புதுடில்லி, ஆக.2 புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் மழை நீர் சொட்டிய விவகாரத்தை கையில் எடுத்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஒன்றிய அரசை கடுமையாக விமர்சித்துள்ளனர். டில்லியில் நாடாளு மன்றத்தின் புதிய கட்டிடம் கடந்தாண்டு மே மாதம் பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது. மிக நவீன தொழில் நுட்பத்துடன் ஆனால் டில்லியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரண மாக, புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் உள்ள கூடம் ஒன்றின் மேற்கூரையிலிருந்து நேற்று தண்ணீர் சொட்டியது.
அந்த தண்ணீர் தரையில் சிதறாமல் இருக்க பிளாஸ்டிக் வாளி ஒன்றும் வைக்கப்பட்டிருந்தது. இந்த காட்சிப் பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது. இது குறித்து எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர்,
‘‘வெளியே வினாத்தாள் கசிவு –- உள்ளே மழை நீர் கசிவு. நாடாளுமன்றத்தின் புதிய கட்டடம் கட்டி ஓராண்டுதான் ஆகிறது. அதற்குள் குடியரசுத் தலைவர் அறைக்கு அருகே உள்ள பொதுக்கூடத்தில் மழை நீர் கசிகிறது. புதிய கட்டடம் மழைக்காலத்துக்கு தாக்குபிடிக்குமோ என்பது குறித்து உடனே ஆராய வேண்டும். மழைநீர் கசிவுக்கான காரணம் குறித்து விசாரிக்க சிறப்புக் குழுவைஅமைக்க வேண்டும். இது குறித்து மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம் தாக்கல் செய்துள்ளேன்’’ என பதிவிட்டுள்ளார். சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறுகையில், ‘‘பல ஆயிரம் கோடி செலவில் கட்டப்பட்ட புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை விட, பழைய நாடாளுமன்ற கட்டடம் சிறந்தது. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வரை, நாம் ஏன் பழைய நாடாளுமன்ற கட்டடத்துக்கு செல்லக் கூடாது?’’ என குறிப்பிட்டுள்ளார். ஆம் ஆத்மி கட்சி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ‘‘ரூ.1200 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய நாடாளுமன்ற கட்டடம், ரூ.120 மதிப்புள்ள பிளாஸ்டிக் வாளியை சார்ந்து உள்ளது’’ என கிண்டல் அடித்துள்ளது.