புதுடில்லி, ஜூலை 24- ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானை, தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி, மற்றும் தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று (23.7.2024) சந்தித்தனர். அப்போது ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்ட நிதியை விடுவிக்க வலி யுறுத்தினர்.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி (சமக்ர சிக்ஷா) திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசு, மாநில அரசின் பள்ளிக்கல்வித்துறை களுக்கு நிதிவழங்கி வருகிறது. இந்த நிலையில் ஒன்றிய அரசின் பி.எம். சிறீ திட்டத்தில் இணையாததால் சில மாநிலங்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின்கீழ் நிதி ஒதுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்ததிட்டத்தில் இதுவரை தமிழ்நாடும் இணையவில்லை என்றே சொல்லப்படுகிறது. இதனால் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் ஒதுக்கப் படும் நிதி வழங்கப்ப டாமல் நிலுவையில் இருந்தது.
இந்த நிலையில் தி.மு.க. நாடாளுமன்றக் குழு தலைவர் கனிமொழி எம்.பி. தலைமையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் நாடாளுமன்ற உறுப்பி னர்கள் டில்லியில் ஒன்றிய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிர தானை நேற்று சந்தித்தனர்.
அப்போது அவரிடம், “சமக்ர சிக்ஷா’ திட்டத்தின் கீழ் தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறைக்கு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள நிதியை மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு உடனடியாக விடுவிக்குமாறு வலியுறுத்தினார்கள்.
இந்த சந்திப்பின் போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலாநிதி வீராசாமி. சு.வெங்கடேசன், ஜோதிமணி, செல்வகணபதி, துரை வைகோ, நவாஸ்கனி, முரசொலி, பிரகாஷ், மாதேஸ்வரன் ஆகியோரும், தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் எஸ்.மதுமதி. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் எம். ஆர்த்தி ஆகியோரும் உடனிருந்தனர்.
இதனைத்தொடர்ந்து நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தியையும் கனிமொழி எம்.பி. தலைமையில், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கூட்டணி கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்துள்ளனர். அப்போது, ‘புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொள்ளாத காரணத்தால், தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறைக்கு தர வேண்டிய நிதியை ஒன்றிய அரசு இதுவரை வழங்கவில்லை. நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிதியை ஒன்றிய அரசு உடனே வழங்கு வதற்கு நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கவேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தனர்.