டில்லிக்கு குடிநீர் வழங்க மறுக்கும் பிஜேபி ஆளும் அரியானா டில்லி அமைச்சர் 2ஆம் நாளாக பட்டினிப் போராட்டம்

Viduthalai
1 Min Read

புதுடில்லி, ஜூன் 23 டில்லி நகரில் கடுமையான குடிநீர்தட்டுப்பாடு நிலவி வருகிறது. அண்டை மாநிலமான அரியானா குறிப்பிட்ட அளவிலான தண்ணீரை டில்லிக்கு வழங்காததால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக டில்லி மாநில அரசு புகார் தெரிவித்துள்ளது.
இந்நிலையில்தான் நேற்று முன்தினம் டில்லி மாநில அமைச்சர் ஆதிஷி, அரியாணா அரசு தண்ணீர் திறந்து விடக்கோரி காலைவரையற்ற பட்டினிப் போராட்டத்தை தொடங்கினார். இந்நிலையில் அந்த பட்டினிப் போராட்டம் நேற்று 2-வது நாளை எட்டியுள்ளது. டில்லியில் தண்ணீர் தட்டுப்பாடு குறித்து அமைச்சர் ஆதிஷி கூறியதாவது:

இது என்னுடைய 2-வது உண்ணாவிரத நாள். டில்லியில் மிகவும் மோசமான வகையில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. டில்லி அண்டை மாநிலங்களில் இருந்துதான் தண்ணீரைப் பெற்று வருகிறது. டில்லி மாநிலம் 1005 எம்ஜிடி (ஒரு நாளைக்கு மில்லியன் கலோன்ஸ்) பெற்று மக்களுக்குத் தேவையான குடிநீரை வழங்கி வருகிறது.

அரியானா மாநிலம் இதில் 613 எம்ஜிடிதான் வழங்க வேண்டும். சில வாரங்களாக அரியானா மாநிலம், டில்லிக்கு 513 எம்ஜிடி அளவு தண்ணீரை மட்டுமே வழங்கி வருகிறது. இதனால் டில்லியில் வசிக்கும் 28 லட்சம் மக்கள் தண்ணீர் பெற முடியாமல் தவிக்கின்றனர். தண்ணீரைப் பெற நான் அனைத்து வகையிலும் முயற்சி மேற்கொண்டேன். ஆனால் அரியானா அரசு தண்ணீர் வழங்க மறுத்துவிட்டது. இந்நிலையில், பட்டினிப் போராட்டத்தை தொடங்குவதை தவிர எனக்கு வேறு வழியில்லை.எனக்கு, டில்லி குடிநீர் வாரியத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அப்போது குடிநீர் பிரச்சினை இன்னும் தொடர்வதாக தெரிவித்தனர். நேற்று 110 எம்ஜிடி குறைவாக அரியானா சப்ளை செய்தது. 28 லட்சம் மக்கள் தண்ணீர் பெறும் வகையில் அரியானா தண்ணீர் திறந்து விடும்வரை என்னுடைய பட்டினிப் போராட்டம் தொடரும். இவ்வாறு ஆதிஷி தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *