சென்னை, ஜூலை 22 ஆளுநர்களுக்கு அதிகாரம் அளிக்கும் 361 ஆவது பிரிவு குறித்து உச்சநீதிமன்றம் விசாரணையை தொடங்கி இருக்கிறது.
தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் இடையே ஒரு பனிப்போர் நடந்து வருவதைப்போலவே மேற்குவங்க ஆளுநர் சி.வி.ஆனந்த போசுக்கும் மம்தாவுக்கும் இடை யில் ஒரு மோதல் பல மாதங்களாக நடந்து வருகிறது. ஆனந்த போஸ் மீதான பாலியல் வன்கொடுமை புகார் வெளிச்சத்திற்கு வந்த தற்குப் பிறகு, அது இந்திய அளவில் சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது.
இந்தப் பாலியல் வன்முறை புகார் வழக்கில் கிரிமினல் வழக்குகளிலிருந்து ஆளுநர்களுக்கு விலக்கு அளிக்கக்கூடிய சட்டப் பிரிவு 361 அய் மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அதைக் கடந்த 19.7.2024 அதை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம் மறு ஆய்வு செய்வது தொடர்பாகத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு மேற்குவங்க அரசுக்குத் தாக்கீது அனுப்பி இருக்கிறது. இந்த வக்கில் அரசையும் ஒரு பகுதியாகச் சேர்த்துள்ளது. மேலும் இந்த வழக்குத் தொடர்பாக விசாரிக்க அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணியின் உதவியை உச்சநீதிமன்றம் கோரியுள்ளது.
ஆளுநர்களுக்கு அதிகாரம் அளிக்கும் 361 ஆவது பிரிவு இனியும் தொடருமா? அல்லது நீக்கப்படுமா? என்பது பற்றிய விவாதங்கள் மீண்டும் கேட்க தொடங்கி உள்ளன. இது நீக்கப்பட்டால், ஆளுநர்கள் மீது கிரிமினல் வழக்குப் போட முடியும். அது மிகப்பெரிய மாற்றங்களை எதிர்காலத்தில் கொண்டு வரும்.
இந்நிலையில் மூத்த பத்திரிகையாளரும் சட்ட நுட்பங்களை அறிந்தவருமான தராசு ஷியாம் 361 ஆவது பிரிவு தொடர்பாக சில விளக்கங்களை முன்வைத்துள்ளார். தமிழ்நாட்டின் ஆளுநராக சென்னா ரெட்டி இருந்த காலத்தில் ஆளுநர் மாளிகை ஆலோசனை குழுவிலிருந்தவர். ஆகவே, இவரது அனுபவம் முக்கியத்துவம் பெற்றது.
சட்டப் பிரிவு 361 நீக்கப்படுமா? என்பது பற்றி ஷியாம் பேசும்போது, “ஆளுநருக்கும் குடியரசுத் தலைவருக்கும் ஒரு அதிகாரம் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த அதிகாரம் முழு அதிகாரம் கிடையாது. சில விதிமுறைகளுடன் கூடிய அதிகாரம் மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆளுநர் மீது கிரிமினல் மற்றும் சிவில் வழக்குகளைத் தொடர முடியாது. பதவிக் காலம் முடிந்த பிறகு தொடரலாம். அப்படிப் பதவிக்காலம் முடியும் வரை காத்திருந்தால், சாட்சிகள் எப்படி இருக்க முடியும்? என்று கூறியுள்ளார்.