அண்மையில் மருத்துவத் துறையைச் சேர்ந்த இரு பெண்கள் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
நாகரிகம் வளர்ந்த நாட்டில்தான் நாம் வாழ்கிறோமா என்ற கேள்விக்குறி எழுந்து – வெட்கித் தலைக் குனிய வேண்டிய நிலை!
ஒன்று பிஜேபி ஆளும் உத்தராகண்ட் மாநிலத்தில் நடந்தது. செவிலியர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இன்னொருவர் கொல்கத்தா மருத்துவக் கல்லூரி மாணவி – பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ளார்.
உத்தராகண்ட் மாநிலம் உத்தம் சிங் நகர் மாவட்டத் தில் உள்ள மருத்துவமனையில் பணிபுரியும் செவிலி யரின் உடல் உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தில் உள்ள அவரது கிராமத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு, கூலித் தொழிலாளி ஒருவர் கைது செய்யப்பட்டார்.
காவல்துறையின் கூற்றுப்படி, குற்றம் சாட்டப்பட்டவர், பரேலியைச் சேர்ந்த தர்மேந்திர குமார் என்பதும் ஜூலை 30 அன்று மருத்துவமனையில் பணி முடிந்து தனியாக வீட்டிற்குச் சென்றபோது, செவிலியரை வழிமறித்து பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது.
அடுத்த நாள், ஜூலை 31 அன்று, செவிலியரின் சகோதரி – வீட்டிற்கு வராததால் காணவில்லை என்று காவல்துறையில் புகார் அளித்தார். ஒரு வாரம் கழித்து, அவரது உடல் காலியான ஒரு இடத்தில் கண்டெடுக்கப்பட்டது.
உத்தம் சிங் நகர் காவல்துறைக் கண்காணிப்பாளர் மஞ்சுநாத் கூறுகையில், “ஜூலை 30 அன்று, எங்க ளுக்கு ஒரு பெண் காணாமல் போனதாக புகார் வந்தது. நாங்கள் அவரைத் தேடியபோது, அவர் உத்தரப்பிரதேசத்தில் உள்ள அவரது கிராமத்தை (தாக்கப்படுவதற்கு முன்பு) அடைந்துவிட்டார் என்பது எங்களுக்குத் தெரிந்தது. ஆகஸ்ட் 8 ஆம் தேதி, அந்தப் பகுதியில் புதர்களில் இருந்து பெண் ஒருவரின் உடல் மீட்கப்பட்டதாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. அது காணாமல் போன செவிலியரின் உடல்தான் என்பது விரைவில் உறுதி செய்யப்பட்டது” என்றார்.
விசாரணையின் போது, ராஜஸ்தானில் பெண்ணின் தொலைபேசியை கண்டுபிடித்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு பெண்ணைப் பின்தொடர்வதைக் காட்டிய தொழில்நுட்ப மற்றும் சிசிடிவி ஆதாரங்களைப் பயன்படுத்தி, அவரைப் பரேலியில் வசிக்கும் தர்மேந்திர குமார் என்று காவல்துறையினர்அடையாளம் கண்டனர், அவர் சில சமயங்களில் உத்தரகாண்டின் உத்தம் சிங் நகரில் உள்ள அந்த பெண் பணியாற்றிய மருத்துவமனையில் தினசரி கூலித் தொழிலாளியாக பணிபுரிந்துள்ளார். அவர் ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டார்.
“குற்றம் சாட்டப்பட்டவர் நீண்ட நாட்களாக அப்பெண்ணைப் பின் தொடர்ந்துள்ளார். கொலை நடந்த நாள் அன்று அந்த செவிலியர் யாருடைய துணையு மின்றி தனியாக செல்வதைக் கண்டு அவரைப் பாலியல் வன்கொடுமை செய்து கொன்றுள்ளார். கொலைக்குப் பிறகு, அவர் அந்தப் பெண்ணின் பொருட்களை எடுத்துக்கொண்டு தப்பிவிட்டார், ”என்று காவல்துறை அதிகாரி கூறினார்.
குற்றம் சாட்டப்பட்டவர் குற்றத்தை ஒப்புக் கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவத்தின் போது அவர் அணிந்திருந்த ஆடைகள் மற்றும் அவரது கைத்தொலைபேசி மற்றும் சிம் கார்டு ஆகியவற்றை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
கொல்கத்தா மருத்துவக் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை நிகழ்வும் உத்தராகண்ட் செவிலியர் கொலை நிகழ்வும் ஒரே வாரத்தில் நடந் துள்ளன. இரண்டு கொலைகளுமே கண்டிக்கப்பட வேண்டியவையே தான். ஆனால் மேற்குவங்க நிகழ்வு மட்டும் அரசியலாக்கப்பட்டுள்ளது. உத்தராகண்ட் விவ காரத்தில் மட்டும் மவுனம் சாதிக்கப்படுகிறது.
அதே போல் ஹிந்தி மீடியாக்களும் இரவு பகலாக மேற்குவங்க நிகழ்வையே பெரிதுபடுத்துகின்றன. உத்தராகண்ட் நிகழ்வு குறித்து சிறு செய்தி கூட வெளி யாகவில்லை.
காரணம் உத்தராகண்டில் பாஜகவின் ஆட்சி நடக்கிறது
கொலை கொலைதான்! பெண்ணென்றால் போகப் பொருள் என்று கருதும் கயமைத்தனத்தை எந்த வகையிலும் நியாயப்படுத்தவே முடியாது. கட்சிகளுக்கு அப்பாற்பட்டு கிளர்ந்து எழ வேண்டும்.
ஆனால் அதனை அரசியல்படுத்துவது மனிதத் தன்மையல்ல.
கொல்கத்தா மருத்துவக் கல்லூரி மாணவிக்கு இழைக்கப்பட்ட கொடூர குற்றத்திற்குக் காரணமான கயவன் அதி வேகத்தில் சீக்கிரத்தில் கண்டுபிடிக்கப்பட்டு, சட்டத்தின் முன் நிறுத்தி கடும் தண்டனை விதிக்கப்பட வேண்டும். இது போன்ற குற்றங்களில் இவையே கடைசியாக இருக்க வேண்டும். பெண்களின் பாதுகாப்புக்குத் துப்பாக்கிகளைக் கொடுப்பதுபற்றியும் சிந்திக்க வேண்டும்.