அகமதாபாத், ஆக. 17 நிட்டி ஆயோக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கல்வித்தரத்தில் குஜராத் மாநிலம் பின் தங்கியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிட்டி ஆயோக் வெளியிட்டுள்ள இந்த ஆண்டுக்கான நிலையான வளர்ச்சி அறிக்கையில் இந்தத் தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில் கல்வித்தரம் தொடர்பான நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கான மதிப்பீட்டில் கேரளா 82 உடன் முதலிடத்திலும், அரியானா மற்றும் இமாச்சல் பிரதேசம் 77 பெற்று அடுத்தடுத்த இடத்திலும், தமிழ்நாடு 76 பெற்று நான்காம் இடத்திலும் இருக்கின்றன. இந்த மதிப்பீட்டில் குஜராத் 58 புள்ளிகள் மட்டுமே பெற்று ஜார்க்கண்ட், ராஜஸ்தான் மாநிலங்களுக்கும் கீழே உள்ளது.
குஜராத் மாநில அரசு பத்தாண்டு களுக்கும் மேலாக ‘ஷாலா பிரவே ஷோத்சவ்’ என்ற பெயரில் பள்ளிச் சேர்க்கைத் திட்டத்தை நடத்தி வருகிறது. அங்குள்ள மூத்த அய்ஏஎஸ், அய்.பி.எஸ். மற்றும் அய்.எஃப்.எஸ். அதிகாரிகள் கிராமங்களுக்குச் சென்று எந்தக் குழந்தையும் விடுபடாமல் பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க இந்த முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது .
இவ்வளவு முயற்சிகள் செய்தும், 1 – 8 வகுப்பில் நிகர மாணவர் சேர்க்கை விகிதம் 89% ஆக உள்ளது. ஆனால், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் அசாம் 100 சதவீத சேர்க்கைகளையும், ஆந்திரப் பிரதேசம் 96.9% சேர்க்கைகளையும் பெற்றுள்ளது.
மறுபுறம், மாணவர் சேர்க்கை 100% இல்லாமல், மேல்நிலைப் படிப்பை இடைநிறுத்தும் மாணவர்கள் விகிதம் அதிகரித்துள்ளது. 1980 – 1990களின் இடைநிற்றல் விகிதத்துடன் ஒப்பிடும்போது, தற்போது இடைநிற்றல் குறைந்துள்ளதாகக் கூறப்படும் குஜராத்தில் 17.9 விழுக்காடு கல்வி இடைநிற்றல் இருப்பதாக அறிக்கை தெரிவிக்கிறது. கேரளா, அரியானா போன்ற மாநிலங்களில் கூட இடை நிற்றல் விகிதம் 5.5 விழுக்காடு மற்றும் 5.9% அளவிலேயே உள்ளது குறிப் பிடத்தக்கது. மேலும், உயர்நிலை வகுப்புகளில் மாணவர் சேர்க்கை தமிழ்நாடு மற்றும் கேரளாவில் 81 விழுக்காடு மற்றும் 85 விழுக்காடு உள்ள நிலையில், குஜராத்தில் வெறும் 48.2 விழுக்காடு மட்டுமே சேர்க்கை உள்ளது.
குஜராத் அரசு நடத்தும் 1,606 தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாண வர்களுக்கும் ஒரே ஒரு ஆசிரியரைக் கொண்டு இயங்குவதாக கடந்த பிப்ரவரி மாதம் சட்டப்பேரவையில் தெரிவித்திருந்தது. கடந்த 2022 இல் 700 பள்ளிகளில் இதுபோன்று இருந்ததாகவும், கிட்டத்தட்ட ஒரு ஆண்டில் இதனை இரட்டிப்பக்கியதாக அதில் குறிப்பிட்டிருந்தனர்.