ஊழல் தலை விரித்து ஆடுகிறது பீகாரில் அடுத்தடுத்து அய்ந்து பாலங்கள் இடிந்து விழுந்தன : தேஜஸ்வி குற்றச்சாட்டு

Viduthalai
1 Min Read

மதுபானி, ஜூலை 1 பீகார் மாநிலம் மதுபானி மாவட்டத்தில் உள்ள மாதேபூர் நகரில் பூதாஹி ஆற்றின் மீது பாலம் ஒன்று கட்டப்பட்டு வந்தது. மதுபானியை சுபால் மாவட்டத்துடன் இணைக்கும் வகையில் 75 மீட்டர் நீளத்துக்கு பாலம் கட்டப்பட்டு வந்தது. கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் பீகார் அரசின் ஊரகப் பணிகள் துறையின் மேற்பார்வையில் பாலம் கட்டும் பணிகள் நடந்து வந்தன. இந்த நிலையில் இந்த பாலம் நேற்றுமுன்தினம் (29.6.2024) காலை திடீரென இடிந்து விழுந்தது. இதில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
கனமழையால் ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்து நரோட்டம் அதிகரித்ததால் பாலம் இடிந்து விழுந்ததாகவும், நீர்மட்டம் குறைந்த பிறகு பாலம் கட்டும் பணிகள் மீண்டும் தொடங்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பீகாரில் கடந்த 11 நாள்களில் நடந்த 5-ஆவது நிகழ்வு இதுவாகும்.
18-ஆம் தேதி பீகாரின் அராரியா மாவட்டத்தில் ரூ.12 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய பாலம் திறப்பு விழாவுக்கு முன்பே இடிந்து விழுந்தது.
22-ஆம் தேதி சிவான் மாவட்டத்தில் கண்டக் கால்வாயின் மீது 45 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சிறிய பாலம் இடிந்து விழுந்தது.
23-ஆம் தேதி, கிழக்கு சம்பாரண் மாவட்டத்தில் கட்டுமானப் பணிகள் நடந்து வந்த பாலம் இடிந்து விழுந்தது.
26-ஆம் தேதி கிஷன்கஞ்ச் மாவட்டத் தில் மதியா ஆற்றின் மீது கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்தது.
2 வாரங்களுக்குள் 5 பாலங்கள் அடுத்தடுத்து இடிந்து விழுந்த சம்பவம் பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே இந்த விவகாரத்தை சுட்டிக்காட்டி மாநில எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி, நிதிஷ் குமார் அரசை கடுமையாக சாடினார்.
இதுப்பற்றி அவர் கூறுகையில், ”நிதிஷ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் ஊழல் தலைவிரித்தாடுகிறது, இதன் விளைவாக மாநிலத்தில் அனைத்து கட்டுமானப் பணிகளிலும் தரமற்ற பொருட்களைப் பயன்படுத்துகின்றனர்” என்று அவர் குற்றம் சாட்டினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *