சென்னை, ஜூலை 21 பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் வரும் 27-ஆம் தேதி டில்லியில் நிட்டி ஆயோக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டில்லி செல்கிறார்.
பாஜக 2014-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிறகு, திட்ட கமிஷனுக்கு மாற்றாக நிட்டி ஆயோக் உருவாக்கப்பட்டது. மாநிலங்களுக்கு நிட்டி ஒதுக்கீடு செய்யும் பணிகளில் நிதி ஆயோக் ஈடுபடுகிறது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான 9-ஆவது நிட்டி ஆயோக் கூட்டம் டில்லியில் வரும் 27-ஆம் தேதி நடைபெறவுள்ளது. மோடி மூன்றாவது முறையாக பிரதமர் பதவியேற்ற பின்னர் நடைபெறும் முதல் கூட்டம் இதுவாகும். மாநில முதலமைச்சர்கள், யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர் மற்றும் ஒன்றிய அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக, வரும் 26-ஆம் தேதி இரவு அல்லது 27-ஆம் தேதி காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டில்லி செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒன்றிய அரசின் நிலுவைத் தொகை, நிதி, தமிழ்நாடு நலன் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டத்தில் பேச இருப்பதாக கூறப்படுகிறது. மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோரும் நிட்டி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்
கடந்த ஜூலை மாதம் நிட்டி ஆயோக் 2023-24-ஆம் ஆண்டுக்கான ஆய்வறிக்கையை வெளியிட்டது. அதில், நீடித்த நிலையான வளர்ச்சி குறியீடுகளில் பெரும்பாலானவற்றில் தமிழ்நாடு முன்னிலை பெற்றுள்ளதாகவும், வறுமை ஒழிப்பில் 92 புள்ளிகளுடன் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.