செபி தலைவர் மீதான குற்றச்சாட்டு நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தேவை காங்கிரஸ் போராட்ட அறிவிப்பு

viduthalai
2 Min Read

திருவனந்தபுரம்,ஆக. 13- ‘செபி’ தலைவர் மீது ஹிண்டன்பர்க் நிறுவணம் தெரிவித்துள்ள குற்றச்சாட்டு தொடாபாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்தாவிட்டால் நாடுதழுவிய போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது.

கடந்த அதானி குழுமம் மீது கடந்த ஆண்டு பங்குச்சந்தை முறைகேடு புகார் தெரிவித்த ஹிண்டன்பர்க் நிறுவனம், தற்போது செபி தலைவர் மாதபி புச்மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கி உள்ளது. அதாவது அதானிகுழும நிதி முறைகேட்டுடன் தொடர்புடைய நிறுவனங்களில் மாதபி புச் மற்றும் அவருடைய கணவர் தவல் புச் ஆகியோர் முதலீடு செய்திருப்பதாக கூறியிருக்கிறது.

இந்த விவகாரம் இந்திய அரசியல் வட்டாரத்தில் மீண்டும் புயலை கிளப்பி இருக்கிறது. இந்த புகார்கள் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைத்து விசாரணை நடத்த ஒன்றிய அரசை காங்கிரஸ் கட்சி மீண்டும் வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் நேற்று (12.8.2024) செய்தியாளர்களிடம் கூறியதாவது-

வேலியே பயிரை மேய்ந்த கதை

அதானி குழுமம் மற்றும் செபி தலைவர்மீது ஹிண்டன் பர்க் கூறியிருக்கும் குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானவை. ஆனால் இந்த விவகாரத்தில் அதானி குழுமம் மற்றும் அதன் தலைவர் கவுதம் அதானியை பிரதமர் மோடி ஆதரிக்கிறார். அவரது மவுனம் நம்பகத்தன்மையை குலைக்கிறது. இந்த பிரச்சினையில் செபியின் அறிக்கை அடிப்படையில்தான் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்து இருந்தது. ஆனால் செபியின் தலைவரும், அவரது கணவரும் அதானி நிறுவனங்களில் தங்கள் முதலீடுகள் குறித்து நீதிமன்றத்தில் தெரிவிக்கவில்லை. இது வேலியே பயிரை மேய்ந்த கதை ஆகும். உச்சநீதிமன்றத்தையே தவறாக வழிநடத்தி உள்ளனர். எனவே இந்த விவகாரத்தை தானாக முன் வந்து உச்சநீதிமன்றம் விசாரிக்க வேண்டும்.

ஹிண்டன்பர்க் குற்றச்சாட் டுகள் தொடர்பாக நீதிமன்றத்தை அணுகுவதற்கான சட்ட அம்சங் களை காங்கிரஸ் ஆய்வு செய்யும். இந்த பிரச்சினையில் இருந்து மக்களை திசைதிருப்புவதற்காக மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக ஒன்றிய அரசு அமலாக்கத்துறையை பயன்படுத்துகிறது.

அமலாக்கத்துறை தாக்கீ துகள் மூலம் ராகுல் காந்தியை அச்சுறுத்த முயற்சிக்க வேண் டாம். இந்த திசைதிருப்பும் தந்திரத்தை நாங்கள் வலுவாக எதிர்ப்போம்.

இந்தியா கூட்டணி போராட்டம்

நாடாளுமன்றக் கூட்டுக் குழுவைக் கண்டு அரசு ஏன் பயப்படுகிறது? மறைக்கவும் பயப்படவும் ஏதோ இருக்கிறது என்பதை இது குறிக்கவில்லையா?

செபி தலைவர் மற்றும் அதானி குழுமங்கள் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுகள் தொடர்பாக நாடாளு மன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும். இந்த கோரிக்கையை ஏற்காவிட்டால் காங்கிரஸ் கட்சியும், இந்தியா கூட்டணியும் இணைந்து நாடு முழுவதும் கடுமையான போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு கே.சி.வேணு கோபால் கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *