போபால், ஜூலை 2 மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராட்டிராவில் உள்ள நர்மதா பள்ளத்தாக்கு மக்களின் நலனுக்காக தொடங்கப்பட்ட `நர்மதா பச்சாவ் அந்தோலன்’ அறக் கட்டளைக்கு நன்கொடை அளிக்க மக்களை தவறாக வழிநடத்தியதாக சமூக சேவகர் மேதா பட்கர் மீது புகார் எழுந்தது. மேலும், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றுக்கு பேட்டியளித்த மேதா பட்கர், வி.கே.சக்சேனாவுக்கு எதிராக பேசினார். இதையடுத்து, மேதா பட்கருக்கு எதிராக வி.கே. சக்சேனா அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.
2001-ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் அப்போது காதி மற்றும்கிராமத் தொழில்கள் ஆணையத்தின் (கேவிஅய்சி) தலைவராக வி.கே. சக்சேனா இருந்தார். இவர் தற்போது டில்லி துணைநிலை ஆளுநராக உள்ளார். இந்த வழக்கின் மீது டில்லி சாகேத்நீதிமன்ற வளாகத்தில் உள்ள பெருநகர மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுவந்தது. விசாரணை முடிவடைந்தநிலையில் மேதா பட்கர் குற்றவாளி என கடந்த மே 24-ஆம் தேதி நீதிமன்றம் அறிவித்தது.
இந்நிலையில் தண்டனைவிவரத்தை டில்லி பெருநகர மாஜிஸ்ட்ரேட் ராகவ் ஷர்ம் அறிவித்தார். அவதூறு வழக்கில் மேதாபட்கருக்கு 5 மாதங்கள் சிறை தண்டனை விதித்ததுடன், துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும் மேதா பட்கருக்கு மாஜிஸ்ட்ரேட் ராகவ் ஷர்ம் உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கில், மேதா பட்கருக்கு அதிகபட்சம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்,அவரின் வயது மற்றும் உடல்நிலையை கருத்தில் கொண்டு, அதிக தண்டனை விதிக்கவில்லை என மாஜிஸ்ட்ரேட் தெரிவித்தார்.
இதுதொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் மேதா பட்கர் கூறியதாவது: உண்மையை ஒருபோதும் தோற்கடிக்க முடியாது. நாங்கள் யாரையும் இழிவுபடுத்த முயற்சிக்கவில்லை. எங்கள் பணியை மட்டுமே செய்து வருகிறோம். நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து நாங்கள் மேல்முறையீடு செய்வோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.