திண்டுக்கல், ஆக. 8- திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டும் மக்களுக்கான கட்டுமானப் பணி ஆணை மற்றும் கர்ப்பிணிகளுக்கு மருத்துவ ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி 5.8.2024 அன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் அய்.பெரியசாமி கலந்து கொண்டு தலைமையேற்று நடத்தினார். மேலும், சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட உதவிகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியை தொடர்ந்து அமைச்சர் அய்.பெரியசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர், “கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்க ளுக்கு வீடு வழங்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் துவக் கபட்டு, தமிழ்நாடு முழுவதும் வீடு கட்ட ஆணைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக ஏறத்தாள 3 ஆயிரத்து 500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அந்தவகையில், இன்று திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்து 256 பயனாளிகளுக்கு ஆணை வழங்கி உள்ளோம். ஆத்தூர் தொகுதி முழுவதும் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் வெற்றிகரமான ஒரு திட்டம், இத்திட்டத்தின் மூலம் மக்கள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளதை காணமுடிகிறது. அதுமட்டுமல்லாமல், மாணவ மாணவிகளுக்கு மாதம் தோரும் உதவித் தொகை வழங்கும் திட்டம், காலை உணவுத் திட்டம் உள்ளிட்ட திட்டம் அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத திட்டம்” எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “மேலும் ஊராட்சிகளில் வரும் நவம்பர் 5ஆம் தேதி தலைவர்களின் பதவிக்காலம் முடிவடை கிறது. அதன்பின் பொது மக்களிடம் கருத்துகள் கேட்டு, ஆய்வு நடத்தி பெரிய ஊராட்சிகளை பிரிப்பதற்கும், மேலும் மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் அருகே உள்ள ஊராட்சிகளை இணைக்கும் பணிகளுக்கு பின்னர் ஊராட்சித் தேர்தல் நடத்தப்படும்” என்று அவர் தெரிவித்தார்.