கல்வித்துறையை பா.ஜ.கவும் – ஆர்.எஸ்.எஸ்-ம் அழித்து வருகின்றன! – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

Viduthalai
1 Min Read

புதுடில்லி, ஜூன் 23 நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், UGC-NET,CUET தேர்வுகளிலும் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி அத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கல்வித் துறையை பா.ஜ.கவும், ஆர்.எஸ்.எஸ்-ம் அழித்து வருகின்றன என மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து டில்லியில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, ”ரஷ்யா – உக்ரைன், இஸ்ரேல் – காஸா நாடுகளுக்கு இடையிலான போரினை தலையிட்டு தடுத்து நிறுத்தியதாக கூறும் மோடியால், ஏன் நீட் வினாத்தாள் கசிவை தடுத்து நிறுத்த முடியவில்லை. நீட் தேர்வு குளறுபடிகள் பற்றி வாய் திறக்காமல் இருப்பது ஏன்?.

UGC-NET,CUET தேர்வை ரத்து செய்துள்ள அரசு நீட் தேர்வை என்ன செய்யப்போகிறது என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது. நீட் தேர்வில் ஊழல் மய்யங்களாக பா.ஜ.க ஆளும் மாநிலங்கள் திகழ்கின்றன. நாடு முழுவதும் நீட் வினாத்தாள் கசிவு பரவியுள்ளது.
பா.ஜ.கவும், ஆர்.எஸ்.எஸ்-ம் கல்வித்துறையை முழுமையாக கைப்பற்றியதால்தான் நீட் மோசடிகள் நடைபெறுகிறது. இப்பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்.

பல்கலைக் கழகங்களில் நியமிக்கப்படும் , எந்த துணை வேந்தரும் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவதில்லை. குறிப்பிட்ட அமைப்பை (பா.ஜ.க) சார்ந்தவர்களா என்று பார்த்துக் தான் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதனால் கல்வி அமைப்பே சீர்கெட்டுள்ளது. இந்தியாவின் கல்வி அமைப்பை ஒட்டுமொத்தமாக மாற்றியமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பிரதமருக்கு தற்போது மக்களவைத் தலைவர் யார் என்பதுதான் பிரச்சினை. நீட் உள்ளிட்ட தேர்வுகள் அவருக்கு பிரச்சினை இல்லை. பிரதமர் மன அழுத்தத்தில் உள்ளார். அவரால் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை. ஒரு பக்கம் ஆர்.எஸ்.எஸ் அழுத்தம், மற்றொரு பக்கம் பா.ஜ.கவில் நிலவும் பிரச்சினைகள் காரணமாக அவரால் அரசு விவகாரங்களில் கவனம் செலுத்த முடியவில்லை” என இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *