மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் கோரிக்கை
புதுடில்லி, ஆக. 7- நேற்று (06.08.2024), நாடாளுமன்றத்தில், நேரமில்லா நேரத்தின் போது 24×7 பெண்கள் உதவி மய்யம் சோழிங்கநல்லூர் மற்றும் நொச் சிக்குப்பம் பகுதிகளில் உடனடியாக திறக்க, ஒன்றிய அரசு ஆவண செய்ய வேண்டும் என்று, ஒன்றிய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் அன்னபூர்ணா தேவி அவர்களிடம் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் கோரிக்கை வைத் தார்.
அதன் விவரம்:-
தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி, சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, பெரும்பாக்கம் செம்மஞ்சேரி கண்ணகி நகர், மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நொச்சிக்குப்பம் ஆகிய பகுதிகள் ஏழை, எளிய மக்கள் நிறைந்த பகுதியாகும். தாம்பரத்தில் உள்ள பெண்கள் உதவி மய்யம் சோழிங்கநல்லூரில் இருந்து 47 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதால் சோழிங்கநல்லூரில் வசிக்கும் மக்களுக்கு உடனடி பயன்கள் ஏதும் கிடைக்காத நிலையில் பெண்களுக்கான உடனடி உதவி கிடைப்பது மிகவும் சிரமமாக உள்ளது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தமிழ்நாடு அரசு ஏழை எளிய பெண்களின் பாதுகாப்பிற்கும், அவர்களுக்கு உரிய அதிகாரம் அளிக்கவும் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆயிரக்கணக்கான வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், பெண்களின் பாதுகாப்பிற்கான 181 என்ற தனியான கட்டணம் இல்லாத தொலைபேசி எண் வசதி, தோழி விடுதி ஆகிய பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
சோழிங்கநல்லூர் மற்றும் மயிலாப்பூர் பகுதியில் பெண்கள் உதவி மய்யம் ஏற்படுத்தப்பட் டால் பெண்களின் அவசரத் தேவை களுக்கும், சட்ட உதவிகளுக்கும், தற்காலிக தங்குமிட வசதிகளுக்கும் பெரிதும் உதவியாக அமைவதோடு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையவும் வாய்ப்பாக அமையும் என்று தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தனது கருத்துகளை தெரிவித்தார். ஒன்றிய அரசின் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் அன்னபூர்ணா தேவி அவர்கள் உடனடியாக தலையிட்டு சோழிங்கநல்லூர் மற்றும் மயிலாப்பூர் பகுதிகளில் பெண்கள் உதவி மய்யம் அமைப்பதற்கு ஆணையிட வேண்டும் என்று தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் கோரிக்கை வைத்தார்.