4 மாநிலத்துக்கே ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த முடியவில்லை ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமா? சிவசேனா கேள்வி

Viduthalai
2 Min Read

மும்பை, ஆக. 19- மகாராட்டிரா, ஜார்க்கண்ட், அரியானா மற்றும் ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களுக்கு ஒரே நேரத்தில் சட்டமன்ற தேர்தலை நடத்த முடியாத ஒன்றியத்தில் ஆளும் பாஜக அரசுதான் “ஒரே நாடு- ஒரே தேர்தல்” கொள்கையை பற்றி பேசுகிறது என உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கடுமையாக சாடியுள்ளார். மகாராட்டிராவில் ஆளும் பாஜக கூட்டணிக் கட்சிகளிடையேயான பிரச்சினைகளை சரி செய்ய கால அவகாசம் கொடுக்கும் வகையில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை எனவும் சஞ்சய் ராவத் குற்றம்சாட்டியுள்ளார்.
மகாராட்டிரா, ஜார்க்கண்ட், ஜம்மு-காஷ்மீர் மற்றும் அரியானா மாநில சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்கிற எதிர் பார்ப்பு இருந்தது. ஆனால் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு 3 கட்டமாகவும் அரியானா மாநிலத்தில் ஒரே கட்டமாகவும் தேர்தல் நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மகாராட்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்படாதது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் மேனாள் முதலமைச்சர் சாம்பாய் சோரன் மற்றும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா சட்டமன்ற உறுப்பினர்கள் பலரை பாஜக இழுக்க பேரம் பேசுவதாகவும் கூறப்பட்டு வருகிறது. இதேபோல மகாராட்டிராவிலும் பாஜக கூட்டணிக்கு சாதகமான சூழ்நிலை இல்லாத காரணத்தால் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை என்னவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியதாவது: ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கு ஒன்றியத்தில் ஆளும் பாஜக குடைச்சல் கொடுக்க தொடங்கி இருக்கிறது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் சட்டமன்ற உறுப்பினர்களை பேரம் பேசி வளைத்துக் கொண்டிருக்கிறது பாஜக. இந்த பேரம் முடிவடையும் வரை ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தல் தேதியை அறிவிக்கமாட்டார்கள். மகாராட்டிராவில் ஆளும் பாஜக கூட்டணியில் சிக்கல் இருக்கிறது. இதனால்தான் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதலமைச்சர்கள் தேவேந்திர பட்னாவிஸ், அஜித் பவார் உள்ளிட்டோருக்கு கால அவகாசம் கொடுத்திருக்கின்றனர். இந்த காரணத்தால்தான் மகாராட்டிரா சட்டமன்ற தேர்தல் தேதியையும் அறிவிக்கவில்லை. 4 மாநிலங்களுக்கு ஒரே நேரத்தில் சட்டமன்றத் தேர்தலை நடத்த முடியாத ஒன்றியத்தில் ஆளும் பாஜக கூட்டணி அரசுதான் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து பேசுகிறது. இது அபத்தமாக உள்ளது என்றார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *