பழங்குடியின பெண்கள் தாலி அணியக்கூடாது என்று கூறியதால் ஆசிரியை பணியிடைநீக்கமாம்!

Viduthalai
2 Min Read

ஜெய்ப்பூர், ஜூலை 29- ராஜஸ்தானில் பழங்குடியின பெண்கள் தாலி அணியக்கூடாது என்று கூறிய ஆசிரியை பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் சாடா பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் மேனகா தாமோர். ஆதிவாசி பரிவார் சன்ஸ்தா என்ற அமைப்பின் நிறுவனரான இவர், கடந்த 19 ஆம்தேதி பன்ஸ்வாரா பகுதியில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு பேசினார்.

இந்த பேரணியில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத் மற்றும் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பழங்குடி மக்கள் பங்கேற்றனர். இதில் பேசிய மேனகா தாமோர், ‘‘பண்டிதர்கள் கூறுவதை பழங்குடியின பெண்கள் பின்பற்றக் கூடாது. பழங்குடியின பெண்கள் பொட்டு வைக்கவோ, தாலி அணியவோ கூடாது. பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும். விரதங்களை கடைப்பிடிப்பதை நிறுத்துங்கள். நாம் இந்துக்கள் அல்ல’’ என்று பேசினார்.

அவரது பேச்சுக்கு பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த பல்வேறு தரப்பினர் அதிருப்தி தெரிவித்தனர். இந்த நிலையில், ராஜஸ்தான் அரசின் நடத்தை விதிகளை மீறியதாகவும், கல்வித்துறையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாகவும் கூறி ஆசிரியை மேனகா தாமோரை பணியிடைநீக்கம் செய்து ராஜஸ்தான் மாநில கல்வித்துறை இணை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் 55% கூடுதலாக பெய்த தென்மேற்கு பருவமழை 

சென்னை, ஜூலை 29-தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் வரை 4 மாதங்கள் வரை பெய்யும்.

நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிர மடைந்துள்ளது. கருநாடகா, கேரளாவில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. கேரளா மட்டுமின்றி அதன் அண்டை மாநிலமான தமிழ்நாட்டிலும் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. அதன்படி ஜூன் ஒன்றாம் தேதி முதல் இன்று (ஜூலை 29) வரை தமிழ்நாட்டில் 179.3 மி மீ மழை பெய்துள்ளது.இந்த காலகட்டத்தில் தமிழ்நாட்டில் பெய்யும் சராசரி மழை அளவு 115.6 மி மீ ஆகும். ஆகவே தற்போதுவரை தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 55% அதிகமாக பெய்துள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *