மக்களவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் வயநாடு நிலச்சரிவு பிரச்சினையில் பிஜேபி – காங்கிரஸ் மோதல் : அவை ஒத்திவைப்பு

2 Min Read

புதுடில்லி,ஆக.2- வயநாடு பேரிடர் தொடர்பாக மக்களவையில் பாஜனதா, காங்கிரஸ் உறுப்பினர்களிடையே மோதல் ஏற்பட்டதால் அவை ஒத்தி வைக்கப்பட்டது.
கவன ஈர்ப்பு தீர்மானம்
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவு ஏராளமான உயிர்களை காவு வாங்கி இருக்கிறது. அங்கு தோண்ட தோண்ட பிணங்களாக கண் டெடுக்கப்பட்டு வருவது நாட்டையே உலுக்கி வருகிறது.
இந்த பேரிடர் குறித்து நாடாளுமன்ற மக்களவையில் 31.7.2024 அன்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து விவாதிக்கப்பட்டது.
இந்த தீர்மானத்தின் தொடக்கத்தில் உரையாற்றிய ஒன்றிய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த்ராய் கேரளாவில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக முன்கூட்டியே எச்சரித்து இருந்ததாக தெரிவித்தார்.

பா.ஜனதா எம்.பி. குற்றச்சாட்டு
பா.ஜனதா எம்.பி. தேஜஸ்வி சூர்யா பேசும்போது, வயநாடு தொகுதி மேனாள் மக்களவை உறுப்பினராக இருந்த ராகுல் காந்தி மீது குற்றம் சாட்டினார். அதாவது, தனது தொகுதியின் நிலச்சரிவு விவகாரங்களை ராகுல் காந்தி ஒருபோதும் அவையில் எழுப்பியது இல்லை என சாடினார். மேலும் கேரள பேரிடர் மேலாண்மை நிறுவனம் அறிவுறுத்தியும் கூட மாநில அரசு வயநாட்டில் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

அவை ஒத்திவைப்பு
ராகுல்காந்திமீது தேஜஸ்வி சூர்யா கூறிய குற்றச்சட்டுக்கு காங்கிரஸ் உறுப் பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு பா.ஜனதாவினரும் பதிலளித்து பேசியதால், இரு தரப்புக்கும் இடையே கடுமையான வார்த்தை மோதல் ஏற்பட்டது. இவ்வாறு அவையில் பெரும் கூச்சல், குழப்பம் நிலவியதால் சபாநாயகர் ஓம் பிர்லா அவையை ஒத்திவைத்தார். பின்னர் அவை மீண்டும் கூடிய போது காங்கிரஸ் உறுப்பினர் வேணு கோபால் கவன ஈர்ப்பு தீர்மானம்மீது பேசினார்.
அவர் கூறுகையில், ‘வயநாடு தொகுதி உறுப்பினராக ராகுல் காந்தி, அங்குள்ள சூழலியல் சிக்கல்கள் குறித்து பலமுறை அவையில் பேசியிருக்கிறார்.

அவையின் ஆவணங்கள் அதை நிரூபிக்கும். இந்த விவாதத்தை சீர்குலைக்கவே அவர்மீது தேஜஸ்வி சூர்யா குற்றம் சாட்டியுள்ளார். தனது தவறான கருத்துக்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.
ராகுல் காந்தி பேச்சு மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும். வயநாடு தொகுதி மேனாள் எம்.பி.யாக இருந்த ராகுல் காந்தி பேசும்போது கூறியதாவது:-
வயநாடு மக்களுக்கு நாம் உத வுவது மிகவும் முக்கியம். இந்த கடினமான நேரத்தில் வயநாட்டு மக்களுக்கு உதவுமாறு அரசை கேட்டுக் கொள்கிறேன்.

வயநாட்டில் இதுபோன்ற பேரிடர் நிகழ்வது இது 2ஆவது முறை என நினைக்கிறேன். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பும் நிலச்சரிவு ஏற்பட்டிருப்பதால் அங்கு சூழலியல் பிரச்சினை இருப்பது உறுதியாகிறது. எனவே இது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். உயர் தொழில் நுட்ப தீர்வு எதுவாக இருந்தாலும் அது சிறந்தது. இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

தொகுதி மேம்பாட்டு நிதி
வயநாடு பேரிடரில் மீட்புப் பணிகளை மேற்கொள்ளும் ராணுவம் உள்ளிட்ட பிரிவினருக்கு அவர் பாராட்டும் தெரிவித்தார்.
சுனாமி பாதிப்புக்கு உதவியது போல, நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாடாளுமன்ற உறுப்பி னர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நேரடியாக உதவ அரசியல் கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்துமாறு மக்களவைத் தலைவரை புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி உறுப்பினர் பிரேமச்சந்திரன் கேட்டுக் கொண்டார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *