‘‘வேர்களைத் தேடி’’ தமிழ்நாட்டிற்கு வந்திருந்த இளைஞர்கள் – பெரியார் திடலில் ஒருநாள்!

Viduthalai
3 Min Read

முனைவர் கோ. ஒளிவண்ணன்

திராவிடர் கழகம்

தமிழ்நாடு அரசு ‘‘வேர்களைத் தேடி’’ என்கிற புதுமையான நிகழ்ச்சியின் வாயிலாக, வெளிநாட்டு வாழ் இளைஞர்கள், இளைஞிகளை தமிழ்நாட்டை அறிந்து கொள்ளும் வகையில் வாய்ப்பு அளிக்கிறது. இரண்டாவது ஆண்டாக மிகச் சிறப்பாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 15 நாடுகளிலிருந்து 100 பேர் அண்மையில் தமிழ்நாட்டுக்கு வந்திருந்தார்கள். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சுற்றிப் பார்த்த வர்கள் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று பெரியார் திடலுக்கு வந்திருந்தார்கள்.
கடந்த நூறு ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் நடைபெற்று வருகின்ற சமூக நீதிப் புரட்சி, தந்தை பெரியாரின் தாக்கம், இந்தியாவில் தமிழ்நாடு எப்படி ஒரு வித்தியாசமான முன்னேறிய மாநிலமாக திகழ்கிறது என்பனவற்றை மாணவர்களுக்கு எடுத்துச் சொல்லும் வகையில் அன்றைய நாள் திட்டமிடப்பட்டது .

முதல் நிகழ்ச்சியாக மாணவர்களுக்குத் தந்தை பெரியார் திரைப்படத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில காட்சிகள் 15 நிமிடத்திற்கு காட்டப்பட்டது. தந்தை பெரியார் அவர்களின் ஒப்பற்ற சிந்தனைகள் அவை இந்த சமூகத்தில் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தின என்பதை விளக்கும் வகையில் அக்குறும்படம் அமைந்திருந்தது. படம் திரையிடலுக்கு முன்பு நல்லதொரு அறிமுகத்தை திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் வழங்கினார்.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தந்தை பெரியார் மற்றும் திராவிட இயக்கம் நம்முடைய சமூகத்திற்கு ஆற்றிய பங்களிப்பை தமிழிலும், ஆங்கிலத்திலும் இணைத்து பாங்குற விளக்கினார்.

மாணவர்களுக்கும் மற்ற விருந்தினர்களுக்கும் சுவையான அசைவ உணவு அளிக்கப்பட்டது.
பிற்பகலில் மாணவர்கள் அய்யா-அம்மா நினைவகம், அருங்காட்சியகம், நூலகம் ஆகிய இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு பல்வேறு வரலாற்றுத் தகவல்கள் விளக்கமாக அவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டன. கழகப் பொருளாளர் வீ.குமரேசன், துணைப் பொதுச்செயலாளர் பிரின்சு என்னாெரசு பெரியார் மற்றும் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் துணைத் தலைவர் கோ.ஒளிவண்ணன் ஆகியோர் இப் பணியினை செவ்வனே செய்தனர்.

திராவிடர் கழகம்

பிறகு பெரியார் கலைக் குழுவினர் சிலிர்ப்பூட்டும் சிலம்பாட்டம் நடத்தினர். சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் அவர்களும், வட சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் கலாநிதி அவர்களும் பார்வையாளர்களோடு அமர்ந்து இந்நிகழ்ச்சியைக் கண்டு களித்தனர்.
பின்னர் மாணவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அப்போது உரையாற்றிய அமைச்சர் அவர்கள், ‘‘தமிழ்நாட்டிற்கு அடித்தளமே தந்தை பெரியாரும், பெரியார் திடலும்தான். 15 நாள்கள் இங்கு வந்திருந்து தமிழ்நாட்டின் பல இடங்களைக் கண்டு களித்த மாணவர்கள் கலாச்சார தூதர்களாக அவரவர் நாடுகளுக்குத் திரும்பிச் சென்றவுடன் தாங்கள் மற்ற இடங்களில் கண்டு களித்தவற்றுள், மிக முக்கியமாக தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் ஒப்பற்ற பணிகளையும், திராவிட இயக்கச் சாதனைகளையும் மற்றும் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் மாட்சிகளை குறித்தும் பறைசாற்றுவார்கள்” என்றார்.

திராவிடர் கழகம்

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அளப்பரிய பணியினை குறித்தும் அமைச்சர் அவர்கள் பேசினார். நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் கலாநிதி வீராசாமி, நூறு ஆண்டுக் கால சரித்திரத்தை மிகத் தெளிவாகவும், அதில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோருடைய அரும் பணிகளைக் குறித்தும் ஆங்கிலத்தில் பேசியது நிகழ்ச்சிக்கு முத்தாரமாக அமைந்தது.
இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக அமைவதற்குக் காரணமான துறையின் ஆணையர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவர் துறை சார்ந்தவர்களும் எடுத்துக் கொண்ட முயற்சிகள் சிறப்பானவையாகும்.
நிகழ்ச்சிகள் முடிந்து இளைஞர்கள் புறப்படும் போது, பெரியார் கலைக்குழுவினர் அரங்கத்திற்கு வெளியே திறந்தவெளித் திடலில் நெருப்பைக் கொண்டு வீர விளையாட்டு நடத்தினர்.
‘‘அறிவுத் தீயோடு செல்லுங்கள்’’ என்பதைக் குறியீடாக இவ்வீர விளையாட்டு சுட்டிக்காட்டியது என்று சொன்னால் அது மிகையாகாது.
மொத்தத்தில் ‘வேர்களைத் தேடி’ தமிழ்நாட்டிற்கு வந்தவர்கள், பயணத்தின் இறுதியில் பெரியார் திடலில், தமிழ்நாட்டு வரலாற்றின் ஆணிவேரைக் கண்டு கொண்டார்கள் என்பது சிறப்புடையது.

திராவிடர் கழகம்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *