கொடநாடு குற்றவாளிகளுக்கு வெளிநாட்டுத் தொலைபேசி அழைப்பா? விசாரணை தொடரும்! சட்டப் பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு

viduthalai
2 Min Read

சென்னை, ஜூலை 1- கொடநாடு வழக்கில் குற்றவாளிகளுக்கு வெளி நாட்டு அழைப்புகள் வந்துள்ளதால் பன்னாட்டு காவல்துறை உதவியுடன் விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

29.6.2024 அன்று காலை கூடிய தமிழ்நாடு சட்டப் பேரவையில், காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகள் தொடர்பான மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்திற்கு தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை ஆற்றினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது உரையைத் தொடங்கும்போது, நாற்பதுக்கு நாற்பது என்ற வெற்றி யைப் பெற்ற பெருமிதத்துடன் இந்தப் பேரவைக்கு வந்துள்ளோம்.

தமிழ்நாடு மக்கள், திமுக கூட்டணிக்கு செய்கூலி சேதாரம் இல்லாமல் முழுமையான வெற் றியை வழங்கினார்கள். ஆளும் திராவிட முன்னேற்றக் கட்சி அரசின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையையே இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. வாக் களித்த தமிழ்நாட்டு மக்களுக்கு வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழ் நாட்டில், மிக முக்கிய வழக்கான கொடநாடு வழக்கு குறித்து இந்த அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை இந்த அவைக்குத் தெரிவிப்பதை எனது கடமையாகக் கருதுகிறேன். கொடநாடு வழக்கில், இதுவரை 268 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, எதிரிகள் பயன்படுத்திய 8 அலைபேசிகள், 4 சிம் கார்டுகள் கோவை வட்டார தடய அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர் களிடம் இருந்து 8 ஆயிரம் பக்கம் கொண்ட ஆய்வறிக்கை பெறப் பட்டுள்ளது.

நிகழ்வு நடந்தபோது, எதிரிகள் சிலருக்கு வெளிநாட்டு அலைபேசி அழைப்புகள் வந்துள்ளது. எனவே, அதனை பன்னாட்டு காவல் துறையினரின் உதவியுடன் விசாரிக்க வேண்டும். மேலும், சிலருக்கு இதில் தொடர்பு இருக்கிறதா? என்ற கோணத்திலும் விசாரித்து வருகிறோம்.

சட்டம்-ஒழுங்கைக் காப்பதில் தமிழ்நாடு அரசு வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது. அனைத்து விழாக்களையும் அமைதியான முறையில் நடத்திக்காட்டி இருக் கிறோம். 18 ஆண்டுகளாக நின்று போயிருந்த சிவகங்கை கண்டதேவி கோயில் தேரோட்டத்தை எந்தப் பிரச்சினையும் இன்றி, சுமுகமாக நடத்திக் காட்டியிருக்கிறோம். அதற்காக, அந்தப் பகுதி மக்கள் என்னை நேரில் சந்தித்து நன்றி கூறினார்கள்

40 லட்சம் பேர் திரண்ட திரு வண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா, 2 லட்சம் பேர் பங்கெடுத்த மதுரை சித்திரைத் திருவிழா, 8 லட்சம் பேர் கூடிய திருச்செந்தூர் சூரசம்ஹாரம், 5 லட்சம் பேர் கூடிய பழனி தைப்பூசத் திருவிழா, 12 லட்சம் பேர் பங்கேற்ற குலசேகரப்பட்டினம் தசரா, 3 லட்சம் பேர் பங்கேற்ற வேளாங்கண்ணி தேவாலயக் கொடியேற்றத் திருவிழா, 20 ஆயிரம் பேர் பங்கேற்ற நாகூர் சந்தனக்கூடு திருவிழா உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் விழாக்கள் அனைத் தையும் அமைதியாக நடத்திக் காட்டியிருக்கிறோம்

இன்றைக்குத் தமிழ்நாடு வளர்ச்சி மிகு மாநிலமாக இருக்கிறது என்றால் அமைதி மிகு மாநிலமாக அது இருப்பதால்தான். வளர்ச்சி மிகு மாநிலமாக இருக்கிறது என்பதை இந்த மாமன்ற உறுப்பினர்கள் அறிவார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *