புதுடில்லி, ஆக. 3- நாடாளுமன்றத்தில் சக்கர வியூகம் பற்றி நான் பேசியதால், எனக்கு எதிராக அமலாக்கத்துறை சோதனைக்கு திட்டமிடப்பட்டு வரு கிறது என்று ராகுல் காந்தி கூறினார்.
நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, கடந்த 29ஆம் தேதி.மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசினார், அப்போது, ‘‘மகாபாரதத்தில் 6 பேர் சேர்ந்து ‘சக்கர வியூகம்’ அமைத்து அபிமன்யுவை கொன்றனர்.
அதுபோல், தற்போது 6 பேர் கொண்ட குழு ஒட்டுமொத்த நாட்டையும் சக்கர வியூகத்தால் சுற்றி வளைத்துள்ளது. அந்த சக்கர வியூகத்தை இந்தியா கூட்டணி உடைக்கும்’’ என்று அவர் பேசினார்.
இந்நிலையில், ராகுல்காந்தி 1.8.2024 அன்று தனது ‘எக்ஸ்’ வலைத்தள பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
நாடாளுமன்றத்தில் நான் பேசிய ‘சக்கர வியூகம்’ பேச்சு, சிலருக்குப் பிடிக்கவில்லை என்று தோன்றுகிறது. எனவே, எதிராக அமலாக்கத்துறை சோதனை நடத்த திட்டமிடப்பட்டு வருவதாக அமலாக்கத் துறையில் இருப்பவர்களே என்னிடம் தெரிவித்தனர். அமலாக்கத்துறையை திறந்த கரங்களுடன் வரவேற்க காத்திருக்கிறேன். அவர்களுக்குத் தேநீரும், பிஸ்கட்டும் தருகிறேன்.
-இவ்வாறு அவர் கூறியுள்ளார்.