சங்பரிவார்க் கூட்டம் வரலாற்றைப் புரட்டுவதிலும் திரிபுவாதம் செய்வதிலும் மகாமகா சாமர்த்தியர்கள் – இதற்காகத் தொழிற்சாலை வைத்தே ஆட்களைத் தயார்படுத்தக் கூடியவர்கள் போலும்!
தேசிய விருது பெற்றவரான – வரலாற்றுத் திரைப் படங்களை எடுக்கக் கூடியவரான ஒரு பெண்ணின் பேட்டியைப் படித்தால் – இப்படியும்கூட நடக்குமா?’ என்று அதிர்ச்சியைத்தான் ஏற்படுத்தும்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு, தேசிய விருது பெற்றவரும் வரலாற்றுத் திரைப்படங்களை எடுக்கும் பெண் இயக்குநருமான சுதா கொங்கரா பேட்டி அளித்திருந்தார். அப்போது சாவர்க்கர் குறித்து பேசிய போது “நான் வரலாற்று மாணவி. நான் உமன் ஸ்டடிஸ் படிப்பு படித்துக்கொண்டு இருக்கும் போது, எனக்குப் பாடம் எடுத்த ஆசிரியர் ஒருவர், சாவர்க்கர் கதையைச் சொன்னார். அதாவது, சாவர்க்கர் மிகப் பெரிய தலைவராக இருந்த போது, அவர் தன்னுடைய மனைவியை நீ படிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்திக் கொண்டே இருந்தார்.
ஆனால் அவரது மனைவிக்கு வீட்டில் இருக்க வேண்டும், வீட்டில் உள்ள வேலைகளை கவனித்துக் கொண்டு இல்லத்தரசியாக தன்னுடைய வாழ்க்கையைக் கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான் ஆசையாக இருந்தது.
அந்த நேரத்தில் பெண்கள் யாரும் படிக்கப் போக மாட்டார்கள்; அவர் படிக்கச் செல்லும் போது, தெருவில் பலர் அவரை அவமானப்படுத்துவார்கள். இதனையடுத்து, அவர் நான் பள்ளிக்குச் செல்ல மாட்டேன் என்று சொல்லி, வீட்டிற்கு திரும்பி வந்து விடுவார்.
இதை கவனித்த சாவர்க்கர், நான் உன்னை அழைத்துச் செல்கிறேன். யார் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம் என்று, மறுபடியும் அவரது கையைப் பிடித்துப் பள்ளிக்கு அழைத்துச் செல்வார் – இது சரியா தவறா…? என்ற கேள்வியைக் கேட்டேன். என்னுடைய தாத்தா, சகுந்தலாவின் கதையைச் சொல்லும் பொழுதும், எனக்குப் பல கேள்விகள் எழுந்தன. அவர் ராமர் சீதையோடு வனவாசம் சென்றதை, மிகவும் பக்தி மயமாக சொல்லிக் கொண்டிருப்பார். அவரிடம் நான் பல கேள்விகளை எழுப்புவேன்.
ஆண், பெண் விவகாரத்தில் ஏன் அங்கு வித்தி யாசம் என்ற ஒன்று வருகிறது. நான் உடல் ரீதியான வித்தி யாசத்தை சொல்லவே இல்லை. எனக்கு அது தேவையே கிடையாது. ஒரு ஆண் அளவுக்கு ஒரு பெண்ணுக்கு வலிமை இல்லை என்பதை ஒத்துக்கொள்கிறோம்.. ஆனால், நான் ஒரு பெண் என்பதாலேயே நான் தாழ்வு மனப்பான்மையோடு இருக்கிறேன் என்று சொல்வ தெல்லாம் கேள்விக்கு உட்பட்டது. இந்த மாதிரியான கேள்விகளை என்னுடைய படங்களில் எந்த அளவுக்கு எழுப்ப முடியுமோ, அந்த அளவுக்கு நான் எழுப்புவேன்” என்று சுதா கொங்கரா பேசியிருந்தார்.
இது சமூகவலைதளங்களில் பெரும் பேசும் பொரு ளானது – ஜோதிபா பூலே மற்றும் சாவித்திரிபாய் புலேவின் வரலாற்றை சாவர்க்கரின் வரலாறு என சுதா கொங்கரா திரித்துப் பேசியதாக விமர்சித்தனர்.
ஜோதிபா பூலே தனது மனைவி சாவித்திரிபாயை படிக்க வைத்தார். அப்போது அவர்கள் இருவரும் அந்தப் பிற்போக்கு சமூகத்தால் ஒடுக்கப்பட்டனர். அந்த ஒடுக்குமுறையை மீறி இந்தியாவின் முதல் பெண் ஆசிரியராக சாவித்திரிபாய் உருவெடுத்தார். இதுதான் வரலாறு என்று பலரும் சுதா கொங்கராவை சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்தனர்.
இந்நிலையில் ஜோதிபா பூலே மற்றும் சாவித்திரிபாய் புலேவின் வரலாற்றை சாவர்க்கரின் வரலாறு என மாற்றி கூறியதற்கு சுதா கொங்கரா மன்னிப்புக் கேட்டுள்ளார்.
இது தொடர்பான அவரது எக்ஸ்தளப் பதிவில், “என் தவறுக்கு வருந்துகிறேன். எனது பதினேழாவது வயதில் பெண் கல்வி குறித்த எனது வகுப்பு ஒன்றில் எனது ஆசிரியர் சொன்னதை வைத்து நான் அந்த நேர்முகத்தில் பேசியிருந்தேன். ஒரு வரலாற்று மாணவியாக அதன் உண்மைத் தன்மையை நான் சோதித்திருக்க வேண்டும். அது என் பக்கத்தில் உள்ள தவறுதான். எதிர்காலத்தில் அப்படி நேராது என்று உறுதியளிக்கிறேன். மற்றபடி ஒருவருடைய உன்னதமான செயலுக்கான புகழை இன்னொருவருக்குத் தர வேண்டும் என்ற நோக்கம் எனக்கு இல்லை. எனது பேச்சில் இருந்த தகவல் பிழையை சுட்டிக் காட்டியவர்களுக்கு நன்றி. ஜோதிபா புலே மற்றும் சாவித்திரிபாய் புலே ஆகியோருக்கு என்றும் தலை வணங்குகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
பார்ப்பனர்கள் ஒவ்வொரு தளத்திலும் வரலாற்றை எப்படி எப்படியெல்லாம் மாற்றுவார்கள் – திணிப்பார்கள் தவறான தகவல்களைச் சொல்லிக் கொடுப்பார்கள் என்பதற்குப் பச்சையான எடுத்துக்காட்டுக்கு இது ஒன்றே போதாதா?
இந்த நிலையில் பழங்குடியின மாணவர்கள் படிக்கும் ஏகலைவா பள்ளியில் பார்ப்பனர்களை ஆசிரியர்களாக நியமித்து வருகின்றது ஒன்றிய பிஜேபி அரசு. அவர்கள் மாணவர்களுக்கு எதைச்சொல்லிக்கொடுப்பார்கள் என்று இப்போதே தெரிந்துகொள்ளலாம்.
அதே போல் மேனாள் கருநாடக நாடாளுமன்ற உறுப் பினரும் ஒன்றிய இணை அமைச்சராக இருந்தவருமான அனந்த குமார் ‘‘அம்பேத்கர் அரசமைப்புச்சட்டத்தின் குழுவில் உறுப்பினராக இருந்தார் – அதன் தலைவர் ராஜேந்திரப் பிரசாத் தான். ஆனால் வரலாற்றில் அம் பேத்கர் தான் அரசமைப்புச் சட்டத்தின் தந்தை என்று திரித்துக்கூறி வருகின்றனர்’’ என்று பேசி இருந்தார். இதற்குக் கடுமையான எதிர்ப்புக் கிளம்பியதும் எனது ஆசிரியர் அவ்வாறு சொல்லி இருந்தார் என்று மழுப்பினார்.
அரசியல் நிர்ணய சபைக்கும் அரசமைப்புச் சட்ட வரைவுக் குழுவுக்கும் உள்ள வேறுபாடு தெரியாதவர்கள் எல்லாம் தகுதி – திறமைக்குப் பெயர் போனவர்களாம் – வெட்கக் கேடு!