மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 68,843 கன அடியாக அதிகரிப்பு

viduthalai
2 Min Read

மேட்டூர், ஜூலை 21 மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 53,098 கன அடியாக உயர்ந்துள்ளது. கடந்த 4 நாளில் நீர்மட்டம் 17.48 அடி உயர்ந்து, நேற்று (20.7.2024) காலை 61.31 அடியை எட்டியது.
கருநாடகாவில் பெய்யும் கனமழை காரணமாக, அங்குள்ள அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால், காவிரியில் கடந்த சில நாட்களாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வரத்து 19.7.2024 அன்று காலை 40,018 கன அடியாக இருந்தது.
இந்நிலையில் நீர்வரத்து, நேற்று (20.7.2024) 53,098 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து, காவிரி கரையோர மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவை விட, நீர்வரத்து அதிகரித்து இருப்பதால் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
அணையின் நீர்மட்டம் நேற்று (20.7.2024) 61.31 அடியாகவும், நீர் இருப்பு 21.18 டிஎம்சியில் இருந்து 25.67 டிஎம்சியாகவும் உயர்ந்துள்ளது.
காவிரியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கினால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 4 நாளில் 17.48 அடியாகவும், நீர் இருப்பு 11.53 டிஎம்சியாகவும் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 50 ஆயிரத்தை கடந்து வந்து கொண்டிப்பதால், நீர்மட்டம் விரைவில் 100 அடியை எட்டும் என நீர்வளத்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

கருநாடகாவில் இருந்து
காவிரியில் நீர் திறப்பு

பெங்களூரு, ஜூலை 21 காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்துவருவதால் தமிழ் நாட்டிற்கு வினாடிக்கு 58 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
கருநாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்துவருவதால், கிருஷ்ணராஜசாகர் (கேஆர்எஸ்), ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித் துள்ளது. நேற்று (20.7.2024) மாலை 7 மணி நிலவரப்படி, மண்டியாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணைக்கு வினாடிக்கு 45 ஆயிரத்து 658 கன அடி நீர் வந்துக் கொண்டிருக்கிறது. இதனால் 124.80 அடி உயரம் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் 121.75 அடியாக உயர்ந்துள்ளது.
அணையில் இருந்து வினாடிக்கு 18 ஆயிரம் கன அடிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அணை முழுவதுமாக நிரம்புவதற்கு இன்னும் 3 அடிகளே இருப்பதால், கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கபினி அணைக்கு வினாடிக்கு 53 ஆயிரத்து 253 கன அடி நீர்வந்துக் கொண்டிருக்கிறது. இதனால் 19.52 டிஎம்சி முழு கொள்ளளவைக் கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் 19.45 டிஎம்சி ஆக உயர்ந்துள்ளது. இதனால் அணையின் பாதுகாப்பை கருதி வினாடிக்கு 45 ஆயிரத்து 658 கன அடி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய இரு அணை களில் இருந்து தமிழ்நாட்டிற்கு மொத்தமாக 58 ஆயிரம் கன அடி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *