புதுடில்லி, ஆக.14- உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நீரில் உரிய பங்கை வழங்க வேண்டும் என்று கருநாடகாவிற்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது.
காவிரியில் தண்ணீரை பங்கிடுவது தொடர்பாக தமிழ்நாடு கருநாடகா இடையே 50 ஆண்டுகளாக பிரச்சினை தொடர்ந்து வருகிறது.
தண்ணீர் பங்கீடை சுமூகமாக்கவே உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு அடிப் படையில் காவிரி மேலாண்மை ஆணையமும், அதற்கு துணையாக காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவும் அமைக்கப்பட்டன. காவிரி ஒழுங் காற்றுக் குழு ஒவ்வொரு முறையும் கூடி, தண்ணீர் திறப்பு தொடர்பாக பரிந்துரைகளை வழங்கும். இதில் எந்த மாநிலத்திற்காவது ஆட்சேபனை இருந்தால் காவிரி ஆணையம் கூடி உத்தரவுகள் பிறப்பிக்கும்.
காவிரி ஒழுங்காற்று குழுவின் 100ஆவது கூட்டம் வீனித் குப்தா தலைமையில் காணொலிமூலம் நடைபெற்றது. காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் இன்று (13.8.2024) காலை 11.30 மணிக்கு காணொலி வாயிலாக நடைபெற உள்ளது.
கருநாடகா, தமிழ்நாடு, புதுவை உள்ளிட்ட மாநில அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர். 4 மாநிலங்களில் உள்ள அணைகளின் நீர்இருப்பு, நீர் வரத்து மற்றும் மழைப் பொழி அளவு குறித்து விவாதிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய பாதியளவு தண்ணீர் வரவே இல்லை. இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் 30 அடியாக சரிந்தது.
காவிரி டெல்டாவில் குறுவை, சம்பா சாகுபடிகள் பாதிக்கப்பட்டன. இந்த ஆண்டும் கூட கருநாடகா ஜூன் மாதம் வரை தமிழ்நாட்டுக்குரிய தண்ணீரை திறந்துவிட முரண்டு பிடித்தது.
இந்நிலையில் வரும் காலங்களிலும் உரிய காவிரி நீர் பங்கை தமிழ் நாட்டுக்கு வழங்க கருநாடகா அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்தது. ஜூன் முதல் தற்போது வரை கூடுதலாக 97 டிஎம்சி நீர் தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று கருநாடகா அரசு கூறியுள்ளது.