மம்தா தலைமையில் கொல்கத்தாவில் பிரமாண்ட பேரணி குற்றவாளிக்கு மரண தண்டனை தர வலியுறுத்தல்

Viduthalai
3 Min Read

கொல்கத்தா, ஆக. 18- மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா வில் உள்ள ஆர்.ஜி.கர். அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பெண் மருத்துவர் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட நிகழ்விற்கு எதிராக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா தலைமையில் மாபெரும் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதியும், குற்றவாளிக்கு மரண தண்டனையும் வழங்க வேண்டும் என்று மம்தா வலியுறுத்தினார்.

கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வந்த 31 வயதாகும் பெண் முதுநிலை பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக 33 வயதாகும் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த படுகொலை நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு விசாரணையை கொல்கத்தா காவல்துறையிடமிருந்து சிபிஅய்-க்கு மாற்றி கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் பெண் மருத்துவரின் படுகொலையைக் கண்டித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த பிரச்சினை ஒருபுறம் எனில், சுதந்திர நாளன்று அதிகாலையில் போராட்டக் காரர்கள் போல மருத்துவமனைக் குள் புகுந்த ஒரு கும்பல் பயங்கரமாக தாக்குதல் நடத் தியது. அங்கிருந்த மருத்துவ சாதனங்களை சேதப்படுத்தி, பாதுகாப்புப் பணியில் ஈடு பட்டிருந்த காவல்துறையினர் மற்றும் காவல்துறை வாகனங்கள் மீதும் கல் வீசி தாக்கினார்கள். இதில் 15 காவல்துறையினர் காயமடைந்தனர். இந்த விவகாரத்தில் 19 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து மேற்கு வங்க மாநிலத்தில் மருத்துவர்கள் உடனடியாக ஆளுநரை சந்தித்து அசாதாரண சூழல் நிலவுவதால் பாதுகாப்பு தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இதனிடையே கொல்கத்தாவில் நடைபெற்ற பாலியல் வன் கொடுமை கொலை மற்றும் அதனை தொடர்ந்து நடந்த வன்முறை நிகழ்வு மேற்கு வங்க மாநிலத்தை ஆளும் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் கடும் நெருக்கடியில் உள்ள மம்தா மக்களின் கோபத்தை தணிப்பதற்கான முயற்சியில் இறங்கி உள்ளார். அதன் ஒரு பகுதியாக, பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட நிகழ்வைக் கண்டித்து மம்தா 16.8.2024 அன்று கொல் கத்தாவில் பிரமாண்ட பேரணி நடத்தினார். அதன் தொடர்ச்சியாக, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதியும், குற்றம் செய்தவர்களுக்கு மரண தண்டனையும் வழங்க வேண்டும் என்றும் மம்தா வலியுறுத்தினார்.

இது குறித்து மம்தா கூறுகை யில், “கொல்கத்தா நிகழ்வு தொடர்பாக சமூக ஊடகங்களில் பொய்யான செய்திகளைப் பரப்பி வருகிறார்கள். இதன் மூலம் உண்மையை மறைக்க முயற்சிகள் வேகமாக நடந்து வருகிறது. இந்தச் நிகழ்வில் உண்மை வெளியே வர வேண்டும். ஆனால் அதற்கு பதில் சிலர் மக்களிடையே தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள். இடதுசாரிகளும், பாஜகவும் மேற்கு வங்கத்தில் வங்கதேச பாணியில் கலவரத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள்

ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை சிபிஎம் கட்சியினரும், பாஜகவும் தான் அடித்து நொறுக்கினார்கள் என்பது எனக்கு தெரியும். நள்ளிரவு 12-1 மணிக்குள் அவர்கள் அங்கு சென்ற காட்சிப் பதிவுகள் உள்ளன. பாஜகவினர் தேசியக் கொடியுடன் அங்கு சென்றுள்ளார்கள். அவர்கள் தேசியக் கொடியை அவமதித்துவிட்டார்கள்” என்று மம்தா ஆவேசமாக கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *