கடந்த 80 ஆண்டுகளுக்கு முன் கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூரில் தென்னார்க்காடு மாவட்ட திராவிடர் மாநாடு 29.7.1944 அன்று நடைபெற்றது. மாநாட்டினை திறந்து வைத்து சிறப்புரை நிகழ்த்த பெரியார், அண்ணா உள்ளிட்ட தலைவர்கள் அழைக்கப்பட்டிருந்தார்கள்.
இளம் வயதிலேயே கி.வீரமணியைப் பகுத்தறிவுக் கொள்கையில் நாட்டம் கொள்ளச் செய்தவரான அவருடைய ஆசிரியர் திரு.ஆ.திராவிடமணி பி.ஏ. அவர்களின் பெருமுயற்சியால்தான் அம்மாநாடு கூட்டப்பட்டது. மாநாட்டிற்கு விருதுநகர் திரு.வி.வி.இராமசாமி அவர்கள் தலைவர். மாநாட்டுத் திறப்பாளர் அய்யா பெரியார். திராவிட நாட்டுப் படத்திறப்பாளர் தளபதி அறிஞர் அண்ணா. அன்று இரவே அய்யா அவர்கள் இரயில் மூலம் கடலூர் வந்தார்கள். வந்தவர்களை திருப்பாதிரிப்புலியூரில் சத்திரம் ஒன்றில் தங்க வைத்திருந்தார்கள். அன்னை மணியம்மையார் அவர்களும் உடன் இருந்தார்கள்.
இரவில் தோரணங்கள், கொடிகள் கட்டிய, ஒட்டிய அயர்வும், உறக்கமும் ஒருபக்கம் இருந்தபோதிலும் அய்யா அவர்களைப் பார்க்கப் போகிறோம், எப்போது விடியும் என்ற ஆவல் கி.வீரமணியின் உறக்கத்தினை ஓடோடச் செய்தது.பொழுது விடிந்ததும் திரு.ஏ.பி.ஜனார்த்தனம், எம்,ஏ.,அவர்கள் அய்யாவைப் பார்க்க கி.வீரமணியை அழைத்துப்போனார். அய்யா அவர்கள் தங்கியுள்ள சத்திரத்தை நெருங்கினார்கள். கி.வீரமணிக்கு ஆசை ஒரு பக்கம். அவரை அறியாத திகில் கொண்ட அச்சம் ஒருபுறம்.அய்யாவிடம் சென்று வணக்கம் தெரிவித்தார். “இந்தப் பையன் நம் கழகத்தில்
ஈடுபட்டுள்ளவன். நண்பர் திராவிடமணி தயாரிப்பு. மேடைகளில் நன்றாகப் பேசுகிறான்” என்று அய்யாவுக்கு அறிமுகப்படுத்தினார். தோழர் ஏ.பி.ஜனார்த்தனன் – கி.வீரமணி அய்யாவைப் பார்த்துக் கொண்டே ஊமையாக நின்றிருந்துவிட்டு மீண்டும் வணக்கம்கூறி வெளியே வந்துவிட்டார். மறுநாள் மாநாட்டினைத் திறந்து வைத்து சிங்கம் கர்ஜிப்பது போல் அய்யா அவர்கள் உரையாற்றினார். இம் மாநாட்டில் கி.வீரமணியும் உரையாற்றினார். எதிரிகளின் பலத்த எதிர்ப்புகளுக்கும்
கண்டனங்களுக்கும் இடையே நடந்த மகத்தான மாநாடு அது. அன்றும் அய்யா அவர்கள் வெளியிட்ட கருத்தைவிட பேசியமுறைதான் பிஞ்சு மனத்தில் ஆழமாய்ப் பதிந்து நின்றது!
அடுத்து பேசிய அண்ணா அவர்கள் கி.வீரமணியின் பேச்சை வைத்தே துவக்கினார். “இப்போது பேசிய இச்சிறுவன் காதிலே குண்டலம், நெற்றியிலே நீறு, கழுத்திலே ருத்திராட்சம் அணிந்து இப்படிப் பேசியிருந்தால், இவரை இந்தக்கால ஞானப்பால் உண்ட திருஞானசம்பந்தராக ஆக்கியிருப்பார்கள்; இவர் பேசியதிலிருந்து இவர் உண்டதெல்லாம் ஞானப்பால் அல்ல பெரியாரின் பகுத்தறிவுப்பால்தான்” என்று அறிஞர் அண்ணா அவர்கள் கி.வீரமணியைப் பற்றி குறிப்பிட்டார்கள்.
“பெரியாருடன் வீரமணி” நூலிலிருந்து, பக்கம் – 16