தன்னுடைய அறிவுக்கு வட்டம் போட்டுக் கொள்ளாத சுய சிந்தனையாளர் பெரியார்!
பெரியார் விஷன் ஓடிடி தொடக்க விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர்
சென்னை, ஜூலை 27 தந்தை பெரியார் அவர்கள் மேடையில் உரையாற்றிக் கொண்டிருக்கும்பொழுது, நாங்கள் குறிப்புகளை எழுதுவோம். கல்லூரிகளில் நாங்கள் பெறாத அறிவை, பல்கலைக் கழகங்களில் பெற முடியாத அறிவை – அப்பொழுது நாங்கள் பெற்றிருக்கின்றோம்; அதுதான் எங்களுக்குக் கிடைத்த தனி வாய்ப்பு – சிறப்பான வாய்ப்பாகும். இந்த சிந்தனைக்கு காரணம் என்னவென்றால், வழக்கமான படிப்பு என்று சொன்னால், ஒரு வட்டம். அந்த வட்டத்தைத் தாண்டி நம்மால் சிந்திக்க முடியாது. ஆனால், அவர் தன்னுடைய அறிவுக்கு வட்டம் போட்டுக் கொண்டதே கிடையாது. அதனால் அவர் ஒப்பற்ற சுய சிந்தனையாளர் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
பெரியார் விஷன் ஓடிடி தொடக்க விழா!
கடந்த 21.7.2024 அன்று காலை சென்னை பெரியார் திடல் எம்.ஆர்.இராதா மன்றத்தில் திராவிட முன்னேற்றக் கழகத் துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினருமான கனிமொழி அவர்கள் சமூகநீதிக்கான உலகின் முதல் ஓடிடி தளமாக, லிபர்ட்டி கிரியேஷன்ஸ் சார்பில், ‘பெரியார் விஷன்’ ஓடிடி தளத்தினைத் தொடங்கி வைத்தார். இவ்விழாவில் சிறப்புரையாற்றினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
அவரது சிறப்புரை வருமாறு:
தன்னுடைய உழைப்பால், ஆற்றலால்,
அறிவுத் திறத்தால் உயர்ந்திருக்கிறார்கள் கனிமொழி கருணாநிதி!
மிகுந்த எழுச்சியோடும், நெகிழ்ச்சியோடும் நடை பெறக்கூடிய இந்த அற்புதமான பெரியார் விஷன் ஓடிடி என்று சொல்லக்கூடிய ஒரு நவீன மின்னணுவியல் சாதனையில், தகவல் தொடர்புத் துறை நாளும் வளர்ந்து கொண்டிருக்கக் கூடிய இந்த சூழ்நிலையில், எல்லோரும் அவரவருடைய இல்லத்திலிருந்தே பல்வேறு செய்திகளைத் தகவல்களை, தகவல்களுடைய பின்னணிகளையெல்லாம் அறியக்கூடிய ஓர் அற்புதமான ஏற்பாடாக – நம்முடைய நண்பர்கள் செய்த இந்த ஏற்பாட்டிற்கு, தங்களுடைய அரிய நேரத்தை, காலத்தை ஒதுக்கி, இங்கே நம்முடைய அன்பான அழைப்பை ஏற்று, வருகை தந்து சிறப்பாக அலுவலகத்தையும், இந்த நிகழ்வையும் தொடங்கி வைத்துள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளரும், நம் குடும்பத்தில் ஒருவர் என்ற மகிழ்ச்சியோடு – நம்முடைய திராவிட நாற்றில் எவ்வளவு பெரிய பயிராக வளர்ந்து – இன்றைக்குப் புயல்களையெல்லாம் தாங்கக்கூடிய அளவிற்கு வந்ததோடு மட்டுமல்ல, இந்தியாவிலேயே ஒரு சிறந்த இயக்கத்தினுடைய, மக்களவையின் தலைவராக வரக்கூடிய அளவிற்குத் தானே அந்த அளவிற்கு, தன்னுடைய உழைப்பால், ஆற்றலால், அறிவுத் திறத்தால் உயர்ந்திருக்கிறார்கள்.
இவர் ஒரு சீரிய பகுத்தறிவுவாதி; தன்னலமற்ற, சுயநலமற்ற சுயமரியாதை வீராங்கனை என்று சொல்லக்கூடிய அந்த வாய்ப்பும் பெற்றவர்.
நூற்றாண்டு விழா நாயகரான கலைஞருக்கு எத்தனையோ பரிமாணங்கள் உண்டு!
ஏனென்றால், அந்தப் பாரம்பரியமே மானமிகு சுய மரியாதைக்காரர் கலைஞர் அவர்களது பாரம்பரியமாகும். நூற்றாண்டு விழா நாயகரான அவருக்கு எத்தனையோ பரிமாணங்கள் உண்டு.
ஒரு வரியில் உங்களை விமர்சனம் செய்து கொள்ளுங்கள் என்று அவரிடம் கேட்ட நேரத்தில், கணினியைத் தட்டியதுபோல் பதில் சொன்னார் – ஏனென்றால், ஈரோட்டுக் குருகுலத்தில் பெற்ற பயிற்சியால், ‘‘மானமிகு சுயமரியாதைக்காரன்” என்று.
அடுத்ததாக ஒரு கேள்வி கேட்டார்கள். அதற்கும் அவர் விளக்கம் சொன்னார் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்.
‘‘மாண்புமிகு நிரந்தரமல்ல; மானமிகு நிரந்தரமானது!’’
அந்தப் பதில், எல்லா இடத்திலும் பொறித்து வைத்துக்கொள்ளக்கூடிய விளக்கமாகும்.
‘‘மாண்புமிகு நிரந்தரமல்ல; மானமிகு நிரந்தரமானது” என்று சொன்னார்.
அப்படிப்பட்ட வளர்ப்பில், தயாரிப்பில் ஆளானவர். அந்த வகையில் பார்த்தீர்களேயானால், நம்முடைய கனிமொழி அவர்கள் குழந்தை பருவத்திலிருந்தே உண்டது சுயமரியாதைப் பால், பகுத்தறிவுப் பால்.
ஒரு பக்கத்தில் கலைஞருடைய சிந்தனை அவரி டத்தில் தோய்ந்தது. கலைஞருக்கு ஒரே பூரிப்பு – கனிமொழி அவர்கள் குழந்தையாக இருக்கும்பொழுது, பகுத்தறிவாளராக விளங்கும்பொழுது, எல்லா வகையிலும் மகிழ்ச்சியோடும், பூரிப்போடும் கனி மொழியைப்பற்றி கலைஞர் அவர்கள் பெருமிதத்தோடு சொல்லுவார்கள்.
இந்த இயக்கம் என்னென்ன எதிர்ப்புகளை சந்தித்ததோ, அவற்றையெல்லாம் இன்றைக்கும் அவர் சந்திக்கின்றார் என்றால், பழைய பாக்கிகளையெல்லாம் அவர் வசூல் செய்துகொண்டிருக்கிறார் என்று அர்த்தம். அதுதான் எங்களுடைய பாரம்பரியம்.
அப்படிப்பட்ட சூழ்நிலையில், இங்கே வந்திருக்கக் கூடிய நம்முடைய கனிமொழி கருணாநிதி அவர்களே,
எப்பொழுதும் திடலுக்கு உரியவராக இருக்கக்கூடி யவர் நம்முடைய இனமுரசு அவர்கள்.
கருப்புச் சட்டைக்காரர்கள் என்றாலே, எதிர்நீச்சல் அடிக்கின்றவர்கள்தான்!
சத்யராஜ் என்று சொன்னால், கருப்புச் சட்டையைத்தான் நினைப்பார்கள். கருப்புச் சட்டைக்காரர்கள் என்றாலே, எதிர்நீச்சல் அடிக்கின்றவர்கள்தான்.
அதேபோன்று, எப்பொழுதெல்லாம் நம்முடைய நிகழ்வுகள் ரொம்ப கலகலப்பாக இருக்கவேண்டும் என்று நினைக்கின்றோமோ, எவை எவையெல்லாம் ஒரு திருப்பமாக இருக்கவேண்டும் என்று நினைக்கின்றோமோ அப்பொழுதெல்லாம் அவர் வருவார்.
யாருக்கோ சொன்னார்கள், ‘‘எப்பொழுதெல்லாம் கஷ்டங்கள் வருகிறதோ, அப்பொழுதெல்லாம் அவர் வருவார்” என்று. ஆனால், அவ்வாறு அவர் வரு வதில்லை.
ஆனால், எப்பொழுதெல்லாம் நமக்கு எதிர்ப்பு வருகிறதோ, எப்பொழுதெல்லாம் புதுமைகள் வருகிறதோ, அப்பொழுதெல்லாம் சத்யராஜ் வருவார்.
காரணம், சொல்லவேண்டியவற்றை மிகத் தெளிவாக எடுத்துச் சொல்வார். அவர் ஓர் எடுத்துக்காட்டானவர்.
திரைத் துறையில் இனமுரசு பொன்விழா, பவள விழாக்களைக் கண்டு கொண்டிருக்கின்றார்!
அவரிடம் தனியாக உரையாடிக் கொண்டி ருக்கும்பொழுது சொல்வேன். நடிப்புத் துறையில், திரைத் துறையில் அவர் பொன்விழா, பவள விழாக்களைக் கண்டு கொண்டிருக்கின்றார். நாளாக நாளாக அந்தத் துறையில் பங்கேற்பது குறையும். ஆனால், நாளாக நாளாக, வயதாக வயதாக அதிகமான வாய்ப்பு யாருக்கு இருக்கிறது என்றால், நம்முடைய இனமுரசு அவர்களுக்குத்தான் இருக்கிறது.
காரணம், அவருடைய வாழ்க்கை முறையும், அவரு டைய கொள்கைப் பாதை, தெளிவு, ஒளிவு மறைவு இல்லாதது.
அதேபோன்று, அப்படிப்பட்டவர்கள்தான் இந்த மேடையில் இருக்கின்றனர். அய்யா இயக்குநர் ஞானராஜேசேகரன், ஓவியர் டிராஸ்ட்கி மருது அவர்கள். கழகத் துணைத் தலைவர், கழகப் பொதுச்செயலாளர், கழகப் பொருளாளர் இப்படி ஒரு கூட்டு முயற்சி.
ஆக்கமும், ஊக்கமும் தந்துகொண்டிருக்கக்கூடிய தோழர்களுக்கு நன்றி!
ஒரு கூட்டுக் குடும்பம், ஓர் அறிவுக் குடும்பம் – சுயமரியாதைக் குடும்பம் என்று சொல்லக்கூடிய வகையில் அத்துணைத் தோழர்கள், இதற்கு மிகப்பெரிய அளவிற்கு ஆக்கமும், ஊக்கமும் தந்து கொண்டிருக்கக்கூடிய தோழர்கள் அத்துணை பேருக்கும் என்னுடைய அன்பான வணக்கம், நன்றி!
பொதுவாக, இன்றைய ஒரு பெரிய மாறுதல் என்ன வென்றால், முன்பெல்லாம், நாங்கள் அந்தக் காலத்தில் இருந்ததுபோன்று, இந்தக் காலத்தில் இல்லை – அந்தக் காலத்தில் நடந்ததைக் கேளுங்கள் என்று சொல்வார்கள். இப்பொழுது அது அப்படியே மாறிவிட்டது. அதுதான் தந்தை பெரியார் செய்த அமைதிப் புரட்சி.
சுயமரியாதை என்ற சொல்லுக்கு இணையாக…
இன்றைக்கு அறிவு வளர்ந்துகொண்டிருக்கின்றது; சுயமரியாதை இயக்கத்தினுடையநூறாண்டுதொடங்குகின்ற இந்தக் காலகட்டத்தில், மிக முக்கியமாக இரண்டே வரிகளில் புரட்சிக்கவிஞர் அவர்கள் சுயமரியாதைத் தத்துவத்தைச் சொன்னார்.
‘‘அறிவை விரிவு செய் – அகண்டமாக்கு
விசாலப் பார்வையால் விழுங்கு உலகத்தை!”
சுயமரியாதை என்ற சொல்லுக்கு இணையாக வேறு ஒரு சொல் உலகத்தில் உள்ள எந்த அகராதியில் தேடினாலும் இருக்க முடியாது என்றார் தந்தை பெரியார் அவர்கள்.
அய்யா தன்னைப்பற்றி சொல்லும்பொழுது, ‘‘நான் ஒரு பூரணப் பகுத்தறிவுவாதி” என்றார்.
விஞ்ஞான துறையில் இவ்வளவு பெரிய மாற்றமா? இவ்வளவு பெரிய சிந்தனையா? என்று நமக்கு உணர்த்தியவர் தந்தை பெரியார்.
பல பதிப்புகள் வெளியான ‘‘இனிவரும் உலகம்!’’
‘‘இனிவரும் உலகம்” புத்தகத்தில், புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளைச் சேர்த்து, 30 ஆவது பதிப்பு என்று போடப்பட்டு இருக்கிறது. பல லட்சக்கணக்கான பிரதிகள் வெளியாகி இருக்கிறது.
தந்தை பெரியார் அவர்களுடைய தொலைநோக்கு என்பது இருக்கிறதே,
‘‘தொண்டு செய்து பழுத்த பழம் –
தூயதாடி மார்பில் விழும்
மண்டைச் சுரப்பை உலகு தொழும்!”
தொழும் என்ற வார்த்தைக்கு வணங்குதல் என்று பொருள் இல்லை. பின்பற்றுதல் என்று அதற்கு அர்த்தம். உலகம் பின்பற்றும்.
மண்டைச் சுரப்பு – அது சுரந்துகொண்டே இருக்கும் அளவிற்கு.
டெஸ்ட் டியூப் பேபியைப்பற்றி இங்கே உரையாற்றிய கவிஞர் அவர்கள் சொன்னார்கள்.
தந்தை பெரியார் பேகிறார்,
கேளுங்கள்!
இனிவரும் உலகத்தில் தந்தை பெரியார் அவர்கள் சொல்கிறார் கேளுங்கள்.
‘‘மூளைக் கோளாறான குணங்கள் என்பவைகளை இயற்கையாக உடையவர்கள் யாராவது இருந்தால், அதற்கு மாத்திரம் பரிகாரம் தேடவேண்டிய அவசிய மிருக்கலாம். அதுவும் அப்படிப்பட்டவர்களால் பிறருக்கோ, தங்களுக்கோ கேடு ஏற்படுவதாய் இருந்தால்தானே? ஆதலால் பஞ்சேந்திரியங்களும் ஒரே துறையில் ஒரே சமயத்தில் இன்பம் தரக்கூடிய இவ்வின்பத்துறையில் இயற்கைக் கேடு, சமுதாயக் கேடு அல்லாமல், வேறு காரியத்திற்குக் கட்டுப்பாடு இருக்காது.
போக்குவரவு எங்கும் ஆகாய விமானமும், அதிவேக சாதனமுமாகவே இருக்கும்.
கம்பியில்லாத் தந்தி சாதனம் ஒவ்வொருவர் சட்டைப் பையிலும் இருக்கும்.
ரேடியோ ஒவ்வொருவர் தொப்பியிலும் அமைக்கப்பட்டிருக்கும்.
உருவத்தைத் தந்தியில் அனுப்பும்படியான சாதனம் எங்கும் மலிந்து, ஆளுக்காள் உருவம் காட்டிப் பேசிக் கொள்ளத்தக்க சவுகரியம் ஏற்படும்.
மேற்கண்ட சாதனங்களால் ஓர் இடத்தில் இருந்து கொண்டே பல இடங்களில் உள்ள மக்களுக்குக் கல்வி கற்றுக் கொடுக்கச் சாத்தியப்படும்.
உணவுகளுக்குப் பயன்படும் படியாக உணவு, சத்துப் பொருள்களாகச் சுருக்கப்பட்டு ஒரு வாரத்திற்கு ஒரு சிறு குப்பியல் அடங்கக்கூடிய உணவு ஏற்பட்டுவிடும்.
மனிதனுடய “ஆயுள் நூறு” வருஷமென்பது இரட்டிப்பு ஆனாலும் ஆகலாம். இன்னும் மேலே போனாலும் போகலாம்.
பிள்ளைப்பேறுக்கு ஆண் – பெண் சேர்க்கை என்பது கூட நீக்கப்படலாம்!
பிள்ளைப்பேறுக்கு ஆண் – பெண் சேர்க்கை என்பதுகூட நீக்கப்படலாம். நல்ல திரேகத்துடனும், புதிய நுட்பமும், அழகும், திடகாத்திரமும் உள்ள பிர ஜைகள் ஏற்படும் படியாக பொலிகாளைகள்போல் தெரிந்தெடுத்து மணி போன்ற பொலி மக்கள் வளர்க்கப்பட்டு, அவர்களது வீரியத்தை இன்ஜெக்ஷன் மூலம் பெண்கள் கருப்பைகளுக்குள் செலுத்தி நல்ல குழந்தைகளைப் பிறக்கச் செய்யப்படும். ஆண் – பெண் சேர்க்கைக்கும், குழந்தை பெறுவதற்கும் சம்பந்தமில்லாமல் செய்யப்பட்டுவிடும். மக்கள் பிறப்பு கட்டுப்படுத்தப்பட்டு ஓர் அளவுக்குள் கொண்டு வந்துவிடக் கூடும்.
அநுபோகப் பொருள்களும் வெகுதூரம் மாற்றமடைந்துவிடும். அதற்காக ஏற்படும் செலவும் அதை அனுபவிக்கும் முறையும் வெகு சுருக்கமாக மாற்றமடைந்துவிடும்.
ஒரு டன்னுள்ள மோட்டார் கார், ஓர் அந்தர் வெயிட்டுக்கு வரலாம்; பெட்ரோல் செலவு குறைய லாம்; பெட்ரோலுக்குப் பதில் மின்சார சக்தியே உபயோகப்படுத்தப்படலாம்; அல்லது விசை சேக ரிப்பாலேயே ஓட்டப்படலாம்” என்கிறார் தந்தை பெரியார்.
1938 ஆம் ஆண்டே தந்தை பெரியார் அவர்கள் சொல்லியிருக்கிறார்!
இப்பொழுது மின்சாரக் கார், இரண்டு சக்கர வாகனங்கள் வந்துவிட்டதே! இவை இன்றைக்குப் புதிது என்று நாம் நினைக்கின்றோம். ஆனால், 1938 ஆம் ஆண்டே தந்தை பெரியார் அவர்கள் சொல்லியிருக்கிறார். நம்மில் பலர் பிறக்காத காலத்தில்.
அவர் என்ன பிஎச்.டி. பட்டம் பெற்றவரா? சயின்ஸ் லேபாரட்டரிக்குப் போனவரா?
போகாததினால்தான் இதைச் சொன்னார். போயி ருந்தால், அவர் ஒரு கிளார்க் ஆகியிருப்பார்; ஒரு அய்.ஏ.எஸ். அதிகாரியாக ஆகியிருப்பார்.
ஆனால், தன்னலமற்ற ஒரு ஒப்பற்ற சுயசிந்தனை யாளர் அவர்.
கல்லூரிகளில், பல்கலைக் கழகங்களில்
பெற முடியாத அறிவு!
அய்யா அவர்கள் மேடையில் உரையாற்றிக் கொண்டி ருக்கும்பொழுது, நாங்கள் குறிப்புகளை எழுதுவோம். கல்லூரிகளில் நாங்கள் பெறாத அறிவை, பல்கலைக் கழகங்களில் பெற முடியாத அறிவை – அப்பொழுது நாங்கள் பெற்றிருக்கின்றோம்; அதுதான் எங்களுக்குக் கிடைத்த தனி வாய்ப்பு – சிறப்பான வாய்ப்பாகும்.
ஒரு நாள் திடீரென்று அய்யா அவர்கள் சொன்னார், ‘‘மனிதன் இனிமேல் தானே பறக்க ஆரம்பித்துவிடுவான்” என்றார்.
அப்படி சொன்னவுடன், எல்லோரும் அதிசய மாகப் பார்த்தார்கள்.
உடனே அய்யா அவர்கள் சொன்னார், ‘‘பறக்க ஆரம்பிப்பான் என்றவுடன், நீங்கள் எல்லாம் யோசிக்கிறீர்கள். அதில் என்ன கஷ்டம்? பறவையைப் பார்த்தான், விமானத்தைக் கண்டு பிடித்தான்.
பெரிய இயந்திரத்தை விமானம் ஆக்கியிருக்கிறான். அதில் நாம் ஏறி உட்கார்ந்து போகிறோம்.
மனிதனுக்கு இரண்டு பக்கமும் இறக்கை மாதிரி ஒரு இயந்திரத்தைப் பொருத்தி, சாவி கொடுத்தால், ‘‘புர்ருன்னு” பறக்கப் போகிறான்” என்றார்.
பெரியார், தன்னுடைய அறிவுக்கு வட்டம் போட்டுக் கொண்டதே கிடையாது!
இந்த சிந்தனைக்கு காரணம் என்னவென்றால், வழக்கமான படிப்பு என்று சொன்னால், ஒரு வட்டம். அந்த வட்டத்தைத் தாண்டி நம்மால் சிந்திக்க முடியாது. ஆனால், அவர் தன்னுடைய அறிவுக்கு வட்டம் போட்டுக் கொண்டதே கிடை யாது. அதனால் அவர் ஒப்பற்ற சுய சிந்தனையாளர்.
10 புத்தகங்களுக்கும் ‘‘அறிவின் எல்லை’’ என்று தலைப்பிட்டார்!
அவருடைய சிறிய சிறிய புத்தகங்கள் ஒவ்வொன்றும் 10 பைசா. அந்த 10 புத்தகங்களை பைண்டிங் செய்து ஒரு ரூபாய்க்குப் போடலாம் என்று அய்யாவின் கைகளில் கொடுத்தார் ‘குடிஅரசு’ அலுவலகத்தில் பதிப்புத் துறையில் பொறுப்பாளராக இருந்த புலவர் மாணிக்கம் அவர்கள். அதில் இனிவரும் உலகமும் ஒரு புத்தகமாகும். அந்த 10 புத்தகங்களுக்கும் தலைப்பாக ‘‘அறிவின் எல்லை” என்று தலைப்பிட்டு இருந்தார். மக்கள் மத்தியில் எளிமையாகப் போய்ச் சேரவேண்டும் என்பதற்காக. அதைப் பார்த்தவுடன், நாங்கள் எல்லாம் மிக அற்புதமாக தலைப்புப் போட்டிருக்கிறார் என்று நினைத்தோம்.
அதை அய்யா அவர்கள் வாங்கிப் பார்த்துவிட்டு, ‘‘யார் இந்தத் தலைப்பைப் போட்டது; நான் இந்தத் தலைப்பில் பேசவில்லையே?” என்று கேட்டார்.
‘‘இந்தப் புத்தகங்களுக்கு இந்தத் தலைப்புப் போட்டால் நன்றாக இருக்குமே என்று போட்டேன்” என்றார் புலவர் மாணிக்கம் அவர்கள்.
அறிவுக்கு எங்கேயாவது எல்லை கட்ட முடியுமா?
‘‘ஏன்யா, அறிவுக்கு எங்கேயாவது எல்லை கட்ட முடியுமா?” என்று கேட்டுவிட்டு, ‘‘பொதுக்கூட்டத்தில்கூட நான் சொல்லியிருக்கின்றேனே, நீங்கள் கவனிக்க வில்லையா?” என்றார்.
இந்த மேடையில்கூட தந்தை பெரியார் அவர்கள் உரையாற்றும்பொழுது சொல்லியிருக்கிறார்.
(தொடரும்)