மின் கட்டணம் குறைப்பு-மின்வாரியம் முக்கியத் தகவல்

viduthalai
2 Min Read

கன்னியாகுமரி, ஆக. 16- இந்திய அரசின் புதிய மற்றும் புதுப் பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் சூரிய ஒளி மின்சக்தி திட்டத்தை நடைமுறைப்படுத்தி வரும் தமிழ்நாடு மின்சார வாரியம், வீடுகளில் சூரிய மின்தகடு அமைக்க ரூ.30 ஆயிரம் மானியம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. திட்டத்தில் இணைந்தால் 7 முதல் 30 நாட்களில் உங்கள் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் என்று நாகர்கோவில் மின்வாரிய மேற்பார்வைபொறியாளர் கூறினார்.

இதுதொடர்பாக நாகர்கோவில் மின்வாரிய மேற்பார்வை பொறி யாளர் பத்மகுமார் வௌியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: “இந்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் சூரிய ஒளி மின்சக்தி திட்டத்தை தமிழ்நாடுமின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் வீட்டு மேற்கூரைகளில் சூரிய ஒளி மின்தகடு அமைக்க ஒன்றிய அரசு மானியம் வழங்குகிறது.

70 சதுர அடி இடம் தேவை:

எனவே உங்கள் வீடுகளில் 1 கிலோ வாட் சூரிய மின் தகடு அமைக்க சுமார் 70 சதுர அடி இடம் மட்டுமே போதுமானது. 1 கிலோ வாட் சூரிய ஒளி மின் சக்தி திட்டத்தில் ஒரு நாளில் 4 முதல் 5 யூனிட்கள் வரை மின்சாரம் உற்பத்தியாகும். இதற்கான மின்சார உபகரணங்கள் நிறுவ மூலதன செலவு சுமார் ரூ.50 ஆயிரம் ஆகும்.இதில் ரூ.30 ஆயிரம் மானியம் வழங்கப்படும்.

ரூ.30 ஆயிரம் மானியம்:

இந்த 30 ஆயிரம் மானியத் தொகை திட்டம் முடிவுற்ற 7 முதல் 30 நாட்களில் பயனாளியின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். சராசரியாக 400 யூனிட் முதல் 600 யூனிட் வரை பயன்படுத்தும் நுகர்வோர் சூரியஒளி மேற்கூரை மின் சக்தி 1 கிலோ வாட் மின்சார உபகரணம் நிறுவும் போது மின்கட்டணத்தை வெகுவாக குறைக்கலாம்.
தற்போது 400 யூனிட்டுக்கு மின்வாரியத்துக்கு ரூ.1,125 கட்டணம் செலுத்த வேண்டும் என்றால் சூரிய மின்தகடு பொருத்திய பின்னர் நீங்கள் ரூ.206 செலுத்தினால் போதும். இதன் மூலம் ரூ.919 பணத்தை நீங்கள் சேமிக்க முடியும். இந்த திட்டத்தில் சேர Registration pmsuryaghar.gov.in, www.pmsuryaghar.gov.in, www.solorrooftop.gov.in போன்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 9445854568, 9445854477, 9445854481 ஆகிய அலைபேசி எண்களில் உதவி செயற்பொறியாளர்களை தொடர்பு கொண்டு கேட்கலாம்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வீடுகளில் சூரிய மின் தகடு பொருத்தினால், சிறிய வீடுகளுக்கு இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை 900 ரூபாய் வரையிலும், பெரிய வீடுகள் என்றால் இரண்டாயிரம் முதல் 5 ஆயிரம் வரை மிச்சமாகும். இதேபோல் பெரிய வணிக நிறுவனங்கள், அடுக்குமாடிகள் என்றால், விளக்குகள் உள்பட பல்வேறு உபயோகத்திற்கு சோலார் பொருத்தினால் அல்லது சோலார் மூலம் இயங்கும் வகையில் மோட்டார்களை மாற்றினால் லட்சங்களில் மிச்சம் செய்ய முடியும்.

சோலாருக்காக செய்யும் முதலீட்டை சில ஆண்டுகளிலேயே எடுத்துவிட முடியும் என்கிறார்கள் சோலார் நிபுணர்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆண்டின் பெரும்பாலான நாட்கள் சூரிய ஒளி கிடைக்கும் என்பதால் நல்ல பலன் இருக்கும் என்றும், சோலார் திட்டத்தால் மின் கட்டணம் ஒவ்வொரு மாதமும் பெரிய அளவில் சேமிக்கப்படும் என்றும் கூறுகிறார்கள் மின்வாரிய அதிகாரிகள்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *