புதுடில்லி, ஜூலை 17- சத்தீஷ்கார் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் கடந்த 2020- 2022-ஆம் ஆண்டு காலகட்டத்தில் தலைவராக இருந்தவர் தமன் சிங் சோன்வானி. செயலாளராக இருந்தவர் துருவ். இவர்கள் இருவரும் தங்கள் குடும்பத்தினரை துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பதவிகளில் பணி நியமனம் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
இந்த பணி நியமன முறைகேடு தொடர்பான விசாரணை சி.பி.அய்.யிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. அதன்படி இந்த விசாரணையை
சி.பி.அய். முறைப்படி எடுத்துக்கொண்டு இருக்கிறது.
அத்துடன் அவர்கள் மீது வழக்கும் பதிவு செய்து உள்ளது.
விசாரணையின் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் (15.7.2024) ராய்ப்பூர் மற்றும் பிலாலில் உள்ள அவர்களது வீடுகள் உள்ளிட்ட இடங்களில் சி.பி.அய். அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளதாக தெரிகிறது. இந்த விவகாரம் மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.