புதுடில்லி, ஆக. 3- 2024-2025ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தொடர்பான விவாதத்தில் மக்களவையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஒன்றிய அரசை கடுமையாக சாடி பேசினார்.
நாடு தற்போது ஆறு பேரின் கைகளில் உள்ளது. மோடி மார்பில் அணிந்துள்ள தாமரை வடிவிலான சக்கரவியூகத்தில் நாட்டு மக்கள் சிக்கியுள்ளனர். இந்த சக்கரவியூகத்தை நாங்கள் உடைத்தெறிவோம் என்றார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜக எம்.பி. அனுராக் தாக்கூர் பேசினார். அப்போது “ஜாதி பெயர் தெரியாதவர்கள் ஜாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேசுகிறார்கள். RG-1 ஓபிசி இடஒதுக்கீட்டை எதிர்த்தார் என்பதை மக்களவைத் தலைவருக்கு நினைவூட்ட விரும்புகிறேன் என்றார். ராகுல் காந்தியை மறைமுகமாக திட்டினார். இதற்கு ராகுல் காந்தி, நீங்கள் இழிவுப்படுத்திக் கொண்டிருங்கள். நான் தொடர்ந்து போராடுவேன் என பதில் அளித்திருந்தார்.
அனுராக் தாக்கூர் பேசிய காட்சிப் பதிவை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பிரதமர் மோடி, “இளம் மற்றும் மிகுந்த ஆற்றல் உள்ள அனுராக் தாக்கூர் மக்களவையில் பேசியதை அனைவரும் கேட்க வேண்டும். உண்மைகளை நகைச்சுவையுடன் கலந்து அவர் பேசியது, இந்தியா கூட்டணியின் பொய் அரசியல் பிரச்சாரத்தை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரும் பஞ்சாப் மேனாள் முதலமைச்சருமான சரண்ஜித் சிங் சன்னி உரிமை மீறல் தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளார். மக்களவை செயலாளரிடம் அளித்த அந்த தாக்கீதில் “அனுராக் தாக்கூர் பேசியதில் குறிப்பிட்ட ஆட்சேபனைக்கு உரிய கருத்துகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டு உள்ளது. ஆனால் எதையும் நீக்காமல் அனுராக் தாக்கூரின் முழு காட்சிப் பதிவையும் பிரதமர் மோடி வெளியிட்டது அதிர்ச்சி அளிக்கிறது. ஆட்சேபனைக்குரிய வார்த்தைகளையும் மோடி வெளியிட்டார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.