டில்லியில் நிதியமைச்சர்கள் கூட்டம் : தமிழ்நாட்டில் நடந்த இரு பெரும் இயற்கை பேரிடர்களுக்கு ஒன்றிய அரசு போதிய நிவாரண நிதி தராதது ஏன்? – அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி

Viduthalai
1 Min Read

புதுடில்லி, ஜூன் 23 இரு பெரும் பேரிடர்களை சந்தித்த தமிழ்நாட்டுக்கு வெறும் ரூ276 கோடி மட்டுமே நிதி வழங்கியது தமிழ்நாட்டுக்கு இழைக்கப்பட்ட மிகப் பெரும் அநீதி என டில்லியில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கடுமையாக விமர்சித்தார்.

டில்லியில் ஒன்றிய பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டத்தை நிதி அமைச்சர் நிர்மலா சீதா ராமன் நேற்று (22.6.2024) கூட்டி யிருந்தார். இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்று பேசியதாவது:

சென்ற ஆண்டு அடுத்தடுத்து இரண்டு பெரும் இயற்கைப் பேரிடர்களை தமிழ்நாடு எதிர்கொள்ள நேரிட்டதால், மாநில அரசின் நிதிநிலைமை மிகமோசமாக பாதிக்கப்பட்டது, தமிழ்நாட்டில் நேரிட்ட இவ்விரு பேரிடர்கள் ஏற்படுத்திய பாதிப்பின் தாக்கத்தை விவ ரித்து விரிவான இரண்டு அறிக்கைகளை அளித்து, பேரிடர் நிவாரண நிதியாக 37,906 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசு கோரியிருந்தது.

ஆனால் ஒன்றிய அரசு மிகக் குறைவாக 276 கோடி ரூபாயை மட்டுமே விடுவித்துள்ளது. பேரிடர்களின் அளவையும் உள்கட்டமைப்பு மற்றும் மக்களின் வாழ்வாதாரங்களுக்கு ஏற்பட்டுள்ள மாபெரும் சேதத்தையும் கருத்தில் கொள்கையில், இந்த இழப்பீட்டுத்தொகை தேவையைவிட மிகக் குறை வானது மட்டுமின்றி இது தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்ட பெரும் அநீதியாகும்.

தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து விடுவிக்கப்படும் நிதி என்பது, மாநிலங்களுக்குச் அளிக்க வேண்டிய உரிய நியாயமான தொகையாகும். எனவே பேரிடர் பாதித்த மாநிலங்களுக்கு கூடுதலாக போதுமான நிதியை ஒதுக்கீடு செய்யுமாறு ஒன்றிய அரசை நான் கேட்டுக்கொள்கிறேன்.
வரவிருக்கும் வரவு-செலவுத் திட்டத்தில் தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேவை யான சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு, தமிழ்நாடு அரசுக்கு 3,000 கோடி ரூபாயை ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு உரை யாற்றினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *