பாட்னா, ஜூன் 23– பீகார் மாநிலம் சிவான் பகுதியில் பாலம் திடீரென இடிந்து விழுந்தது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. சில நாள்களுக்கு முன் திறப்பு விழாவிற்கு முன்னதாக பாலம் ஒன்று இடிந்து விழுந்த நிலையில் அடுத்த நிகழ்வு நடந்துள்ளது.
பீகார் மாநிலம் அராரியா மாவட்டத்தில் பாலம் இடிந்து விழுந்ததை அடுத்து, தற்போது மற்றொரு பாலம் இடிந்து விழும் செய்தி வெளியாகியுள்ளது. இம்முறை சிவான் மாகாணத்தின் மகராஜ்கஞ்ச் தொகுதியின் படேதா கிராமத்தில் கால்வாயின் நடுவில் கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்துள்ளது.
பாலம் இடிந்து விழுந்ததால் பல கிராமங்களுடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. பாலம் இடிந்து விழுந்ததற்கு மண் அரிப்பு தான் காரணம் என கூறப்படுகிறது. பாலம் இடிந்து விழும் சத்தம் வெகு தொலைவில் கேட்டதால் மக்கள் பீதியடைந்தனர். பாலம் உடைந்து விழும் காட்சிப் பதிவும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இந்த பாலம் மிகவும் பழைமையானது என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். சமீபத்தில், நிர்வாகம் கால்வாயை சுத்தம் செய்து, அதன் போது கால்வாயில் இருந்து மண் எடுக்கப்பட்டு அணையில் கொட்டப்பட்டது. மண் தோண்டப்பட்டதால் பாலத்தின் தூண்கள் வலுவிழந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பே, அராரியா மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்ட பக்ரா பாலம் அதன் திறப்பு விழாவுக்கு முன்பே இடிந்து விழுந்தது. இதையடுத்து அரசு கடும் நடவடிக்கை எடுத்து பல பொறியாளர்களை பணியிடை நீக்கம் செய்தது.