புதுடில்லி, ஜூன் 23 நீட் உள்ளிட்ட பொதுத்தேர்வுகளில் முறை கேடுகள் நடந்திருக்கும் நிலையில், இத்தகைய மோசடிகளைத் தடுக்கும் வகையில் ஒன்றிய அரசு ‘பொதுத்தேர்வுகள் (முறை கேடுகள் தடுத்தல்) சட்டம், 2024′ என்ற சட்டம் கொண்டு வந்துள்ளது.
இந்தச் சட்டம் வெறும் கண்துடைப்பு என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் தனது ‘எக்ஸ்’ தளத்தில், ‘‘கடந்த 7 ஆண்டுகளில் 70 வினாத்தாள்கள் கசிந்து உள்ளன. ஆனால் பாரதீய ஜனதா ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை? நீட் தேர்வு முறைகேட்டில் பாரதீய ஜனதா எவ்வளவு முயற்சிகள் செய்தாலும், ஊழல் மற்றும் கல்வி மாபியாவை ஊக்குவிக்கும் குற்றச்சாட்டில் இருந்து தப்ப முடியாது” என குறிப்பிட்டு இருந்தார்.
வினாத்தாள் கசிவுக்கு எதிரான சட்டம் கடந்த 13.2.2024 அன்றே குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற்றிருந்தும்21.6.2024 இரவுதான் அறிவிக்கப்பட்டு இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ள கார்கே, இந்த விவகாரத்தில் சட்டம் அமல்படுத்தப்பட்டது என கல்வி அமைச்சர் ஏன் பொய் கூறினார்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தச் சட்டத்துக்கான விதிமுறைகளை இன்னும் சட்ட அமைச்சகம் வகுக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்