கொல்கத்தா ஜூலை 22 ‘‘பாஜக தலை மையிலான ஒன்றிய அரசு விரைவில் கவிழும்’’ என கொல்கத்தாவில் நேற்று (21.7.2024) நடைபெற்ற திரிணாமுல் காங்கிரஸ் தியாகிகள் நாள் பேரணியில் மேற்குவங்க முத லமைச்சர் மம்தா, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் ஆகியோர் கூறினர்.
கொல்கத்தாவில் கடந்த 1993 ஆம் ஆண்டு மேற்குவங்க இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் நடத்திய போராட்டத்தில், 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களின் நினைவாக திரிணாமுல் காங்கிரஸ் ஒவ்வொரு ஆண்டும் தியாகிகள் நாள் அனுசரிக்கிறது. இந்தாண்டு தியா கிகள் தின பேரணி கொல்கத்தாவின் தர்மதலா நகரில் நேற்று (21.7.2024) நடைபெற்றது.
இதில் மாநிலம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர். இந்த பேரணியில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் மற்றும் இதர கட்சித் தலைவர்களும் பங்கேற்றனர். இந்தப் பேரிணிக்கு தலைமை தாங்கிய முதலமைச்சர் மம்தா பேசியதாவது:
ஒன்றிய அரசு நீண்ட காலம் நீடிக்காது. இது நிலையான அரசு அல்ல. மிரட்டல் மூலமாக பாஜக ஒன்றிய அரசை அமைத்துள்ளது. அதனால் இது விரைவில் கவிழும். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் மட்டும்தான், 38 சதவீத எம்.பி.க்கள் பெண்களாக உள்ளனர்.
தேர்தலுக்கு முன்பு, அரசியலில் பெண்களுக்கு 33 சதவீத ஒதுக்கீடு வழங்குவதாக பலர் கூறினர். ஆனால், அவர்களால் முடியவில்லை. பெண் எம்.பி.க்களுக்கு 38 சதவீதத்தை உறுதி செய்த ஒரே கட்சி திரிணமூல் காங்கிரஸ் கட்சிதான்.
இவ்வாறு முதலமைச்சர் மம்தா பேசினார்.
அகிலேஷ்
இந்தப் பேரணியில் பேசிய அகிலேஷ் கூறுகையில், ‘‘ஒன்றிய அரசு நீடிக்காது என நான் மக்களவையில் ஏற்கெனவே கூறினேன். அதை நான் மீண்டும்கூறுகிறேன். இந்த அரசு கவிழும்.மகிழ்ச்சியான நாட்களை நாம் மீண்டும் பார்ப்போம்.
மேற்குவங்க மக்கள், பாஜகவுடன் போராடி அதை தோல்வியடைச் செய்துள்ளீர்கள். இதேதான் உத்தர பிரதேசத்திலும் நடைபெற்றுள்ளது. ஒன்றியத்தில் ஆட்சியில் அமர்ந்தி ருப்பவர்கள் இன்னும் சில நாட்கள்தான் அதிகாரத்தில் இருப்பர்’’ என்றார்.
திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் பேசுகையில், ‘‘பாஜக தனதுவெற்றிக்கு ஒன்றிய விசாரணை அமைப்புகளையும், பணபலத்தையும் நம்பியுள்ளது. ஆசிரியர் தேர்வில் முறைகேடு நடந்ததாக மேற்குவங்கத்தில் பார்த்த சட்டர்ஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. ஆனால் நீட் தேர்வு முறைகேட்டுக்காக, ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானை ஏன் கைது செய்யக் கூடாது?’’ என்றார்.