புது டில்லி, ஆக. 8- மகாராட்டிர துணை முதலமைச்சர் அஜீத் பவார் தரப்பை ‘உண்மையான தேசியவாத காங்கிரஸ்’ என்று அறிவித்ததற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்க, அவரின் தரப்புக்கு உச்சநீதிமன்றம் 10 நாள்கள் அவகாசம் அளித்துள்ளது.
தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த சரத் பவாருக்கும், அவரின் அண்ணன் மகனும் அக்கட்சியைச் சோ்ந்தவருமான அஜீத் பவாருக்கும் இடையே கடந்த ஆண்டு கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதையடுத்து அக்கட்சியில் பிளவு ஏற்பட்டு இருவா் தலைமையிலும் தனித்தனி அணிகள் உருவாகின. இதைத்தொடா்ந்து மாநில சட்டப் பேரவையில் அஜீத் பவார் அணிக்கு பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருந்ததன் அடிப்படையில், அவரின் அணியே ‘உண்மையான தேசியவாத காங்கிரஸ்’ என்று மகாராட்டிர சட்டப்பேரவைத் தலைவா் ராகுல் நார்வேகா் அறிவித்தார்.
இந்த அறிவிப்புக்கு எதிராக சரத் பவார் அணி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரணைக்குப் பட்டியலிட வேண்டிய தேதி குறித்து உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பார்திவால், மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமா்வு 6.8.2024 அன்று பரிசீலனை செய்தது.
அப்போது அஜீத் பவார் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் என்.கே.கெளல் வாதிடுகையில், ‘சரத் பவார் அணியின் மனுவுக்கு அஜீத் பவார் அணி பதிலளிக்க 3 வாரங்கள் அவகாசம் அளிக்க வேண்டும்’ என்று கோரினார்.
இதைத்தொடா்ந்து அஜீத் பவார் அணியும், அந்த அணியின் 40 சட்டமன்ற உறுப்பினர்களும் பதிலளிக்க நீதிபதிகள் அமா்வு 10 நாள்கள் அவகாசம் அளித்தது.
சிவசேனை வழக்கு
முன்னதாக கடந்த 2022-ஆம் ஆண்டு மகாராட்டிரத்தில் சிவசேனை தலைவராக இருந்த உத்தவ் தாக்கரேக்கும், அக்கட்சியைச் சோ்ந்த ஏக்நாத் ஷிண்டேக்கும் (தற்போது மகாராட்டிர முதலமைச்சர்) இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து அக்கட்சியில் பிளவு ஏற்பட்டு இருவா் தலைமையிலும் தனித்தனி அணிகள் உருவாகின. இதைத்தொடா்ந்து ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணியே ‘உண்மையான சிவசேனை’ என்று மாநில சட்டப்பேரவைத் தலைவா் ராகுல் நார்வேகா் அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு எதிராக உத்தவ் தாக்கரே அணி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.