழ்ச்செல்வன் உரையாற்றிடும் பொழுது, கணினி மூலம் குறிப்புகள் எடுக்கையில் உரிய சரியான தளத்தை, அதிகாரப் பூர்வ தளத்தை கண்டறிந்து ஆய்வுப் பணி செய்திடல் வேண்டும் என்றார். ஆய்வாளர்கள், தங்களது பணிக்கு அரசு ஆவணக் காப்பகத்தினை தேவை ஏற்படின் தாராளமாக அணுகலாம் என்றதோடு, ஆவணக் காப்பகத்தில் உள்ள ஆவணங்கள்பற்றிய குறிப்பையும் சுருக்கமாக எடுத்துரைத்தார்.
ஒருங்கிணைத்து உரையாற்றிய பேராசிரியர் அ. கருணானந்தன் பேசும் பொழுது, வழக்கத்தை சரியானதாகக கொள்ளாமல் காரண காரியங்களை கண்டறிந்து உண்மைத் தன்மையுடன் ஆவணப்படுத்திட வேண்டும். எடுத்துக்காட்டாக தேசியக் கொடியினைக் குறிப்பிடும் மூவர்ணக் கொடி எனக் குறிப்பிடுவது வழமையானது. ஆனால் தேசியக் கொடியில் இருப்பது மூவண்ணமல்ல; நான்கு வண்ணங்கள்; நீல நிறத்தில் கொடியின் மய்யப் பகுதியில் அசோகச் சக்கரம் உள்ளதை அனைவரும் அறிவோம். நீலத்தை மறைத்திடுவதில் ஒரு வகை அரசியலும் உள்ளடங்கியுள்ளது எனக் குறிப்பிட்டார்.
பட்டறையின் நிறைவு நிகழ்ச்சியில் உரையாற்றிய ஜெர்மனியிலுள்ள தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் தலைவர் முனைவர் சுபாஷிணி அவர்கள் தங்களது அமைப்பு தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பரவலாக பணியாற்றி வருகிறது. அவை குறித்த ஆவணப் பணியினை மேற்கொள்ளும் ஆய்வாளர்களுக்கு தங்களது அமைப்பு உறுதுணையாக இருக்கும் எனக் குறிப்பிட்டு திராவிட ஆய்வுப் பணிகள் தொடர்ந்து நடைபெற வேண்டும் எனப் பேசினார்.
நிகழ்ச்சியின் நிறைவில் பட்டறை பயிற்சியாளருக்கு சான்றிதழினை திராவிடர் வரலாற்று ஆய்வு மயய்த்தின் தலைவர் பேராசிரியர் பெ. ஜெகதீசன் வழங்கினார். தோழர் இக்லாஸ் அவர்கள் வழங்கிய ‘பெரியார் இரங்கலுரைகள்’ எனும் புத்தகமும் அனைவருக்கும் வழங்கப்பட்டது. பயிற்சிப் பட்டறையின் நிகழ்வுகளை தொடக்கம் முதல் நிறைவு வரை திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் ஒருங்கிணைத்து நடத்தினார். நிகழ்ச்சியின் இறுதி நிகழ்வாக திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் பொருளாளர் வீ. குமரேசன் நன்றி கூறி முடித்தார்.
பயிற்சிப் பட்டறையின் ஒவ்வொரு வகுப்பின் நிறைவிலும், பயிற்சியாளர்கள், உரை குறித்த விளக்கங்களையும், ஆய்வு குறித்த அய்யப்படுகளையும் கேட்பதும், அதற்கு வகுப்பு நடத்திய அறிஞர் பெரு மக்கள் விளக்கம் அளித்ததும், பயிற்சியாளர்கள் உரிய கவனத்துடன் பட்டறையில் கலந்து கொண்டதை பறைசாற்றுவதாக அமைந்தது.
இது போன்ற பயிற்சிப் பட்டறைகளை தமிழ்நாடு முழுவதும் நடத்திட வேண்டும் என்ற தேவைகளையும் பயிற்சியாளர்கள் தெரிவித்தனர்.
இரண்டு நாள் பயிற்சிப் பட்டறை, திராவிட வரலாறு, வரலாற்றியல் குறித்த ஆய்வில் ஒரு புத்தாக் கத்தை ஏற்படுத்தியது என்பதை ஆய்வாளர்கள் வெளிப் படையாகவே தெரிவித்துச் சென்றனர்.
செய்தித் தொகுப்பு: வீ. குமரேசன்