கருணை மதிப்பெண் முறைகேடு ‘நீட்’ மறுதேர்வு முடிவுகள் வெளியாயின

viduthalai
2 Min Read

சண்டிகர், ஜூலை 1 நாடு முழுவதும் வெளியான நீட் தேர்வு முடிவுகள் சர்ச்சையாகி உள்ள நிலையில், கருணை மதிபெண் பெற்றவர்களின் தேர்வு முடிவு ரத்து செய்யப்பட்டு மறு தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வை எழுதியவர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளது.

2024ஆம் ஆண்டுக்கான இளங்கலை நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 4ஆம் தேதி வெளியாகின. இதில் வழக்கத்துக்கு மாறாக 67 பேர் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் முதல் இடம் பெற்றனர். இளநிலை நீட் தேர்வுக்கு நீதிமன்றங்களின் அறிவு றுத்தலின்படி, பலருக்கு கருணை மதிபெண்கள் கொடுக்கப்பட்டது. மேலும் நீட் வினாத்தாள் கசிவானதாகவும் கூறப்படு கிறது. இதுதொடர்பாக சிபிஅய் உள்பட பல்வேறு விசாரணை குழுக்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து, 1,563 பேருக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்கள் ரத்து செய்யப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்தது. அதன்படி, நாடு முழுவதும் 7 மய்யங்களில் 1,563 பேருக்கு மறுதேர்வு ஜூன் 23ஆம் தேதி நடைபெற்றது.

மறுதேர்வில் 48 சதவிகித மாணவர்கள் கலந்து கொள்ளவில்லை, அதா வது 813 மாணவர்கள் மட்டுமே தேர்வில் கலந்து கொண்டதாகவும் 750 மாணவர்கள் கலந்து கொள்ளவில்லை எனவும் என தேர்வை நடத்திய தேசிய தேர்வு முகமை தெரிவித்தது. அதன்படி, இதில் சண்டிகர் மய்யத்தில் 2 தேர்வர்கள் தேர்வை எழுதவில்லை. ஏராளமான டாப்பர்கள் இடம்பெற்றதால் அதிகம் கெடுபிடிக்கு உள்ளாக்கப்பட்ட ஜஜ்ஜார் மய்யத்தில், 494 பேர் தேர்வு எழுத வேண்டி இருந்த நிலையில், 287 பேர் மட்டுமே தேர்வை எழுதினர். சத்தீஸ்கரில் 291 தேர்வர்களும் குஜராத்தில் ஒருவரும் மேகாலயாவில் 234 தேர்வர்களும் தேர்வை எழுதினர். இந்தத் தேர்வில் கலந்துகொள்ளாத 48 சதவீத மாணவர்கள், கருணை மதிப்பெண்கள் இல்லாமல் தாங்கள் பெற்ற மதிப்பெண்களையே இறுதியாகக் கொண்டுள்ளனர். இந்த நிலையில், ஏற்கெனவே அறிவித்தபடி, கருணை மதிப்பெண் வழங்கப்பட்டோருக்கு நடைபெற்ற நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. www.exams.nta.ac.in/NEET/ என்ற இணையதள முகவரியில் தேர்வர்கள் தங்களது முடிவுகளை அறியலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்து உள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *