புதுடில்லி, ஜூன் 29 நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்ட டில்லி விமான நிலையத்தின் டெர்மினல் 1 மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார், 6 பேர் வரை காயமடைந்துள்ளனர். ஏற்கெனவே மோடி திறந்து வைத்த அடல் சேது பாலம், ராமன் கோயில் உள்ளிட்டவை சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது.
டில்லி விமான நிலையம் சேதம்
டில்லியில் பெய்த மழை பல இடங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சில பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டிருக்கிறது. மேற்கு டில்லியில் ஹரி நகர், பிகாஜி காமா பிளேஸ் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் வெள்ளமாக தேங்கி வீடுகளுக்குள் புகுந்திருக்கிறது. தாழ்வான பகுதிகளில் நிற்க வைக்கப்பட்டிருந்த கார்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன.
டில்லி பன்னாட்டு விமான நிலையத்தின் டெர்மினல் 1-இன் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்துள்ளது.
நேற்று (28.6.2024) அதிகாலை 5.30 மணிக்கு இந்த விபத்து நடந்திருக்கிறது. பயணிகளை அழைத்து செல்வதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் மீது இந்த கூரை விழுந்ததால் கார்கள் அப்பளம் போல நொறுங்கியுள்ளன. சம்பவ இடத்தில் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 6 பேர் காயமடைந்துள்ளனர்.
டில்லி விமான நிலையத்தின் டெர்மினல் 1 சமீபத்தில் விரிவாக்கப்பட்டிருந்தது. இதனை கடந்த மார்ச் மாதம் 10ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்திருந்தார். இப்படி இருக்கையில் தற்போது இதன் மேற்கூரை இடிந்து விழுந்திருக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்த பல திட்டப் பணிகள் இதேபோல சேதமடைந்திருக்கின்றன என எதிர்க்கட்சியினர் சமூக வலைதளத்தில் விமர்சித்து வருகின்றனர். ஓரிரு நாள்களுக்கு முன்னர் ராமன் கோயிலில் மழைநீர் ஒழுகிய விவகாரம் பெரியதாக வெடித்திருந்தது.
மக்களவைத் தேர்தலின்போது ராமன் கோயில் பரபரப்பாக பேசப்பட்டது.
ராமருக்கு கோயில் கட்டுவது என்பது பல நூறு ஆண்டுக்கால கனவு என்றும், இந்த கனவு பாஜக ஆட்சியில் நிறைவேறியுள்ளது என்றும் அக்கட்சியின் நிர்வாகிகள் ஊர் ஊராக பிரச்சாரம் மேற்கொண்டிருந்தனர். குடிசையில் இருந்த ராமரை கோபுரத்திற்கு கொண்டு வந்தது பாஜகதான் என்றும், ராமர் கோயிலை கட்டியதன் மூலம் பொற்காலம் தொடங்கிவிட்டதாக குழந்தை ராமரே கூறுவது போல் உணர்ந்தேன்’ என்றும் பிரதமர் மோடி கூறியிருந்தார்.
இப்படியாக மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக ராமன் கோயில் திறந்து வைக்கப்பட்டது. கோயில் முழுமையாக கட்டி முடிக்கப்படவில்லை என்றாலும் கூட, கோயில் திறந்து வைக்கப்பட்டது அரசியல் ஆதாயத்திற்காகதான் என்று பல்வேறு தரப்பினரும் விமர்சித்தனர்.
கோயில் கட்டுவதில் அலட்சியம் காட்டப்பட்டதாக குற்றம்சாட்டிய அவர்கள், மழைநீர் தேங்காதவாறு உடனடியாக நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். இந்த குற்றச்சாட்டையடுத்து கோயில் கட்டுமானக் குழுத் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா கோயிலுக்கு வந்து, மழைநீர் கசியும் பகுதிகளை பார்வையிட்டார். பின்னர் கசிவை சரி செய்யும்படி கட்டுமான குழுவுக்கு வலியுறுத்தினார்.
சேது பாலத்தில் விரிசல்
அதேபோல கடந்த 22ஆம் தேதி அடல் சேது பாலத்தில் விரிசல் ஏற்பட்டிருந்ததும் விமர்சனங்களை கிளப்பியிருந்தது. நாட்டிலேயே கடல்மீது கட்டப்பட்ட மிக நீண்ட பாலம் என பெருமையோடு, கடந்த ஜனவரி மாதம் பிரதமர் நரேந்திர மோடியால் இந்த பாலம் திறந்து வைக்கப்பட்டது. ஆனால் முழுதாக 6 மாதம் கூட நிறைவடையாத நிலையில் பாலத்தில் விரிசல் ஏற்பட்டிருந்ததால் பயணிகள் அதிருப்பதியடைந்தனர்.
குடிநீர் முறையாக கிடைக்காததால் டில்லி மக்கள் கடும் நெருக்கடியை சந்தித்தனர். இந்த நிலையில் பெய்த மழை காரணமாக டில்லியில் பல்வேறு இடங்களில் மழைநீர் வெள்ளம் போல தேங்கியிருக்கிறது. இதனால் சில பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டிருக்கிறது. மேற்கு டில்லியில் ஹரி நகர், பிகாஜி காமா பிளேஸ் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் வெள்ளமாக தேங்கி வீடுகளுக்குள் புகுந்திருக்கிறது. தாழ்வான பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன.
மொத்தமாக சராசரியாக 5.2 மி.மீ அளவுக்கு மழை பொழிந்திருக்கிறது. லோதி காலனியில் 9.6 மி.மீ, ரிட்ஜ் பகுதியில் 6.2 மி.மீ என பல பகுதிகளில் வேறுபட்ட அளவில் மழை பெய்திருக்கிறது. மழை காரணமாக வெப்பநிலை 4 டிகிரி வரை குறைந்திருக்கிறது. இந்த மழை மேலும் 4 நாள்கள் வரை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மய்யம் எச்சரித்திருக்கிறது.
ஜபல்பூர்
இதே போல் போபால், ஜபல்பூர் மற்றும் அயோத்தி விமான நிலையங்களும் மழையால் இடிந்துவிழுந்த அவலம் நிகழ்ந்துள்ளது. ஜபல்பூர் விமான நிலையத்தில் டில்லி செல்ல வந்த வருமானவரித்துறை ஆணையர் கார் மீது மேற்கூரை இடித்து விழுந்தது, இதில் ஆணையரை அழைத்துவந்த ஓட்டுநர் காயமடைந்துள்ளார்.
லக்னோ விமான நிலையத்தின்
மேல் மாடியும் உடைந்தது
லக்னோ விமான நிலையத்தின் மேல் பகுதியிலும் உடைப்பு ஏற்பட்டு மழைநீர் உள்ளே வழிவதாக அங்குள்ள பயணிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே போபால், டில்லி அயோத்தியா மற்றும் ஜபல்பூர் விமான நிலையங்கள் சரிந்து விழுந்த நிலையில் தற்போது உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோ விமான நிலையமும் மழைநீர் பாதிப்பிற்குள்ளாகி உள்ளது.