சென்னை, ஜூலை 15- ஜப்பானின் சிபவுரா மெசின் நிறுவனத்தின் துணை நிறுவனமாகிய சிபவுரா மெசின் இந்தியா நிறுவனம், உயர் துல்லிய இன்ஜெக்ஷன் மோல்டிங் இயந்திரங்கள் தயாரிப்பில் பன்னாட்டு அளவில் முன்னணியில் உள்ளது. சென்னையை அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள இந்நிறுவன ஆலையில் 2-ஆவது பிரிவின் செயல்பாட்டைத் தொடங்கியுள்ளது. இந்த ஆலையின் உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்காக ரூ. 225 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மேலும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
செம்பரம்பாக்கத்தில் செயல்படும் எஸ்.எம்.அய். ஆலை ஆண்டுக்கு 1,200 இன்ஜெக்ஷன் மோல்டிங் இயந்திரங்களையும் அதன் உதிரி பாகங்களையும் தயாரிக்கிறது. இந்நிறுவன இயந்திரங்கள் ஆட்டோ மோடிவ், எலெக்ட்ரிகல், வீட்டு உபயோகம் மற்றும் பர்னிச்சர், பொருள்களைக் கையாள்வது, மருத்துவம், பேக்கேஜிங், பிரிபார்ம்ஸ், பி.வி.சி., பொம்மை, எழுது பொருள் மற்றும் பிற துறைகளில் பயன்படுத்தப்படுகிறது.
இது தொழிற்சாலையின் 2-ஆவது பிரிவு தொடக்கம் குறித்து சிபவுரா மெசின் குழுமத்தின் தலைவர் சிகெடோமோ சகமோடோ கூறுகையில், “எங்களது உத்திசார் அணுகுமுறையில் முதலீட்டுக்கு ஏற்ற மிகச் சிறந்த நாடாக இந்தியா திகழ்கிறது. இந்த நாட்டில் முதலீடு செய்வதைத் தாண்டி திறன் மிகு பணியாளர்கள் இங்கு கிடைப்பது மற்றும் மிகவும் பயனுள்ள கூட்டாளிகள் கிடைப்பதும் மிக முக்கியமான காரணமாகும். அத்துடன் எங்களது தயாரிப்புகளுக்கு தொடர்ந்து தேவை அதிகரித்து வருகிறது.
எங்கள் நிறுவனத்தின் 2-ஆவது பிரிவு மூலம் உற்பத்தி திறன் இரட்டிப்பாக உயரும். இங்கு இந்திய தொழிற்சாலைகளில் அடுத்த 3 ஆண்டுகளில் பயன் படுத்தப்படவிருக்கும் மேம்பட்ட தொழில்நுட்பம், பொருள் தொழில் நுட்பம், கட்டுப்பாடு மெகடிரானிக்ஸ் மற்றும் அய்.ஓ.டி. நுட்பம் ஆகியவற்றை தயாரித்து அளிக்கும் திறன் கொண்டதாக இருக்கும்” என்று கூறினார்.
கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பங்காற்றிய பெண் சாதனையாளர்களுக்கு விருது
சென்னை, ஜூலை 15- கோவையை சேர்ந்த
வீ வொண்டர் உமன் தொண்டு நிறுவனம், வணிகம், பொழுதுபோக்கு, கல்வி மற்றும் செயல்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்த பெண்களுக்கு ஆண்டுதோறும் விருது வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த நிகழ்ச்சியின் 7ஆவது பதிப்பின் தொடக்க விழா சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது.
“இந்த மாநாடு டிஜிட்டல் கல்வியறிவின் முக்கியத் துவத்தை வலியுறுத்துகிறது. பெண்களுக்கு எதிரான இணையக் குற்றங்களைத் திறம்பட எதிர்த்துப் போராடுவதற்கான வலுவான சட்ட மற்றும் கொள்கை கட்டமைப்புகளை விவாதிக்கவும் மேம்படுத்தவும் பெண்களுக்கு உதவுகிறது,” என்று தேசிய சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சி அமைப்பின் இயக்குநரும், இந்திய ரஷ்ய தகவல் தொழில்நுட்ப கூட்டமைப்பின் துணைத் தலைவருமான டாக்டர். கலீராஜ் அவர்கள் தெரிவித்தார்.
“இணையம் மற்றும் டிஜிட்டல் தொழில் நுட்பங்களின் பயன்பாடு அதிகரித்து வருவதால், பெண்களை குறிவைத்து இணையவழி துன்புறுத்தல், சைபர் ஸ்டாக்கிங் மற்றும் சமூக வலைத்தள அச்சுறுத்தல்கள் உட்பட பல்வேறு சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இணைய உலகில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்தல், பாலின சமத்துவத்தை மேம்படுத்துதல், டிஜிட்டல் உலகில் ஆண்களுக்கு நிகரான சுதந்திரம் மற்றும் வாய்ப்புகளை பெண்கள் பெறவேண்டும் என்பதை உறுதி செய்வதற்காக இந்த மாநாடு நடைபெறுகிறது”. என்று தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் தலைவி ஏ.எஸ்.குமாரி குறிப்பிட்டார்.
நிகழ்ச்சி அமைப்பாளர்களான இத்தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் சண்முகப்பிரியா மற்றும் நிர்வாக அறங்காவலர் சுபிதா ஜஸ்டின் ஆகியோர் கூறுகையில், வாய்ப்புகள் மற்றும் அனைத்துப் பெண்களின் திறமை மற்றும் குரல்களை வெளிக்கொணரும் எங்கள் நோக்கம் பெண்கள் அவர்களின் துறையில் தங்கள் சொந்த அடையாளத்தை உருவாக்க கூடிய ஒரு தளத்தை வழங்குவதாகும் என்று கூறினர்.
நீட் மோசடி கைதான 13 பேருக்கு சி.பி.அய். காவல்
பாட்னா உயர் நீதிமன்றம் உத்தரவு
புதுடில்லி, ஜூலை 15- நீட் தேர்வு மோசடி தொடர்பாக சிபிஅய் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த முறைகேடு விவகாரத்தில் பல்வேறு மாநிலங்களில் இதுவரை சுமார் 57 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 12 பேரை சிபிஅய் கைது செய்த நிலையில், மீதமுள்ளவர்களை பல்வேறு மாநில காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதில் 22 பேர் இதுவரை பிணை பெற்று இருக்கிறார்கள்.
நீட் முறைகேடு விவகாரத்தில் பீகார் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் 13 பேரை கைது செய்திருந்தனர். அவர்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க பாட்னாவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஅய் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இதை விசாரித்த நீதிமன்றம் அவர்களை சிபிஅய் காவலில் எடுக்க அனுமதி மறுத்தது. இதை எதிர்த்து சிபிஅய் பாட்னா உயர்நீதிமன்றத்தை நாடியது. இந்த வழக்கை நீதிபதி சந்தீப் குமார் விசாரித்தார். விசாரணை முடிவில் பீகார் காவல்துறையினர் கைது செய்த 13 பேரையும் சிபிஅய் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.
அவர்களை உடனே சிபிஅய்-யிடம் ஒப்படைக்க வேண்டும் என மத்திய சிறை நிர்வாகத்துக்கும் நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அந்த 13 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஅய் நடவடிக்கை எடுத்தது. பீகாரில் நீட் மோசடியில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ராகேஷ் ரஞ்சன் 11.7.2024 அன்று கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த 13 பேருக்கும் அவருடனான தொடர்பு உள்ளிட்டவை குறித்து சிபிஅய் விரிவான விசாரணை நடத்தும் என தகவல் வெளியாகி இருக்கிறது.
இதன் மூலம் பல்வேறு உண்மைகள் வெளிவரும் என சிபிஅய் வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.