சென்னை, ஜூலை 28 ‘ஒன்றிய பாஜக அரசு, அரசியல் நோக்கத்துடன் அரசை நடத்துவதால், ‘நிட்டி ஆயோக்’ கூட்டத்தை புறக்கணித்து மக்கள் மன்றத்தில் பேச வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறேன்’ என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் நேற்று (27.7.2024) அவர் வெளியிட்ட காட்சிப் பதிவில் கூறியிருப்பதாவது:
இந்நேரம் டில்லியில் நடைபெறும், பிரதமர் தலைமையிலான ‘நிட்டி ஆயோக்’ கூட்டத்தில் பங்கெடுத்திருக்க வேண்டிய நான், ஒன்றிய பாஜக அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை கொண்ட நிதிநிலை அறிக்கையால், நீதி கேட்டு, மக்கள் மன்றமான உங்கள் முன் பேச வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறேன்.
ஒன்றிய பாஜக அரசு, தொடர்ச்சியாக தமிழ்நாட்டைப் புறக்கணித்து வருகிறது. தமிழ்நாட்டுக்கு அவர்கள் அறிவித்த ஒரே ஒரு சிறப்புத்திட்டம் என்றால், அது, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைதான். ஆனால், அதுவும் பத்தாண்டுகள் ஆகியும் என்ன நிலைமையில் இருக்கிறதென உங்களுக்கே நன்றாகத் தெரியும்.
பா.ஜ.க. திருந்தியிருக்கும்
என நினைத்தேன்; ஆனால்,
ஏமாற்றம்தான் மிஞ்சியுள்ளது!
மூன்றாவது முறையாக ஒன்றியத்தில் பாஜக ஆட்சி அமைத்துள்ளது. ஆனால், இந்திய மக்கள் அந்த கட்சிக்குப் பெரும்பான்மை அளிக்கவில்லை. ஒரு சில மாநிலக் கட்சிகளின் ஆதரவு இல்லையென்றால், பா.ஜ.க.வால் ஆட்சி அமைத்திருக்க முடியாது. இப்படிப்பட்ட நிலை யில், தங்களின் சறுக்கலுக்கு என்ன காரணம் என்று உணர்ந்து, பா.ஜ.க. திருந்தியிருக்கும் என நினைத்தேன். ஆனால், ஏமாற்றம்தான் மிஞ்சியுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் திட்ட 2 ஆம் கட்டப் பணிகளுக்காக ஒன்றிய அரசு, தன்னுடைய பங்காக ஒரு ரூபாய் கூட விடு விக்காமல், வேண்டுமென்றே 3 ஆண்டுகளாக காலம்தாழ்த்திக் கொண்டு இருக்கிறது. கோவை, மதுரை மாநகரங்களில் மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்துவதற்கான ஒப்புதல் அளிப்பதைப் பற்றி மூச்சே விடவில்லை. கடந்த ஆண்டு 2 முறை புயல்கள் தாக்கி, கடும் இயற்கைப் பேரிடர்களை தமிழ்நாடு சந்தித்தது. இதற்கு நிவாரணமாக, ரூ.37 ஆயிரம் கோடி கேட்டோம்.
வழக்கமாக விடுவிக்கப்பட
வேண்டிய நிதியைக்கூட
நிறுத்தி வைத்துள்ளார்கள்!
ஆனால், ஆண்டுதோறும் வழக்கமாக வழங்கப்பட வேண்டிய ரூ.276 கோடி நிதியை அளித்துவிட்டு, ஏமாற்றி விட்டார்கள். நிதிநிலை அறிக்கையிலாவது வெள்ள நிவாரண அறிவிப்பு வெளியாகுமென காத்திருந்தோம். ஆனால், தங்களின் பதவி நாற்காலிக்கு, கால்களாக இருக்கும் மாநிலங்களுக்கு பத்தாயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் நிதியை அள்ளி வழங்கியிருக்கிறார் ஒன்றிய நிதி அமைச்சர். தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையை முடக்கும் வகையில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படுத்தப்பட்டு வரும் ‘‘அனைவருக்கும் கல்வி இயக்கம்’’ திட்டத்தின்கீழ், வழக்கமாக விடுவிக்கப்பட வேண்டிய நிதியைக் கூட நிறுத்தி வைத்துள்ளார்கள்.
ஜிஎஸ்டியால் தமிழ்நாட்டிற்கு ஏற்பட்டி ருக்கும் இழப்பை சரிக்கட்டுவதற்கான ரூ.20 ஆயிரம் கோடி இழப்பீட்டையே இன்னும் அளிக்காத இந்த ஒன்றிய அரசுக்கு, மாநிலங்களின் வரிவிதிப்பு முறையை மாற்றி அமைக்கும் அதிகாரத்தை யார் கொடுத்தது? கடந்த பத்தாண்டுகளாக வருமான வரிச்சலுகை இன்றி தவித்துக்கொண்டு இருக்கும் நடுத்த ரக் குடும்பங்களுக்கு, வெறும் ரூ.17,500 சலு கையை மட்டும் வழங்கி, அந்த சலுகையும் பெரும்பான்மையோருக்கு கிடைக்காமல் செய்து கொண்டு, பெரும் வரிச்சலுகை கொடுத்ததாக மார்தட்டிக் கொள்கிறது இந்த ஒன்றிய அரசு.
மேலும் மேலும் தவறு செய்கிறீர்கள்; மேலும் மேலும் தோல்விகளைச் சந்திப்பீர்கள்!
இது தமிழ்நாட்டை பழிவாங்கும் நிதிநிலை அறிக்கை மட்டுமல்ல, ஒட்டு மொத்த இந்திய நாட்டு மக்களையே பழிவாங்கும் நிதிநிலை அறிக்கை. சுயநலத்துக்காக, நாற்காலியை காப்பாற்றிக் கொள்ள போட்டுக்கொண்ட நிதிநிலை அறிக்கை இது. ஒன்றிய அரசுக்குத் தமிழ்நாடு மக்களின் குரலாக, ஏன், இந்திய நாட்டு மக்களின் குரலாக ஒன்றை சொல்கிறேன். மேலும் மேலும் தவறு செய்கிறீர்கள். மேலும் மேலும் தோல்விகளைச் சந்திப்பீர்கள்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.