அனைத்து பக்கங்களில் இருந்தும் நெருக்கடியைச் சந்திக்கும் மாணவச் சமூகம்

viduthalai
5 Min Read

தலைநகர் டில்லியில் உள்ள அய்.ஏ.எஸ். பயிற்சி மய்யங்கள் குறித்து 20.07.2024 ‘விடுதலை’ ஞாயிறு மலரில் குறிப்பிட் டிருந்தோம்

அப்படிப்பட்ட ஒரு பயிற்சி மய்யம் டில்லியில் ராஜேந்திர நகர் எனும் பகுதியில் அமைந்துள்ளது.
அந்த பயிற்சி மய்யத்தில் வெள்ளம் புகுந்ததில் ஓர் ஆண், இரு பெண்கள் என மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர்.
இந்தப் பயிற்சி மய்யத்தில் குடிமைப் பணிகளுக்கான தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்தக் கட்டடத் திற்குள் திடீரென வெள்ளம் சூழ்ந்த நிலையில், அடித்தளத்தில் உள்ள நூலகத்தில் சில மாணவர்கள் தஞ்சம் புகுந்தனர்.

27.7.2024 அன்று மாலை ஏழு மணியளவில் இந்தக் கட்டடத்தை வெள்ளம் சூழ்ந்தது. இதையடுத்து, டில்லி காவல்துறை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் அப் பகுதிக்கு வந்து சிக்கியிருந்தவர்களை மீட்கத் தொடங்கினர்.

ராஜேந்திர நகர் பகுதியில் நடைபெற்ற இக்கோர நிகழ்வைத் தொடர்ந்து, அப்பகுதி யில் உள்ள பயிற்சி மய்யங்களுக்கு வெளியே தொடர்ச்சியாக மாணவர்கள் போராட் டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சம்பவத்தில் நீதி கோரும் அம்மாணவர்கள், டில்லி துணைநிலை ஆளுநருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.

எப்போதும் மழை பெய்த உடனேயே அப்பகுதியில் வெள்ளம் சூழ்ந்துவிடுவதாக அம்மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

“கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறு மழைக்கே இப்பகுதியில் வெள்ளம் சூழ்கிறது. இயற்கைப் பேரிடர் எப்போதாவதுதான் ஏற்படும், ஆனால் இங்கு எப்போதும் நிகழ்கிறது. ஆறு நாள்களுக்கு முன்புகூட படேல் நகரில் மாணவர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்” என்று மாணவர் ஒருவர் தெரிவித்தார்.

மற்றொரு மாணவர், இப்பகுதியில் 80% நூலகங்கள் அடித்தளத்தில் அமைந்துள்ள தாகத் தெரிவித்தார்.
பயிற்சி மய்யத்தில் வெள்ளம் சூழ்ந்ததில் மூன்று மாணவர்கள் பலி – என்ன நடந்தது?

மாணவர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து கூடுதல் காவல் துணை ஆணையர் சச்சின் ஷர்மா அப்பகுதிக்குச் சென்று மாணவர்களை சமாதானம் செய்ய முயன்றார்.

போராட்டம் நடத்திய மாணவர்களிடம், “மூன்று மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். 11 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். நான்கு பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கிறேன்,” என அவர் தெரிவித்தார்.

ஒன்றிய துணை காவல் ஆணையர் எம். ஹர்ஷ்வர்தன் கூறுகையில், “அடித்தளத்தில் உள்ள நூலகத்தில் இருந்து மூன்று பேரின் உடல்களை மீட்டுள்ளோம். கட்டடத்தின் மற்ற பகுதிகளில் இருந்தவர் களையும் மீட்டுள்ளோம். இந்நிகழ்விற்கு எதிராக குற்ற வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது” என்றார்.

இதுதொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் மேலும் சிலரிடமும் விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

டில்லியின் பழைய ராஜேந் திர நகர், படேல் நகர், லட்சுமி நகர், கரோல் பாக் உள்ளிட்ட பகுதிகளில் எண்ணற்ற பயிற்சி மய்யங்கள் உள்ளன. குறிப்பாக, குடிமைப் பணிகள், சி.ஏ., வங்கித் தேர்வுகளுக்குப் பயிற்சி அளிக்கும் மய்யங்கள்அதிகம். ஆனால், அங்கு கட்டுமான அமைப்புகள் மிகவும் மோசமாக உள்ளன.

“இந்தப் பகுதி பலவிதங்களில் ஆபத் தாக உள்ளது. சிறிய மழை பெய்தாலே முழங்கால் அளவு தண்ணீர் தேங்கிவிடும். இங்கு பெரும்பாலும் பயிற்சி மய்யங்கள் தான் உள்ளன. குடியிருப்புப் பகுதி என்ப தால் பெரும்பாலும் ஆட்சியாளர்கள், அதிகாரிகளின் கவனிப்பு இங்கு இருக்காது. வெளிமாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் அதிகம் படிப்பதால், தேர்தல் நேரங்களில்கூட அரசியல்வாதிகள் அங்கு வர மாட்டார்கள்” என அவர் கூறுகிறார்.

பயிற்சி வகுப்புகள், தங்கும் அறைகள் என அதிக பணம் புழங்கும் இடமாக இருந்தாலும், மோசமான உள்கட்டமைப்பு போன்றவைதான் இங்கு தொடர்கதையாக உள்ளது

கோர நிகழ்வு நடந்த மய்யத்தில் அடித் தளத்தில்தான் நூலகம் இருக்கும். பயிற்சி மய்யங்கள் சிறியதாகத்தான் இருக்கும்,” பெரும்பாலான பயிற்சி மய்யங்களில் ஓராண்டுக்கு சுமார் 1.5 முதல் 1.8 லட்சம் வரை கட்டணம் வசூலிப்பார்கள்

அந்தப் பகுதியில் மின்சார வயர் களை பார்த்தாலே அது எவ்வளவு ஆபத்தானது எனத் தெரியும். பயிற்சி மய்யங்கள் மட்டுமல்லாமல் மாணவர்கள் அப்பகுதிகளில் தங்கும் வீடுகளும் மிக மோசமான நிலை யிலேயே இருக்கும்.

பெரும்பாலும் 400 சதுர அடி அறையில் ‘பங்க் படுக்கைகள்’ அமைக்கப்பட்ட வடிவத் தில்தான் அறைகள் இருக்கும். அதில் 4-6 பேர் தங்க வேண்டும். அறையில் போதிய வெளிச்சம்கூட இருக்காது. தீயணைக்கும் கருவி, அவசர வழி இருக்காது. கட்டடங்கள் மிக நெருக்கமாக இருக்கும். ஆனால், அதற்கு 10,000 முதல் 18,000 வரை வாடகை ஆகும்.
இதுமட்டுமின்றி, பயிற்சி மய்யங்களில் இணைய நூலக வசதி எனக் கூறி நாற்காலி, மேசை மட்டும் அமைத்து, அதைப் பயன்படுத்துவதற்கு, ஒவ்வொரு மணிநேரத்திற்கும் ஒரு தொகை என மாணவர்களிடம் வசூல் செய்வார்கள்
போதிய அடிப்படை வசதிகளோ பாதுகாப்பு அம்சங்களோ இல்லாத நிலை யிலேயே அப்பகுதியில் உள்ள பயிற்சி மய்யங்கள் உள்ளன. அங்கு அதிகளவில் வெளிமாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களே அதிகம் படிப்பதால் அரசியல்வாதிகளும் இந்தப் பிரச்னைகள் மீது அதிக அக்கறை செலுத்துவதில்லை  ஆம் ஆத்மி கட்சி, இந்த விவகாரத்தில் டில்லி மாநகராட்சியை நீண்டகாலமாக ஆட்சி செய்த பாஜகவுக்கு பதிலடி கொடுத்துள்ளது.

அப்பகுதியின் ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர் துர்கேஷ் பதக், சம்பவ இடத் திற்கு வந்து பார்வையிட்டார். அப்போது, இந்தச் சம்பவம் நடந்த இடம் தாழ்வான பகுதி என்றும், திடீரென வடிகால் உடைந்து விட்டதாகவும் கூறினார். மேலும், காவல்துறை இதுவரை அதிகாரபூர்வ தகவல் எதையும் தெரிவிக்கவில்லை என்றும் கூறினார்.

அதோடு, இதில் அரசியல் செய்ய வேண்டிய அவசியமில்லை எனக் கூறிய துர்கேஷ் பதக், “15 ஆண்டுகளாக கவுன் சிலராக இருந்தபோது, இங்கு ஏன் வடிகால் கட்டவில்லை என்பதை பாஜக விளக்க வேண்டும். ஓர் ஆண்டில் அனைத்து வடிகால் களையும் கட்டிவிட முடியாது” என்றார்.

இதற்கிடையில், இந்தச் சம்பவத்திற்குப் பொறுப்பாகும் எந்த அதிகாரியாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டில்லி மேயர் ஷைலி ஓபராய் கூறினார்.

விசாரணைக்கு உத்தரவிட்ட
டில்லி அரசு

டில்லி அரசின் அமைச்சர் அதிஷி இந்த விவகாரத்தை விசாரித்து 24 மணி நேரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாஜிஸ்திரேட்டுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கில் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம், முகர்ஜி நகரிலுள்ள ஒரு பயிற்சி மய்யத்தில் தீ விபத்து ஏற்பட்டது. அதில் மாணவர்கள் கூரையிலிருந்து வெளியே குதித்து உயிர் பிழைத்தனர்.

ஒருபுறம் நீட் தேர்வு மோசடி, வேலை வாய்ப்பு தேர்வு வினாத்தாள் கசிவு, யுபிஎஸ் இ தேர்வில் தேர்ச்சிபெற்று பதவியில் உள்ளவர்கள் போலிச்சான்றிதழைக் கொடுத்து பதவியில் இருப்பது போன்றவைகளால் நெருக்கடிக்கு ஆளாகி இருக்கும் மாணவர்கள் தற்போது பயிற்சிக்குப் படிக்கும் போதே ஒன்றிய அரசின் தரமாற்ற உட்கட்டமைப்பு பணிகளால் உயிரை மாய்க்கும் நிலைக்கு வந்துவிட்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *